torsdag den 18. december 2008

பங்குச் சந்தையும் குரங்கு கதையும்

அமெரிக்காவின் பங்குச் சந்தையில் நிதி மூலதன கும்பல்கள் கொள்ளையடித்தது தான், இவ்வளவு பெரிய வீழ்ச்சியை அமெரிக்கா கண்டிருக்கிறது.

இந்த ஊழலைப் புரிந்து கொள்ள பங்குச் சந்தையை பற்றிய சில அடிப்படைகள் நமக்கு புரிந்து இருப்பது அவசியம். கீழே வருகிற குட்டிக்கதை பங்குச் சந்தையின் சூதாட்டத்தை கொஞ்சம் புரிய வைக்க முயற்சிக்கிறது.



2000 புள்ளிகள் சரிந்தன... சதுரங்கள் சிரித்தன...என பங்குச் சந்தையைப் பற்றி வரும் தகவல்கள் எதுவும் என் மர மண்டைக்கு எட்டியதேயில்லை. வாரச் சந்தையையே புரிந்து கொள்ளாத எனக்கு பங்குச் சந்தையைப் பற்றி எப்படிப் புரியப் போகிறது என்றிருந்த வேளையில்... அது ஒன்றும் சிரமமில்லை என்று ஒரு கதை.

தானுண்டு தன் வேலை உண்டு என்று இருந்த கிராம மக்களைப் பார்ப்பதற்காக நகரத்திலிருந்து ஒருவன் வந்து சேர்ந்தான். கிராம மக்கள் அனைவரையும் ஒரே இடத்தில் கூட்டிய அவன்... தான் குரங்கு வாங்க வந்திருப்பதாகவும்... கிராம மக்கள் குரங்கு பிடித்துக் கொடுத்தால் அதற்கு 10 ரூபாய் கொடுப்பதாகவும் அறிவித்தான்.

இதை நம்பிய மக்களும் இருக்கிற வேலைகளை விட்டுவிட்டு குரங்கு பிடிக்கக் கிளம்பினார்கள்.

கொஞ்ச நாளிலேயே அந்தப் பகுதியில் குரங்குகள் குறைந்து போக...

இந்த முறை ஒரு குரங்கிற்கு 20 ரூபாய் தருகிறேன் என்று அறிவித்தான் நகரத்திலிருந்து வந்தவன். சில நூறு குரங்குகள் பிடித்து வந்து அவனிடம் கொடுத்துவிட்டு பணத்தை வாங்கிச் சென்றனர் கிராம மக்கள்.

இதற்கிடையில் அக்கம் பக்கத்திலுள்ள குரங்குகளும் குறைந்து போகவே... குரங்குபிடி தொழிலில் தேக்கம் வந்து சேர்ந்தது.

குரங்குப் பஞ்சம் தலைவிரித்தாடிய நேரமாய்ப் பார்த்து...

நன்றாகக் கேளுங்கள்... இந்த முறை நீங்கள் கொடுக்கும் ஒவ்வொரு குரங்குக்கும் 50 ரூபாய் தரப் போகிறேன். அதன்பிறகு நீங்கள்தான் பெரிய பணக்காரர்கள் என்று அறிவித்துவிட்டு நான் வெளியூர் செல்வதால் நான் வரும்வரை எனக்கு பதிலாக இவர் வியாபாரத்தைப் பார்த்துக் கொள்வார் என்று இன்னொரு ஆளையும் அறிமுகப்படுத்தி வைத்து விட்டு கிளம்பினான் நகரத்துவாசி. இம்முறை குரங்குகள் பிடிபடுவது லேசுப்பட்ட விஷயமாக இருக்கவில்லை. தேடிச் சலித்த மக்கள் எதுவும் பிடிபடாது விரக்தியுடன் குரங்குபிடி ஆபீசை நோக்கி சோகமாக வந்தனர். நிலைமையைப் புரிந்து கொண்ட அந்த புதிய ஆள் `இதற்கா இவ்வளவு கவலை....? இதோ இந்தக் கூண்டில் இருக்கும் குரங்குகளை நான் உங்களுக்கு வெறும் 35 ரூபாய்க்குத் தருகிறேன்...இதையே நீங்கள் நாளை அந்த ஆள் நகரத்திலிருந்து வந்தவுடன் 50 ரூபாய்க்கு சத்தமில்லாமல் விற்று விட்டு அள்ளிக் கொள்ளுங்கள் உங்கள் பணத்தை' என்றான்.

அதைக் கேட்டவுடன்... அட...பணம் சம்பாதிக்க இவ்வளவு சுலபமான வழியா? குரங்கைத் தேடி அலையாமலேயே இப்படிப்பட்ட வாய்ப்பு கிடைத்திருக்கிறதே என்கிற மகிழ்ச்சியில்... கையில் இருந்த பணம்... சேமித்து வைத்திருந்த பணம்... என எல்லாவற்றையும் கொண்டு வந்து கொடுத்து விட்டு குரங்குகளை ஓட்டிச் சென்றனர்.

மறுநாள் காலை குரங்குகளைக் கொடுத்துவிட்டு பணத்தை மூட்டை கட்டிக் கொண்டு வரலாம் என்று கிராமத்தினர் படையெடுத்துப் போக... அங்கே...

குரங்குபிடி ஆபீசில் பெரிய திண்டுக்கல் பூட்டு ஒன்று அவர்களை வரவேற்றுக் கொண்டிருந்தது. அதன் பக்கத்திலேயே லேமினேட் செய்து மாட்டப்பட்டிருந்தது ஒரு கீதாசாரம்: `நேற்று உன்னிடம் இருந்தது இன்று என்னிடம் இருக்கிறது. நாளை அது யாரிடமோ?' என்று.

இப்ப அந்த ஊருல காசுக்குப் பஞ்சம் இருக்கோ இல்லியோ...

ஆனா...

குரங்குக்கு மட்டும் பஞ்சமே இல்லை.

எங்கும் குரங்கு. எதிலும் குரங்கு.

- பாமரன்

நன்றி - குருத்து

lørdag den 15. november 2008

மதம் என்ற ஒன்று தேவைதானா ?

மதத்தின் பெயரால் நடக்கும் கலவரங்கள் சண்டைகள், போராட்டங்களை.. எல்லாம்
பார்க்கும்போது 'மதம் என்ற ஒன்று தேவைதானா ?' என்ற கேள்வி எழுகிறது.

விஞ்ஞானம் வளர்வதால்தான் நியூக்ளியர் பாம், பயலாஜிகல் பாம் என்று
நாசகார ஆயுதங்கள் வருகின்றன!

வீடு இருட்டாக இருக்கிறது, எரிச்சலுடன் கதவைத் திறந்து கொண்டு
வேகமாக உள்ளே போனால், நாற்காலியும், மேஜையும் காலை இடறிவிடுகின்றன!
உடனே நிதானம் இழந்து கோபப்பட்டு மேஜை, நாற்காலிகளையெல்லாம் எடுத்து
வெளியே எறிவதால் பிரயோஜனம் இல்லை! நாம் இடறி விழுந்ததற்குக் காரணம்
வெளிச்சமின்மை! ஆகையால் வெளியே போக வேண்டியது மேஜை அல்ல,
விளக்கை ஏற்றினால் இருட்டு போய், பிரச்னைகளும் தன்னால் காணாமல் போய்விடும்.

கலவரத்தையும் குழப்பத்தையும் உண்டுபண்ணப் பிறந்தது அல்ல மதம்!
அமைதியைக் கொடுப்பதற்காக உருவாக்கப்பட்டது அது! மதம், மனிதர்களைப்
பிரிப்பதற்காக உண்டாக்கப்படவில்லை! மனிதர்களை ஒன்று படுத்துவதற்காக
ஏற்படுத்தப்பட்டதுதான் அது!

இந்த இடத்தில் மகாத்மா காந்தியின் வாழ்கையில் நடந்த ஓர் உண்மை சம்பவம்
பற்றி அவசியம் சொல்ல வேண்டும்.

வங்காளத்தில் இந்துக்களும் முஸ்லிம்களும் ஒருவரை ஒருவர் வெட்டி, வீதிகளில்
இரத்த ஆறு ஓடவிட்டுக் கொண்டிருந்த சமயம்.. நடுத்தர வயது கொண்ட ஒருவர்
மகாத்மா காலிலே விழுந்து, 'நான் பாவி! கொலை செய்துவிட்டேன் ! நிச்சயம்
நான் நரகத்துக்குதான் போவேன்!' என்று கதறி அழ ஆரம்பித்தார். விஷயம் இதுதான்
மதக்கலவரத்தில் யாரோ இவரின் மகனை கொன்றுவிட்டார்கள், அதனால் இவரும்
பழி வாங்க ஆத்திரத்தில் ஒரு முஸ்லிம் சிறுவனை வெட்டித் தள்ளினார். பிறகு தான்,
தான் செய்தது எத்தனை பெரிய பாவம் என்று எண்ணி, மகாத்மாவிடம் வந்தார்.
இப்பவும் எதுவும் கெடவில்லை, நீ சொர்க்கத்துக்குப் போக ஒரு சந்தர்ப்பம்
இருக்கிறது, என்றார் காந்திஜி

இந்த மதக்கலவரத்தில் பெற்றோரை இழந்த அநாதையாகிவிட்ட ஒரு முஸ்லிம்
குழந்தையைத் தத்து எடுத்து வளர்த்து பெரிய ஆள் ஆக்கு, அதுவே நீ செய்த
பாவத்துக்கு பரிகாரம் என்றார்.

இதிலிருந்து நாம் ஒன்றை சரியாக புரிந்து கொள்ள வேண்டும். நாம் வேற்று
மதத்தினரை கொலை செய்து விட்டு ஒரு குழந்தையை தத்து எடுத்து வளர்த்தால்
எல்லாம் சரியாகிவிடும் என்று தப்பாக அர்த்தம் கொள்ள கூடாது.

ஆனால், தான் செய்த தவறுக்கு உண்மையாக வருந்தி, ஒருவன் மனம்
திருந்துவானேயானால் அவர் எல்லா மதத்தினரையும் உள்ளன்போடு நேசிப்பான்.
எந்த மதமானாலும் அவை 'அயலானுக்கும் அன்பு காட்டு' என்பதை வெவ்வேறு
வார்த்தைகளில் சொல்கிறது. அதனால் 'எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் சரி, சக மனிதர்களை நான் நேசிப்பேன்! அவர்களிடத்தில் அன்பு காட்டுவேன்!' இப்படி ஒரு சபதத்தை நாம் ஒவ்வொருவரும் ஏற்றுக் கொண்டால் போதும்.. மதத்தின் பெயரால் மட்டும் இல்லை, ஜாதி, இனம் என்று எந்த காரணம் கொண்டும் பிரச்னைகள் தலைதூக்காது.

சுவாமி சுகபோதானந்தா தொகுப்பிலிருந்து.

lørdag den 4. oktober 2008

நமக்கிருப்பது எழுத்து : லாவண்யா

நமக்குத் தெரியும்
ஒரு பொம்மலாட்டத்தில்
நாம் மன்னர்களென்று.
நமக்குத் தெரியும்
உண்மையில் நாம்
சம்பள அடிமைகளென்று
நமக்குத் தெரியும்
மன்னர்கள், குறுநில மன்னர்கள்
பெருநில மன்னர்கள், மாமன்னர்கள்
பெரு மாமன்னர்களின் பிரஜைகள் நாமென்று.

நமக்குத் தெரியும்
மாமன்னராகும் கனவு
பலருக்குமிருக்கிறதென்று
நமக்குத் தெரியும்
அரசன் வசமும் அவன்
எதிரிகள் வசமும்
ஆளும் அம்பும் உண்டென்று.

நமக்குத் தெரியும்
பசுக்களை, இளங்கன்றுகளை
காளைகளை, பறவைகளை, மரங்களை
சாய்த்தது யாரென்று.

நமக்குத் தெரியும்
கண்ணால் கண்டதும்
காதால் கேட்டதும்
தீர விசாரித்ததும் மெய்யென்று.

நமக்குத் தெரியும்
நமதடுத்த கணம்
கத்தியின் கூராய்
அரிவாளின் மின்னலாய்
துப்பாக்கியின் உறுமலாய் வருமென்று.

நமக்குத் தெரியும் நாம்
கண்களை, காதுகளை வாயை
பொத்திக்கொண்டிருக்க வேண்டுமென்று.

நமக்குத் தெரியும்
நமக்கிருப்பது ஒரே உயிர்
அதை எளிதில் விடக்கூடாதென்று.

நன்றி - நவீனவிருட்சம்

lørdag den 6. september 2008

கடவுள் என்னிடம் கரைச்சல் செய்த பொழுதொன்றில் - சிறுகதை - மோகன்தாஸ்

"என் வயசு என்னயிருக்கும் சொல்லுங்க பார்ப்போம்!"

எனக்கு சாமியார்களின் மீது நம்பிக்கையே கிடையாது, பொய் சொல்கிறவர்கள், மக்களை ஏமாற்றுபவர்கள் என்பதைத் தவிர அவர்களின் மேல் அவ்வளவு பெரிய அபிப்ராயம் ஒன்றும் கிடையாது. ஒருநாள் மாலை நேர வழக்கமான நடைப்பயிற்சியின் பொழுது உங்கள் கையைக் காண்பியுங்கள் உங்களைப் பற்றிச் சொல்கிறேன் என்று கேட்ட சாமியாரின் மூக்கை உடைப்பதற்காகவாவது கையை நீட்டுவது என்று தீர்மானித்தேன். அந்த ஆளை அப்பொழுது முதன் முதலாக அந்தப் பகுதியில் பார்க்கிறேன். முதல் கேள்வியிலேயே ஆளைக் காலி செய்வதற்காக நான் உபயோகித்த ஆயுதம் தான் என் முதல் கேள்வி. என்னைப் பார்த்து என் வயதை ஊகிப்பதென்பது சாத்தியமேயில்லை என்று எனக்குத் தெரியும்.

மர்மமாகச் சிரித்தவர், "சரி..." என்றபடி மேலும் கீழும் என்னைப் ஒருமுறை பார்த்துவிட்டு, "உங்க வயசு 24 தானே!" உண்மையில் நான் அசந்தே போய்விட்டேன். சாத்தியமேயில்லை என்னைப் பார்த்து வயதைச் சரியாகச் சொன்னவர் இதுவரை யாருமேயில்லை. என் ஆச்சர்யம் அவரது முகத்தில் பிரதிபலித்தது.

தொடர்ந்து என் கைகளை ஊன்றிக்கவனித்தவர்,

"உனக்கு ஒரே ஒரு சகோதரி மட்டும் இருக்காங்க இல்ல, உங்க அம்மா அப்பா இரண்டு பேரும் ஆசிரியர்கள் இல்லையா?"

கிழிஞ்சது அடச்சே நான் காண்பது கனவு மாதிரியிருக்கே ஒருவேளை மாஜிக்கல் ரியலிஸம் பத்தி யோசிச்சு யோசிச்சு இப்ப கனவிலேயே வந்துவிட்டதோ என்று நினைக்கும் பொழுது உணர்வின் வழியில் இல்லை இது கனவில்லை கண்முன்னே இருக்கும் நபர் உண்மை நான் அவருடன் பேசிக்கொண்டிருப்பது உண்மை என்றும் உணர்ந்தேன்.

"கனவில்லை நண்பனே நீ காண்பதும் கனவில்லை நான் சொல்வதும் மாயமில்லை!" தாடியை நீவிவிட்டுக்கொண்டே அந்த நபர் சிரிக்க எனக்கு உள்ளே பகபகவென்று எரிந்தது. இது சாத்தியமாயிருக்க நியாயமில்லை அந்த நபர் இதையும் ஏதோ அதிர்ஷ்டத்தில் சொல்லியதாகத்தான் நான் நினைத்தேன். அவ்வளவு எளிதாய் என் தத்துவ நம்பிக்கைகளின் மீது கட்டப்பட்ட கோட்டையை தகர்த்துவிட முடியவில்லை. ஜோசியம் ஜாதகம் கைரேகை பார்ப்பது எல்லாம் மூடநம்பிக்கை தான் அது உண்மையாகயிருக்க வாய்ப்பேயில்லை என்று எனக்கு நானே ஆறுதல் சொல்லிக்கொண்டேன்.

"உன் கைரேகை படி இருபது வருஷம் ரொம்ப கஷ்டப்பட்டிருப்ப, உன் இருபத்தொன்னாவது பிறந்தநாளின் பொழுது நீ வாழ்க்கையில் எதையெதையெல்லாம் அடையணும்னு நினைச்சிருந்தாயோ அதெல்லாம் உனக்கு கிடைத்திருக்கும். அதற்கு அடுத்த மூன்று ஆண்டுகளிலும் உனக்கு இறக்கமேயில்லாமல் ஏற்றம் மட்டுமே இருந்திருக்கும். நீ இன்வெஸ்ட் செய்த இடங்களில் எல்லாம் உனக்கு லாபமே கிடைத்திருக்கும், ஆகமொத்தத்தில் கடைசி பத்துவருடங்களில் நீ அனுபவித்த கஷ்டங்களுக்கு எல்லாம் தீர்வு கிடைத்திருக்கும்."

சொல்லிவிட்டு என் கண்களையே பார்த்துக்கொண்டிருந்தார், என்னவோ என் கண்களில் இருந்து அடுத்த உண்மைகளைக் கொண்டுவரப்போகிறவராய். என் காதுகளை என்னால் நம்ப முடியவில்லை, நான் நினைத்தேன் என் நண்பர்கள் தான் என்னுடன் விளையாடிக்கொண்டிருக்கிறார்கள் என்று. என் நாத்தீக வாதத்தை எதிர்க்கமுடியாமல் என் நண்பர்கள் பர்ஸனல் இன்ஃபர்மேஷன்களைக் கொடுத்து இந்த சாமியார்களைச் செட்டப் செய்திருப்பார்கள் என்று. இதுவரை அந்த சாமியார் சொன்ன விஷயங்கள் முழுவதுமே என்னைப் பற்றி கொஞ்சம் நன்றாய்த் தெரிந்த நபர்கள் கொடுத்திருக்கக்கூடியவை தான். என் சந்தேகம் வழுக்க நான் கேள்வியை கொஞ்சம் கடினமாக்கினேன்.

"சரி இந்தக் கேள்விக்கு பதில் சொல்லுங்கள், என் வாழ்க்கையிலேயே ஒருதடவை தான் நான் காதலித்திருக்கிறேன். அது எப்ப? என் காதல் என்னாச்சு? யார் அந்த பொண்ணு?"

பதின்மைத்தின் தொடக்கத்தில் நான் செய்த காதலைப் பற்றி தெரிந்தவர்கள் ரொம்பவும் குறைவே, என் குடும்பத்தினர் தவிர்த்து ஒன்றிரண்டு பள்ளி நண்பர்களுக்கு மட்டுமே தெரியும். பார்ப்போம் இந்த போலிச் சாமியார் இதற்கு என்ன பதில் சொல்கிறார் என்று நினைத்தேன்.

"தம்பி உன் கண்களைக் கூட என்னால் படிக்கமுடியும் நீ உன் நண்பர்களைச் சந்தேகிக்கிறாய் அப்படியே என் திறமையையும் சரி ஒரு நிமிடம் பொறு!" என் கைகளை ஊன்றிக் கவனித்தவர், ஒரு நோட்டுப் புத்தகத்தை எடுத்து கணக்குப் போடத்துவங்கினார்.

ஐந்து நிமிடங்கள் கழித்து அந்த நோட்டில் கடைசியாய் இரண்டு புள்ளிகள் வைப்பது மட்டும் எனக்குப் புரிந்தது. சட்டென்று நிமிர்ந்தவர்,

"நீ சொல்ற காதல் நடந்தப்ப உனக்கு 18 வயது நீ பன்னிரெண்டாவது படித்துக் கொண்டிருந்தாய், அந்தப் பெண் எட்டாவது படித்துக் கொண்டிருந்தாள். உன் காதல் நிறைவேறாத ஒன்றாகயிருந்திருக்க வேண்டும், அதைக் காதல் என்று கூட நீதான் சொல்கிறாய் நான் அல்ல. என் கணக்கின் படி பார்த்தால் அவளது பெயர் ஙல் தொடங்க வேண்டும். பெரியதாக இல்லாமல் சுருக்கமான ஒன்றாகத்தான் இருக்கவேண்டும். என்னுடைய ஊகத்தின் படி அவள் பெயர் மீனாவோ இல்லை மீனாக்ஷியோ! சரியா?"

ஏறக்குறைய நான் மயக்கம் போட்டுவிடும் நிலைமைக்கு வந்துவிட்டேன். அவள் பெயர் மீனாதான் பெயர் அளவிற்குத் தெரிந்தவர்கள் என் குடும்பத்தினரைத் தவிர வேறு யாரும் இல்லை. என் குடும்பத்தினரை விசாரித்திருந்தால் நிச்சயம் என்னிடம் சொல்லியிருப்பார்கள் அப்படியென்றால் இந்தச் சாமியார் போலியல்ல என்று உணர்ந்தேன்.

"என் கைரேகையை வைத்து இவ்வளவு விஷயம் சொல்லமுடியுமா?"

"உன்னுடைய ஏழு பிறவிகளையும் சொல்லமுடியும் உன் கைரேகையை வைத்து! அந்த அளவிற்கு இந்த வித்தையை அறிந்தவர்கள் தற்சமயம் மிகமிகக் குறைவு. அதன் காரணமாகவே இருக்கும் சிலரையும் மக்கள் போலியானவர்கள் என்று நம்பும்படியாகிவிடுகிறது."

"சரி இத்தனை திறமையுள்ள நீங்கள் என்னிடம் இதைச் சொல்ல நிரூபிக்க வேண்டிய அவசியம் என்ன? என்னை நாத்தீகனிலிருந்து ஆத்தீகனாக்குவது தான் ஒரே காரணமா?"

"இல்லை யாரையும் ஒன்றிலிருந்து மற்றொன்றாக்குவது என் வேலையல்ல, முடியக்கூடியதுமல்ல அது. சொல்லப்போனால் எதையும் சந்தேகிக்காமல் ஏற்றுக்கொள்வது சரியான முறையல்ல. அதனால் தான் நாத்தீகனாயிருந்து எல்லாவற்றையும் கேள்விகேட்டு கடைசியில் பதில் கிடைத்து ஆத்தீகனானவர்களுக்கு உலகின் ரகசியங்கள் ஆரம்பத்தில் இருந்தே ஆத்தீகனாயிருப்பவர்களை விடவும் எளிதில் தெரியும்! நீ கேட்டாயே எதற்காக என்னைத் தேர்ந்தெடுத்தீர்கள் என்று, நீ தேர்ந்தெடுக்கப்பட்டவன் என்னால் இல்லை, நமக்கு எல்லாம் மேலிருந்து ஒரு சக்தி இயக்குகிறதே அதனால். இந்தத் தந்திரங்களைப் பயன்படுத்தி உன்னை பரம்பொருளை நம்பவைப்பது என்பதே கூட எனக்கு ஒவ்வாத ஒரு காரியம் தான். ஆனால் இது இப்படி இப்பொழுது நடந்தே ஆகவேண்டும் நடக்கிறது!"

கண்களை மூடி கடவுளிடம் பேசுவதைப்போல் தலைநிமிர்ந்து ஆகாயத்தைப் பார்த்துக் கொண்டிருந்தார் அந்தச் சாமியார். நான் எனக்கு நடக்கும் எதையும் புரிந்துகொள்ள முடியாதவனாய் அவரையே பார்த்தபடி நான் இருந்தேன்.

"உன் வாழ்க்கையில் எத்தனை முறை எத்தனை பேரைக் கேட்டிருப்பார் நீங்கள் கடவுளைப் பார்த்திருக்கிறீர்களா என்று? இன்று உனக்கு நான் காண்பிக்கிறேன் கண்களை மூடு! உன் மூளையை மட்டும் திறந்து வைத்துக் கொள்!"

சொன்னவர் மெதுவாக என் கண்களை மூடி வரப்போவது அனுபவிக்கத் தயாரானேன். அவருடைய கைகள் என் தலையில் ஆசிர்வாதம் அளிப்பதைப் போல் தொட, எனக்குள் ஒரு உள்ளொளி பரவியது, உடம்பெல்லாம் ஒரு அதிர்வு, யாரோ என்னை ஆட்கொள்வதைப் போன்ற உணர்வு தூரத்தில் ஒரு ஒளி அதுவரை இருண்மையாக இருந்த என் மனதின் வெளிச்சமாய் இறைவன் பரவுவதை உணர முடிந்தது. ஆஹா எவ்வளவு முட்டாள்த்தனமாயிருந்துவிட்டோம்! கடவுளே! சரி இதுவும் கூட நமக்கான ஒரு பயிற்சிதான். என் கைகள் நானாகவே உணராமல் அந்த உள்ளொளியை நோக்கி கரம் குவித்தது. மெதுவாய் அந்த அதிர்வு குறைந்து மனம் நிறைந்ததைப் போலிருந்தது. நான் மெதுவாகக் கண்களைத் திறந்தேன்.

ஷிட் ஐம்பது அறுபது நபர்கள் என்னைச் சுற்றி நின்றுகொண்டிருந்தார்கள், நான்கைந்து காமெராக்கள் என்னைச் சுற்றி படமெடுத்துக் கொண்டிருந்தன. அந்தச் சாமியார் என்னை நெருங்கி வந்து, "சார் நாங்க QTV இருந்து வருகிறோம், Just for laughs gags நிகழ்ச்சிக்காக. உங்களைப் பற்றிய விவரங்களையெல்லாம் ஒரு டிடெக்டிவ் நிறுவனம் வைத்து சேகரித்தோம், கடைசியா நீங்க ஃபீல் பண்ணினது ஒரு மைல்ட் ஷாக் அவ்வளவே!" என்று சொல்ல நான் முகம் முழுவதும் வழிவதைத் துடைக்கமுடியாமல் அப்படியே நின்றேன்.

நன்றி சர்வேசன்

lørdag den 2. august 2008

முத்திரை கவிதைகள்


மெள்ள நகரும்
பேருந்தின் ஜன்னலில்
அவசரமாய் கையேந்தும்
பிச்சைக்காரியின்
இடுப்புக் குழந்தை
டாட்டா காட்டுகிறது
பஸ் பயணிகளுக்கு!

- குழந்தை , பி.பழனிச்சாமி

*

நாமிருவரும் சேர்ந்து எடுத்த புகைப்படங்களில்
நாற்காலியில் அமர்ந்திருப்பேன் நான்
அடக்கமாக எனக்குப் பின்னால்
நின்றுகொண்டிருப்பாய் நீ

உன் இனத்துக் கற்புக்கரசிகளைச் சொல்லி
உன்னை மிரட்டுவேன் நான்
என் இனத்து அயோக்கியர்களின் பட்டியல்
தெரிந்தும்
அமைதியாக இருப்பாய் நீ

நீ எனக்கிருப்பதை பிறர் கேட்டாலொழிய
சொல்லிக் கொள்வதில்லை நான்
நான் உனக்கிருப்பதை ஆதாரங்கள் அணிந்து
பறைசாற்றியாக வேண்டும் நீ

எனக்குப் பிறகு என் நினைவுகளோடு
வாழவைக்கிறார்கள் உன்னை
உனக்குப் பிறகு உன் தங்கையோடு
வாழவைக்கிறார்கள் என்னை

- நானும் நீயும், ஜெயபாஸ்கரன்

*
வாழ்ந்து கெட்டவனின்
பரம்பரை வீட்டை
விலை முடிக்கும்போது
உற்றுக்கேள்
கொல்லையில்
சன்னமாக எழும்
பெண்களின் விசும்பலை

- உயிரின் ஒலி , மகுடேசுவரன்
*

விழுங்கிய மீன்
தொண்டையில் குத்துகையில்
உணர்கிறேன்
தூண்டிலின் ரணம்

- வலி , ஜி.ஆர்.விஜய்

*

ஆறாயிரத்துக்கு
விற்றுவிட்ட பிறகும்
ராவோடு ராவாக
புதிய எஜமானனின்
தொழுவத்துக் கயிற்றை
அறுத்துக்கொண்டு
பத்து கிலோமீட்டர்
பயணம் செய்து
மூச்சிரைத்தபடி
வீட்டு வாசலில்
வந்து நிற்கிற
வெள்ளைப் பசுவைப்
பார்க்கும்போது
உறுத்தத்தான் செய்கிறது
தனிக்குடித்தனம்
வந்தவனுக்கு

- குற்ற மனசு , ஜெ.முருகன்

*

தீர்த்தவாரித் திருவிழாவில்
அலங்கரிக்கப்பட்ட
அர்த்தநாரீஸ்வரரின்
பிரமாண்ட திரு உருவத்தை
கழுத்துப் புண்களில்
ரத்தம் வடிய
கண்களில்
நீர் கசிய
இழுத்து வரும்
வண்டி மாடுகளுக்கு
தெரிந்திருக்காது
அவை
எவ்வளவு பாக்கியம்
பெற்றிருக்க வேண்டுமென்பது!

- புண்ணியம் , க.பாலவெங்கடேசன்

நன்றி :: முத்திரை கவிதைகள், 17.11.02 ஆனந்த விகடன் இணைப்பு

torsdag den 3. juli 2008

நகல் போலி சினிமா : தமிழ் விமர்சனச் சூழல்

யமுனா ராஜேந்திரன்

அமெரிக்க ‘ஆஸ்கார்’ கனவுகளும், பிரெஞ்சு ‘கேனஸ்’ கனவுகளும் கோடம்பாக்கத்தின் தெருக்களில் நிரம்பிவழிந்து கொண்டிருக்கிறது. கமல்ஹாஸனும் மணிரத்தினமும் லாஸ் ஏஞ்ஜல்ஸ் மலைகளின் மயக்கம் தெளிந்து நிர்நதரமாகக் கீழே இறங்கிவிட்டார்கள் எனத் தெரிகிறது. அமெரிக்க மாதிரிகளை, கோடம்பாக்கத்திலேயே தமிழ்ச்சாயலுடன் தம்மால் உருவாக்கிவிட முடியும் என்பதை அவர்கள் அறிந்திருக்கிறார்கள். மணிரத்தினத்தின் ‘ஆயுத பூஜை‘க்குப் பின்னாடி ‘அமரோஸ் பெரோசு’ம், வேட்டையாடு விளையாடுவுக்குப் பின்னாடி ‘டீரெயில்டும்’ சங்கரின் ‘வெயிலு’க்குப் பின்னாடி ‘சினிமா பாரடைஸே’வும் இருக்கிறது என்கிற நிஜத்தைக் கூட நாணயமாகச் சொல்லாதவர்கள்தான் தமிழ் சூழலில் புதிய சினிமாவைப் படைப்பவர்கள் என அறியப்பட்டிருக்கிறார்கள் என்பது இன்னொரு மகத்தான சோகம்.

சினிமாப் படைப்பாளிகள் தான் இப்படி என்றால், உலக சினிமா அல்லது அயல் சினிமா அல்லது இலத்தீனமெரிக்க சினிமா என எழுதும் பெத்தாம் பெரிய விமர்சகர்கள் அல்லது சினிமா வரலாற்றாசிரியர்கள் அல்லது வசனகர்த்தாக்கள் என அறியப்பட்ட எஸ்.ராமகிருஷ்ணன் மற்றும் சாருநிவேதிதா போன்றவர்களின் போக்கு இதனை விடவும் கேவலமானதாகவும், போலித்தனம் மிகுந்ததாகவும், சினிமாச் சான்சுக்கு அலைகிற கூலிச்சிந்தனாவாதிகளின் நிலைமையிலும் இருக்கிறது.

வசந்தபாலனின் ‘வெயில்’ எனும் திரைப்படம் கேனஸ் திரைப்பட விழாவுக்குச் சென்றது குறித்த ஆரவாரங்களிருந்தும், தங்கர்பச்சானின் ‘பள்ளிக்கூடம்’ திரைப்படம் திரைப்படவிழாவுக்குத் தேர்ந்தெடுக்கப்படாமல் போன துயரத்திலிருந்தும் பிரச்சினையைப் பேசத்துவங்கலாம். முன்பாக, ‘வெயில்’ திரையிடப்பட்ட அதே ‘கேனஸ்’ திரைப்படவிழாவுக்கு மணிரத்தினத்தின் ‘குரு’ சஞ்சய்தத்தின் ‘ராகே முன்னா பாய்’ என இரண்டு வணிகத்தனமான இந்தியத் திரைப்படங்களும் தேர்ந்தெடுக்கப்பட்டு, இந்தியா சார்பாக அங்கு திரையிடப்பட்டது என்பதனையும் சேர்த்து நாம் தெரிந்துகொள்வோம். மேலாக, வெயிலும், குருவும், ராகே முன்னாபாயும், கேனஸ் திரைப்படவிழா போட்டிப்பிரிவில் தேர்ந்தெடுக்கப்பட்டுத் திரையிடப்பட்ட திரைப்படங்கள் அல்ல என்பதனையும் தெரிந்துகொள்வோம்.

போட்டிப்பிரிவு அல்லாத, போட்டிக்கு வெளியிலான, அந்தந்த தேசிய அரசுகளின் அதிகாரபூர்வத் திரைப்பட அமைப்புகள் தேர்ந்தெடுத்துத் தரும் திரைப்படங்களிலிருந்து, கேனஸ் திரைப்படவிழாக் குழுவினால் வடிகட்டப்பட்ட படங்கள்தான் அங்கு திரையிடப்பட்டன. இங்கு தேசியத் தேர்வுக் கமிட்டியின் ரசனை, தேர்வுக் குழுவினரிடம் அதிகாரம் செலுத்தக் கூடிய நபர்களின் தகைமை போன்றனவும், படத்தேர்வு தொடர்பான விவாதங்களில் கணக்கிலெடுத்துக் கொள்ளப்பட வேண்டும். இவ்வகையில் உன்னதமான இத்தாலியப் படமான ‘சினிமா பாரடைஸோ’வின் பாதிப்பில் உருவான ‘வெயில்’ படம் தொடர்பான ஆரவாரங்கள் மிகைப்படுத்தப்பட்டவை என்பது சொல்லாமலேயே விளங்கக் கூடியதாகும். அதே அளவில் ‘பள்ளிக்கூடம்’ திரைப்படம் அங்கே திரையிடப்படாமல் போனதும் அதிகம் கவலைப்பட்டுக்கொள்ளக் கூடிய விசயமும் இல்லை.

முக்கியமாக, கலக அரசியல் அலையடித்த அறுபதுகளின் உலகத் திரைப்பட விழாக் கலாச்சாரத்தின் பின்னிருந்த கலை மதிப்பீடுகளும், உலகமயமாதலின் சந்தையென விரிந்திருக்கும் இன்றைய திரைப்பட விழாக் கலாச்சாரத்தின் பின்னிருக்கும் கலை மதிப்பீடுகளையும் ஒருவர் கறாராக வித்தியாசப்படுத்திப் பார்க்க வேண்டும்.

கேன், ரோட்டர்டாம், வெனிஸ் போன்ற அன்றைய மேற்கத்தியத் திரைப்பட விழாக்களில் கலக அரசியலை முன்னிறுத்திய கோஸ்டா காவ்ராஸ், ஜில்லோ பொன்டகார்வோ, ழான் ழுக் கோதார்த், பெலின்னி, ரெனுவார், கிளாபர் ரோச்சா, அகிரா குரஸோவா, செம்பேன் ஒஸ்மான், தோமஸ் கிதராஸ் அலியா, ஸத்யஜித்ரே, மிருணாள் சென், பெர்ட்டுலூஸி, அந்தோனியோனி, டிஸீகா, ஆந்த்ரே வாட்ஜா, தியோ ஆஞ்ஜல பெலோஸ், ரித்விக் கடக், கென் லோச் போன்றவர்கள் பிரதிநிதித்துவப்படுத்தினார்கள். சோசலிசம், தேசியம், இனவிடுதலை போன்ற பிரச்சினைகளையும் அதனது நெருக்கடிகளையும் இந்தப் படைப்பாளிகள் பேசினார்கள். சோசலிசத்தின் நெருக்கடி, மூன்றாமுலக சமூகங்களின் மனிதம் போன்றவற்றை எழுபதுகளிலும் எண்பதுகளிலும் வந்த படைப்பாளிகளான ஸாங் இமு, கியரோஸ்தாமி, கீஸ்லாவஸ்க்கி, நிஹ்லானி, ஸியாம்பெனிகல், கொப்பாலோ போன்றவர்கள் பேசினார்கள்.

திரைப்படத்தைக் கலையாகவும், சமூகமாற்ற நடவடிக்கையின் கடப்பாடு கொண்ட தொழில்நுட்ப வடிவமாகவும் புரிந்துகொண்ட மகத்தான கலை ஆளுமைகள் இவர்கள். இவர்களின்றி தொண்ணூறுகளில் சிக்கலாகி வரும் மனித உறவுகள் குறித்தும், விளிம்பு நிலை மாந்தர்கள் குறித்தும் பேசிய சீரிய திரைப்பட இயக்குனர்களும் தோன்றினார்கள். நன்னி மொராட்டி, ஆட்டம் இகோயன், ஆலிவர் ஸ்டோன், வாங் கார் வாய், அல்மதோவர், ஜோன் காம்பியான், ஸ்கோர்ஸிஸே, வான் ட்ரையர் போன்ற படைப்பாளிகளும் தோன்றினார்கள்.

இவ்வாறு திரைப்படைத்தைத் தீவிரமான கலையாகக் கொண்டாடியவர்கள் பெரும்பாலும் மேற்கத்தியக் கலைஞர்களாகவும், மூன்றாம் உலகின் கலைஞர்களாகவுமே இருந்தார்கள். இவர்களில் பெரும்பாலான படைப்பாளிகளை ஆகர்ஷித்த தனித்ததொரு கருத்தியலாக மார்க்சியமே திகழ்ந்தது. இத்தகையை கலைஞர்களில் அமெரிக்க சினிமாவைச் சேர்ந்தவர்கள் விரல்விட்டு எண்ணத்தக்கவர்களே என்பது பதியப்பட வேண்டிய மிகமுக்கியமான தரவாகும்.

மேற்கத்திய சினிமாக் கலை ஆளுமைகளினதும், மூன்றாமுலகின் கலை ஆளுமைகளினதும் பாதிப்பு, அமெரிக்காவின் விரல்விட்டு எண்ணத்தக்க திரைப்பட இயக்குனர்களிடம், குறிப்பாக ஸ்பீல்பர்க் மற்றும் லுகாக்ஸின் மீது அகிரா குரஸோவா, ஸ்கோர்ஸிஸேயின் மீது தியோ ஆஞ்ஜலபெலோஸ் மற்றும் ரே, குவன்டின் டரோன்டினோவின் மீது கோதார்த் மற்றும் குரஸோவா போன்றவர்களின் பாதிப்பு இருக்கிறதேயல்லாது, அமெரிக்க சினிமாவின் பாதிப்பு என்பது அறுபதுகள் முதல் தொண்ணூறுகள் வரையிலான காலகட்டத்தில் மேற்கத்திய மற்றும் மூன்றாமுலகின் கலை ஆளுமைகள் மீது இருக்கவில்லை என்பது ஒரு வரலாற்று உண்மையாகும்.

தொண்ணூறுகளிலும், இருபத்தியோராம் ஆண்டின் ஆரம்பத்திலும், அமெரிக்க சினிமாவிலும் உலக சினிமாவிலும், வியாபாரமயமான இசை ஆல்பங்களிலும் ஒரு புதுவிதமான போக்கு தோன்றியது. அறுபதுகள் வரை தொண்ணூறுகள் வரையிலுமான கலக சினிமாவின் அரசியலோடும், படைப்பாளிகளின் வாழ்க்கைப் பார்வையோடும் இரண்டறக் கலந்த கதை சொல்லல் முறைகளை வெறுமனே கதை சொல்லும் உத்தியாக அல்லது தொழில்நுட்பத் தரவாக மட்டுமே புரிந்துகொண்ட தொழில்நுட்பத் தேர்ச்சி கொண்ட சினிமாக்காரர்கள் உருவானார்கள். இவர்களில் பெரும்பாலுமானவர்கள் அமெரிக்க சினிமாக்காரர்கள்.

‘பல்ப் பிக்ஸன்’, ‘ரிசர்வயர் டாக்’, ‘கில்பில்’ போன்ற படங்களை உருவாக்கிய குவின்டன் டரான்டினோ இவர்களில் முக்கியமானவர். குரஸோவாவின் வாள் வீச்சின் லாவகத்தையும் வேகத்தையம், கோதார்த்தின் நேர்க்கோட்டுக் கதைசொல்லல் அல்லாத ‘நான் லீனியர்’ பாணியையும் தனது திரைக்கதை சொல்லலில் கச்சிதமாகப் பாவித்தவர் டிரான்டினோ. டிரான்டினோவின் கதை சொல்லலில் தவறும் விசயங்கள் இதுதான்: குரஸோவாவின் அறச்சீற்றம் இவரிடம் இல்லை. கோதார்த்தின் அரசியல் அந்நியமாதலும் கடப்பாடு கொள்தலும் இவரிடம் இல்லை.

இதைப் போலவே லார்ஸ் வான்டரையரின் ஹாலிவுட்டுக்கு எதிரான ‘டாக்மா திரைப்படக் கோட்பாடு’ - செயற்கையான செட்டுகள் தவிர்த்து, கையில் அலைவுரும் கமெராவுடன், ஒப்பனைகள் தவிர்த்த பாத்திரங்களைத் தொடரும் முறை - அமெரிக்கரான சோடர் பர்க்கிடம் அவரது ‘டிராபிக்’ படத்திலும், அமெரிக்க குற்றத் தொலைக் காட்சித் தொடரான ‘என்.வொய்.பி.டி’.யிலும் பாவனையாகிறது. புனைவுகளுக்கு அப்பால் நிஜங்களைத் தேடுவதற்காக ட்ரையர் தேரந்தெடுத்த கலகவடிவம், இப்போது புனைவுகளை நிஜம் போல முன்வைக்கும் வெற்றுத் தொழில்நுட்பமாக ஆகிறது.

நிஜமும், தனது அரசியல் கனவும் முயங்கப் பெற்ற மூன்றாவது யதார்த்தமாக, கலை யதார்த்தமாக, கலையின் இயங்கியல் பண்பாக, செர்ஜி ஐஸன்ஸ்டைன் முன்வைத்த ‘மோன்டேஜ்’ இன்று பரபரப்பையும், அலையும் பிம்பங்களை நுற்றுக்கணக்கில் அடுக்கி நமக்கு வேடிக்கை காட்டும் தொழில்நுட்பமாகவே எஞ்சி நிற்கிறது. ஹாலிவுட்டின் ‘ஸ்பீடு’ படத்திலிருந்து, இங்கிலாந்தின் ‘ஸ்பைஸ் கேர்ள்சி’ன் இசை ஆல்பங்கள் ஈராக, ‘கில்லி’ படம் வரையிலுமான படத்தொகுப்புகள் இப்படித்தான் நமக்கு கிச்சுக்கிச்சு மூட்டிக் கொண்டிருக்கிறது.

இதே வகையில்தான் கீஸ்லாவ்ஸ்க்கியின் ‘பிளைன்ட சான்ஸ்’ முன்வைக்கும் முக்கால உணர்வும், போலந்தின் அரசியல் சாத்தியங்களும் பற்றியதான தத்துவ நோக்கு, ‘ஸ்லைடிங் டோர’ எனும் ஆங்கிலப் படத்திலும், தமிழில் அதனை அடியொற்றி வந்த ‘12-பி’ படத்திலும் வெறும் தொழில்நுடபமாகச் சீரழிந்து விடுகிறது. இந்த மாற்றங்கள் அனைத்தும் தற்போது உலகெங்கிலும் நடைபெற்று வரும் திரைப்பட விழாக்களிலும் எதிரொலிக்கிறது.

உலகில் இன்று நடைபெற்ற வரும் சில திரைப்பட விழாக்கள் முற்றிலும் வியாபார நோக்கத்திற்கானது. ஹாலிவுட் மற்றும் இந்தியக் கமர்சியல் சினிமாவை உலக அளவில் விற்பதற்கானது. இன்னும் சில திரைப்படவிழாக்கள் நாடுகளுக்கு இடையிலான அரசியல் மற்றும் பொருளியல் இலாபங்களை அடிப்படையாகக் கொண்டது. தமது நாட்டின் திரைப்படங்களுக்கு பிறிதொரு நாட்டில் சந்தையைத் தேடும் நோக்கம் கொண்டது. ஒரு நாட்டின் சார்பாகப் பிறிதொரு நாட்டில் அதிகாரபூர்வமாக நடத்தப் பெறும் இத்தகைய திரைப்படவிழாக்களில், விமர்சனபூர்வமான கலைஞர்களின் திரைப்படங்கள் திரையிடப்படுவதில்லை. உதாரணமாகச் சென்னயில் நடைபெற்ற இலங்கைத் திரைப்பட விழாவில், அந்த நாட்டின் அற்புதமான திரைப்பட இயக்குனர்களான பிரசன்ன விதாநகே மற்றும் ஹந்தஹம போன்றவர்களின் திரைப்படங்கள் திரையிடப்படவில்லை என்பதனை நாம் கவனம் கொள்ள வேண்டும்.

மத்தியக்கிழக்கு நாடுகளிலும், மேற்கத்திய நகரங்களிலும் அமெரிக்க நகரங்களிலும் நடைபெற்று வரும் அமிதாப்பச்சன் மற்றும் அட்லாப் முன்னின்று நடத்தும், இந்தியத் திரைப்படவிழாக்கள் முற்றிலும் வியாபாரத்திற்கானதேயொழிய இதில் தரம் என்பதோ, கலை என்பதோ சுத்தமாக இல்லை. இதே விதமாகத்தான் கேனஸ் திரைப்பட விழாவும் சமீப ஆண்டுகளில் அதிகமான அளவில் அமெரிக்கமயமாகி வருவது போலவே, ஓரு திறந்த சந்தைக்கான களமாகியும் வருகிறது.

அறுபதுகளில் நடைபெற்ற திரைப்பட விழாக்களுக்கும், இன்றைய திரைப்பட விழாக்களுக்கும் இருக்கும் மிக முக்கியமான வித்தியாசம் ஒன்றுண்டு. அறுபதுகளில், திரைப்படத்தினை ஒரு கலையாகப் புரிந்து கொண்ட கடப்பாடு கொண்ட ஆளுமைகளின் கூடுமிடமாக திரைப்பட விழாக்கள் இருந்தன. இன்றைய திரைப்படவிழாக்கள், சமகாலத்தில் வெறும் சந்தையை நோக்கமாகக் கொண்டவர்களும், திரைப்படத்தினை வெறும் தொழில்நுட்பக் கொண்டாட்டமாகக் கொண்டவர்கள் கூடுமிடமாகவும், திரைப்படத்தினைக் கலையாகவும், கடப்பாடு கொண்ட சமூகமாற்ற வடிவமாகவும் கொண்டவர்கள் கூடுமிடமாகவும் இருக்கிறது. இந்தக் காரணத்தால்தான் ஐஸ்வர்யா ராயும், குவின்டன் டரான்டினோவும், வான் ட்ரையரும் குழுமும் ஒரு இடமாக கேனஸ் ஆகி வருகிறது. இதே காரணம் கருதித்தான், கிளாபர் ரோச்சாவின் புரட்சிகரப்படம் திரையிடப்படும் அதே கேரளத் திரைப்பட விழாவில், கேளிக்கை நடிகர் விஜய்யின் ‘போக்கிரி’ படமும் திரையிடப்படுகிறது.

திரைப்படவிழாக்கள், உலகத் திரைப்படங்கள் குறித்த வித்தியாசப்படுத்தல்கள் இல்லாமல், இன்று ஒருவர் உலக சினிமா, அயல் சினிமா, திரைப்பட விழாக்கள் போன்றவற்றை, ஒரு திரைப்படம் இவற்றோடு சம்பந்தப்பட்டிருப்பதே ஒரு தகுதி எனும் அளவில் பேசிக் கொண்டிருப்பது முற்றிலும் அபத்தமாகும்.

உலக சினிமா என்று இன்று ஒருவர் பேசும் போது, அவர் பேசுவது எந்த வகையான உலக சினிமா என்பதைத் தெளிவு படுத்திவிட்டுப் பேச வேண்டும். இன்று நடைபெறும் திரைப்பட விழாக்களின் தன்மைகளும் வேறுபட்டிருக்கிறது. அதைப் போலவே உலக அளவில் இன்று வெளியாகும் திரைப்படங்களின் தன்மைகளும் வேறுபட்டிருக்கிறது. திரைப்படச் சந்தையை மட்டுமே நோக்கமாகக் கொண்டவர்கள் இந்த வித்தியாசங்களை அழிக்க நினைக்கிறார்கள். இது ஒரு வகையான வர்க்கநீக்க, சாதிய நீக்க, கருத்தியல் நீக்க, நடுநிலையெனும் போர்வையில் வரும் ஆதிக்க சினிமாக் கருத்தியல் என்பதனை நாம் தெளிவாக விளங்கிக்கொள்ள வேண்டும்.

தமிழ் சினிமா வரலாறு மற்றும் தமிழ் சினிமா விமர்சனம், பொதுவாகச் சினிமா அழகியல் குறித்தச் செயல்பாடுகளை, இடதுசாரிகள் எந்த அளவில் மேற்கொண்டு வந்தார்கள் என்று பதிவதும் இன்றைய தேவையாக இருக்கிறது.

எந்தவிதமான முறையான கல்லூரிப் படிப்பும், வாழ்க்கை வசதிகளும், அரசுசார் பதவிகளும் அதிகாரமும் இல்லாத தோழர் அறந்தை நாராயணன்தான் தமிழ் சினிமாவின் கதையை எழுதிய முன்னோடி மனிதர். தமிழ் சினிமாவில் அழகியல்-அரசியல்-இசை-வரலாறு-இலக்கியம் போன்றன பெரும் இடத்தினைக் குறித்து மிக விரிவாக எழுதியவரும் அவர்தான். அவரிடம் கல்வித்துறை சார்ந்த முறையியல் இல்லை. ஆயினும், ஒரு நடவடிக்கையாளராக அவரிடம் தமிழ் சினிமாவை அணுகுவதற்கான வரலாற்று அணுகுமுறையும் மார்க்சியக் கருத்தியல் சார்பும் அவருக்கு இருந்தது. கட்சி சார்பு, அவரது கறாரான விமர்சன அணுகுமுறையைக் கலைத்துவிட முடியவில்லை. ஏவி.எம்.நிறுவனமும் இராம.நாரயாணனும இணைந்து ‘சிவப்புமல்லி’ படத்தினை வெளியிட்டபோது, அந்தப்படம் வியாபார நோக்கம் கொண்ட மசாலா சாகசப் படம் எனக் கடுமையாக விமர்சித்தவர் அவர்.

அவரது செயல்பாடு என்பது தமிழ் சினிமா வரலாற்றைப் பதிவது என்பதோடு நின்றுவிடவில்லை. ஒரு விமர்சகராகவும் ஒரு சினிமாச் செயல்பாட்டாளராகவும் ‘கல்பனா’ எனும் சினிமா பத்திரிக்கையையும் மிகுந்த பொருட்சிரமத்திற்கு இடையில் அவர் நடத்தினார். பாலச்சந்தர் போன்ற அன்றைய ஜாம்பவான்கள் குறித்த மிகக் கடுமையான விமர்சனப் பார்வை கொண்ட கட்டுரைகளை ‘கல்பனா’ வெளியிட்டது. அவர் தமிழ் சினிமா வரலாற்றாசிரியர் மட்டுமல்ல. ஒரு மிகச்சிறந்த விமர்சகர். எல்லாவற்றையும் விட சினிமாவை அவலமான நிலைமையில் இருந்து மீட்பதற்காகச் சகல தளங்களிலும் போராடிய மனிதர் அவர்.

சினிமா குறித்த புனைவு இலக்கியம் என்றால், நமது இலக்கிய மேதைகள் உதிர்க்கிற இரண்டு நாவல்களில் ஒன்று சுஜாதா எழுதிய ‘கனவுத் தொழிற்சாலை’, பிறிதொன்று அசோகமித்திரனின் ‘விழா’ எனும் குறுநாவல். அறந்தை நாரயாணன் சினிமா உலகின் விளிம்பு நிலையாளர்களான துணைநடிகையர் பற்றியும், நடிகையரின் குறுகிய கால நட்சத்திர வாழ்வு பற்றியதாகவும் இரண்டு நாவல்கள் எழுதியிருக்கிறார். சேறும் சகதியும் கவிச்சையும் சாராய நாற்றமும், போராடும் உணர்வும் கொண்ட சினிமாவின் விளிம்பு நிலை மனிதர்கள் பற்றிய அந்த நாவல்கள், ‘வாரந்தோறும் வயசாகிறது’ மற்றும் ‘ஜக்கா’ என்பனவாகும். இதில் ‘வாரந்தோறும் வயசாகிறது’ நாவல் நடிகை சாவித்திரியின் துயரவாழ்வு குறித்ததாகும்.

வெறுமனே வரலாறு எழுதியவனோ அல்லது விமர்சனம் எழுதித் திரிந்தவனோ அல்லது அவர்களது வாழ்வை வைத்து புனைந்து கொண்டு திரிந்தவனோ அல்ல அறந்தை நாரயணனன், துணைநடிகர் நடிகையரின் மற்றும் சினிமாவில் பல்வேறு துறை சார் தொழில்களில் ஈடுபட்டவர்களின் பாதுகாப்பான வாழ்க்கைக்கான உரிமை கேட்கும் அமைப்புகளையும் கட்டியவர் அறந்தை நாராயணன்.

இதில் அவருக்கு முன்னோடியாக இருந்தவர் இசைக்கலைஞன் எம்.பி.சீனிவாசன். ‘கூட்டிசை’யை ஒரு வெகுமக்கள் இயக்கமாக எடுத்துச் சென்ற கலைஞன்தான் எம்.பி.சீனிவாசன். இவர்கள் இருவரும் இந்தியக் கம்யூனிஸ்ட கட்சியில் செயல்பட்டவர்களாக இருந்தார்கள்.

உலக சினிமா குறித்தும், சினிமா அழகியல் குறித்தும் முன்னோடியாகத் தமிழில் கணிசமான சினிமாப் புத்தகங்களைப் பதிப்பித்தவர்கள் ‘சென்னை புக்ஸ்’ நிறுவனத்தினர் மற்றும் ‘சென்னை பிலிம் கிளப்’ அமைப்பினர். ஹரிஹரன், யூகி சேது, சிவக்குமார் போன்றவர்கள் இந்த அமைப்பில் பங்கு பெற்றார்கள். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பு நிலையும் இவர்களுக்கு இருந்தது. ரித்விக் கடக்கிலிருந்து கோதார்த் வரையிலான இந்திய உலக சினிமா மேதைகளை இவர்கள்தான் தமிழக்குத் தந்தார்கள். பேல பெலாஸின் ‘சினிமா கோட்பாடு’ எனும் அதியற்புதமான நூலை இவர்கள்தான் தமிழுக்கு வழங்கினார்கள். ‘சலனம்’ எனும் காத்திரமான சினிமா பத்திரிக்கையையும் இவர்கள்தான் கொண்டு வந்தார்கள். உலக சினிமா, இந்திய சினிமா, தமிழ் சினிமா எனக் காத்திரமான விமர்சனக் கட்டுரைகள் இந்தச் சினிமா சஞ்சிகையில் வெளியாகின.

ருத்ரய்யாவின் ‘அவள் அப்படித்தான்’, யூகி சேதுவின் ‘கவிதைபாட நேரமில்லை’ ஹரிஹரனின் ‘ஏழாவது மனிதன்’ போன்ற திரைப்படங்கள் வெளியான காலமும் இதுதான். வர்க்கம், சூழலியல் அழிவு, வேலையின்மை, வன்முறை அரசியல், பெண்ணிய விழிப்புணர்வு போன்றவற்றைப் பேசிய படங்களாக இவைகள் இருந்தன.

பிற்பாடு துவங்குகிறது ‘தாமரைச்செல்வி பதிப்பகம்’ மற்றும் ‘நிழல்’ போன்ற பதிப்பகங்களின் சினிமாப் புத்தக வெளியீடுகள். மக்களுக்கான சினிமா, அரசியல் சினிமா, ஆப்ரிக்க சினிமா, புகலிடத் தமிழ் சினிமா, ஈரானிய சினிமா, தமிழ் சினிமாவின் பரிமாணங்கள், ஆவணப்பட குறும்பட வரலாறு, ஜான் ஆப்ரஹாம் பற்றிய கலகக்காரனின் கதை, போதம்கின் திரைக்கதை என அதியுன்னதமான சினிமா நூல்களை ப.திருநாவுக்கரசு கொணர்ந்தார். காத்திரமான சினிமா சஞ்சிகையாக நிழல் மூன்று ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்து வெளியாகிக் கொண்டு இருக்கிறது. சினிமாவின் சகல அழகியல்-அரசியல் கூறுகள் குறித்தும் ‘நிழல்’ கட்டுரைகளை வெளியிட்டு வருகிறது.

இந்த இடதுசாரி மரபில் இன்னுமொரு பரிமாணம் முற்போக்கு எழுத்தாளர் சங்கமும், கலை இலக்கியப் பெருமன்றமும் நிழல் அமைப்பும் இணைந்து குறும்பட விவரணப்படப் பட்டறையை தமிழகமெங்கும் நடத்தி வருவதாகும். இன்று அதிகம் பேசப்பட்டுவரும் தமிழ் மாற்றுச் சினிமா குறித்த செயல்போக்கில் இது ஒரு மாபெரும் பாய்ச்சலாகும். சாதிய, வர்க்க, பாலியல் ஒடுக்குமுறைக்கு எதிராக விளம்பு நிலையாளர்கள் கையில் இதன் மூலம் காமெரா வந்து அடைந்திருக்கிறது. இன்னும் இரு சஞ்சிகைகளை ‘காஞ்சனை’ சீனிவாசனும், விஸ்வாமித்திரனும் கொண்டு வருகிறார்கள். ‘காஞ்சனை ரீல்’ மற்றும் ‘செவ்வகம’ என்பன அந்த இரு சஞ்சிகைகள். காத்திரமான காலனிய எதிர்ப்பு மற்றும் மூன்றாமுலக எழுச்சிகர சினிமாக் கட்டுரைகளை இந்த இரண்டு இதழ்களும் வெளியிட்டன.

இதனோடு ஒரு தனிநபராக, இந்திய உலக சினிமாக்கள் குறித்து சினிமா விமர்சனங்கள் மேற்கொள்வதோடு, சினிமாப் பட்டறைகளை நடத்தி வருவதோடு, தனது ‘கனவு’ இதழ் மூலம் கணிசமான தமிழ் சினிமா விமர்சனக் கட்டுரைகளை வெளியிட்டவர் சுப்ரபாரதிமணியன். தங்கர்பச்சானின் ‘செம்புலம்’ பதிப்பகம் தமிழ் சினிமா இயக்குனர்கள் குறித்து மிக முக்கியமான நூலொன்றினைக் கொண்டுவந்திருக்கிறது. கோவையிலிருந்து நண்பர் விசுவநாதன் தனது பதிவுகள் பதிப்பகத்தின் மூலம், என்னுடைய ‘தமிழில் மாற்றுச் சினிமா’ என இரு தொகுதி நூல்களைக் கொண்டு வந்திருக்கிறார். இவ்வாறு உலக சினிமா குறித்தும் தமிழ் சினிமா குறித்தும் தமிழ் மொழியிலேயே இடதுசாரிகள் கணிசமான நூல்களைக் கொணடுவந்திருக்கிறார்கள்.

இதுவன்றி இயக்குனர் ஸ்ரீதர், இயக்குனர் மகேந்திரன் போன்றவர்களும் தமது அனுபவங்களை எழுதியிருக்கிறார்கள். அம்சன்குமாரின் ‘சினிமா ரசனை’ வெளியானபோது சினிமா அழகியல் குறித்த ஒரு முன்னோடி நூலாக அது இருந்தது. ஆக கல்வித்துறை சார் அதிகாரமும் வசதிகளும் கொண்ட எம்.எஸ்.எஸ்.பாண்டியன், ராஜன் குறை, வெங்கடேஷ் சக்கரவரத்தி, தியாடோர் பாஸ்கரன் போன்றவர்கள் ஆங்கிலத்தில் எழுதுவதற்கு முன்பாகவே, உலக சினிமா குறித்தும் தமிழ் சினிமா குறித்தும், பிறர் தமிழ் மொழியில் நிறைய எழுதியிருக்கிறார்கள்.

தமிழ் சினிமா விமர்சனச் சூழல் தனது அடிப்படையான தப்படியைக் கூட இன்னும் முன் வைக்கவில்லை. தமிழ் சினிமா விமர்சனம் மிக நேர்மையாக உருவாகாததற்கான பிரதான காரணங்கள் மூன்று. முதலாவதாக தமிழ் சினிமாவின் காத்திரமான விமர்சகர்கள் என அறிப்பட்டவர்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தின் அரசியல் சார்பாளர்கள். எம்.எஸ்.எஸ். பாண்டியன் மற்றும் வெங்கடேஷ் சக்கரவரத்தி என இவர்களைக் குறிப்பிடலாம். இரண்டாவதாக, எந்தவிதமான கருத்தியல் சார்பும் விமர்சனக் கோட்பாட்டுத் தேடலும் அற்ற வரலாற்றாசிரியர்கள். இவ்வகைக்கு உதாரணம் தியோடார் பாஸ்கரன் மற்றும் அ.ராமசாமி.

கருத்தியல் அடிப்படையில் பிராமணியத்தையும், இடதுசாரி வெறுப்புணர்வையும் கொண்ட அழகியல் விற்பன்னர்கள், நடந்து வந்திருக்கும் இடதுசாரி விமர்சனச் செயல்பாட்டை மறுப்பதற்காக இவர்களையே பிரதான சினிமா விமர்சகர்களாகத் தொடர்ந்து கொண்டாடுகிறார்கள். இடதுசாரிகள் மீதான வெறுப்பையும், தலித் பிராமணிய கூட்டமைப்பையும் வலியுறுத்தும் காலச்சுவடு பத்திரிக்கையின் ஆஸ்தான சினிமா விமர்சன ஆளுமைகள் இவர்கள்தான்.

மூன்றாவதாகப் பொது நீரோட்ட வியாபார சினிமாவுக்கு வசனமெழுதப் போக வேண்டும் எனும் தமது சொந்த ஆசைகளின் பொருட்டு, சினிமாவைப் பற்றிய அபத்தமான கருத்துக்களைத் தொடர்ந்து பேசிவரும் எழுத்தாளர்கள். எஸ்.ராமகிருஷ்ணன், சாருநிவேதிதா போன்றவர்கள் இவர்கள்.

இவர்கள் அல்லாமல், அழகியல் நோக்கில் தொடர்ந்து விமர்சனங்கள் அல்லது தகவல்கள் அல்லது மனத் தோய்வுகள் என எழுதிக் கொண்டிருப்பவர்கள் அம்ஷன்குமார், விட்டல்ராவ், சுப்ரபாரதி மணியன் போன்றவர்கள். இன்று சினிமா குறித்து எழுதிக் கொண்டிருப்பவர்களில் கடப்பாட்டு உணர்வுடன் எழுதிக் கொண்டிருப்பவர்கள் மூவர். காஞ்சனை சீனிவாசன், ப.திருநாவுக்கரசு மற்றும் விஸ்வாமித்திரன் போன்றவர்களே அவர்கள். இன்றும் இயங்கிக் கொண்டிருப்பவர்கள் குறித்து மட்டுமே நான் அவதானித்திருக்கிறேன். இதுவன்றி கடந்த காலத்தில் சினிமாவைத் தீவிரமாக அணுகிய விமர்சகர்கள் என அறந்தை நாராயணன், பசுமைக்குமார், ரவீந்திரதாஸ் போன்றவர்களை என்னால் குறிப்பிட முடியும். நான் பிற்பாடாகக் குறிப்பிட்ட ஆறு பேரும் இடதுசாரிச் சார்புநிலை கொண்டவர்கள் என்பதனை இங்கு பதிய விரும்புகிறேன்.

எம்.எஸ் எஸ் பாண்டியனின் எம்.ஜி.ராமச்சந்திரன் குறித்த நூல், வரலாறும் தனிமனித ஆளுமையும் முயங்கும் இடத்தில் சினிமா நட்சத்திரம் எனும் ஆளுமைகள் தோன்றுகிறார்கள் எனும் இயங்கியல் அடிப்படையைத் தவறவிட்ட, எம்.ஜி.ராமச்சந்திரன் மீது வெறுப்புக் கொண்ட திராவிட முன்னேற்றக் கழகத்தின் பார்வையாகத்தான் எஞ்சி நிற்கிறது. மணிரத்தினத்தின் திரைப்படங்களில் யதார்த்தம் குறித்துக் கேள்வியெழுப்பும் வெங்கடேஷ் சக்கரவரத்தி, கலைஞர் மு.கருணாநிதி உள்பட திராவிட இயக்கத்தினர் உருவாக்கிய திரைப்படங்களில் யதார்த்தம் பற்றிக் கேள்வியெழுப்பியது இல்லை. அதைப் போலவே பெண்வெறுப்பும் பெண்ணைப் பாலியல் பண்டமாகவும் ஆக்கிய திராவிட முன்னேற்றக் கழகப் படங்கள் பற்றியும் இவர்கள் கேள்வி எழுப்பியது இல்லை.

ஈரானிய சினிமா தொடர்பான கட்டுரையில் யதார்த்தவாதத்தின் நெருக்கடி குறித்துத் தீவிரமாகப் பேசிய சக்கரவரத்தி, திராவிட இயக்கப் படங்களில் புனைவும் யதார்த்தமும் மனோரதியமும் பற்றிப் பேசியதில்லை.

தியோடர் பாஸ்கரன் எந்த விதமான விமர்சனக் கோட்பாட்டையும் முயன்று பார்த்தவர் இல்லை. படைப்பில் வடிவம், அழகியல் அமைதி போன்ற செவ்வியல் விமர்சன அளவுகோல்களையே அவர் இன்னமும் பேசிக் கொண்டிருக்கிறார். ஒரு விமர்சகன் ஒரு படத்தின் கதையைத் திரும்பச் சொல்வதில் அவருக்கு மிகச் சலிப்பாக இருக்கிறது. திரைப்படம் எடுக்கப்பட்ட முறை பற்றித்தான் அவருக்கு அக்கறை. ஆனால் பிரதி குறித்த அதிபிரக்ஞையும், திரைச் சட்டகம் குறித்த குறியியல் வாசிப்பும் வந்த பிறகு, அரசியல் பிரக்ஞை கொண்ட ஒரு விமர்சகன், திரைப்பிரதி சொல்லாத பிறிதொரு கதையைத் தான் திரும்பவுமான கதை சொல்லில் சொல்ல வருகிறான் என்கிற தேடல்களுக்கு எல்லாம் அவர் போவதில்லை. வெறுமனே வரலாற்றுத் தகவல்கள் தருகிறவராக மட்டுமே அவர் எஞ்சி நிற்கிறார். அவரது அரசியல் பரிமாணமற்ற சூழலியல் கட்டுரைகளின் அதே சாயலில்தான் அவரது சினிமா தொடர்பான எழுத்துக்களும் அமைந்திருக்கின்றன.

அ.ராமசாமியின் எழுத்துக்கள் பேசப்படும் நபரைப் பொறுத்து, நபர் சார்ந்த பரிமாணத்தை எய்தும். சம்பந்தா சம்பந்தமில்லாமல் பெரியாரிய எதிர்ப்பை பாலாஜி சக்திவேலின் ‘காதல்’ திரைப்பிரதியில் காண்கிற அவர், அதே அணுகுமுறையை சுராவின் ‘பிள்ளை கெடுத்தாள் விளை’யிலும், ஜெயமோகனின் ‘கொற்றவை’யிலும் காண்பதில்லை. அவரது கருத்தியல் மயக்கங்கள் எல்லாம் அப்போது சொல்லிக் கொள்ளாமல் நழுவிப் போய்விடும். பிரதி ஆய்வு எனும் பட்சத்தில் அதற்கேயான சிறப்பான வித்தியாசங்களுடன், ஒரே அடிப்படையில் திரைப்பிரதி இலக்கியப்பிரதி இரண்டினையும் பார்க்கவியலும்.

அ.ராமசாமியிடம் அந்த அடிப்படைகளெல்லாம் செயல்படுவதில்லை. நீக்குப் போக்கான சொற்களில் விமர்சனங்களை மேற்கொள்கிற அ.ராமசாமியின் அணுகுமுறைக்கான மிகச்சரியான உதாரணம், மணிரத்தினத்தின் குரு படம் குறித்தான அவரது எழுத்துக்கள். ‘கருத்தியலைக் கலையாக்கும் படைப்பாளி’ என அவர் மணிரத்னத்தைக் குறிப்பிடுகிறார். மணிரத்தினத்திற்கு அரசியல் இருக்கிறது. கருத்தியல் இருக்கிறதா? கருத்தியல் அவரிடம் கலையாகிறதா? கருத்தியலைக் கலையாக்கும் படைப்பாளியாக அவர் இருக்கிறாரா? தலைப்பிலேயே எவ்வளவு அபத்தம் பாருங்கள்.

சமகாலத்தில் தமிழ் சினிமா குறித்து எழுதுகிறவர்களிலேயே மிக மிக ஆபத்தானவர்கள் என நான் கருதுவது எஸ்.ராமகிருஷ்ணனையும் சாரு நிவேதிதாவையும்தான். ஒரே சமயத்தில் இலத்தீனமெரிக்க இலக்கியம், போர்ஹே, மார்க்யூஸ், மிசல்பூக்கோ, ஒரான் பாமுக் என்று பேசிக் கொண்டிருக்கிற இவர்கள்தான், அதே நாவுடன் ரஜினியின் ‘பாபா’ பற்றியும், மணிரத்தினத்தின் ‘குரு’ பற்றியும், கௌதம் மேனனின் ‘வேட்டையாடு விளையாடு’ பற்றியும், ரஜினிகாந்த் பற்றியும், லிங்குசாமி பற்றியும் அதே பாராட்டுணர்வுடன் எழுதுகிறார்கள்.

‘பாபா’வுக்கும் ‘சண்டக்கோழி’க்கும் வசனம் எழுதும் ஒருவர்தான் ரே பற்றியும், பெலின்னி பற்றியும் பேசுகிறார். பின்வரும் சினிமா விசிறி ஒருவர், ஸத்யஜித் ரேயும் பெலின்னியும், பாபா மாதிரியும் சண்டக் கோழி மாதிரியும்தான் படமெடுத்தார்கள் என நினைத்துவிடுகிற ஆபத்து இதில் உண்டு. ஏனெனில், ரஜினி ரசிகர் ஒருவர், எஸ்.ரா. வசனமெழுதிய ‘பாபா’ படத்தில் இருக்கிற வியாபார சமாச்சாரங்களை நீக்கிவிட்டால் ‘பாபா படம் இன்னொரு உபபாண்டவம் ஆகிவிடும்’ என எழுதியிருக்கிறார்.

சாருநிவேதிதாவும் எஸ்.ராவும் ஒரு ‘பின்நவீனத்துவக் குழப்பத்தை’ தங்கள் தங்கள் வழியில் மேலும் குழப்புகிறார்கள். வெகுஜனக் கலாச்சாரத்திற்கும் உயர் கலாச்சாரத்திற்கும் இடையிலான இடைவெளி தகர்ந்து வருகிறது என அவதானிப்பது ஒரு பின்நவீனத்துவ நிலைபாடு. வெகுமக்கள் ஈடுபாடு காட்டுகிற வெகுஜனக் கலைகளின் பால் மரியாதையோடான அணுகுமுறை மேற்கொள்வதன் மூலம், வெகுமக்களோடு உரையாடுவதன் வழி அவர்களை அதி உயர்ந்த பிரக்ஞை நோக்கியும், செயல்பாடு நோக்கியும் உந்தமுடியும் என்கிற நம்பிக்கைதான், வெகுஜனக் கலைகளின் பாலான விமர்சகனது அக்கறைக்குக் காரணமாகிறது.

கிராம்ஸி, இதனை மேலான்மைக்கு எதிரான பார்வை எனும் அரத்தத்தில், அனைத்து வெளிப்பாட்டு வடிவங்களின் மீதும், அந்தந்த நிலைமையிலேயே வைத்து அவதானித்து, விடுதலை நோக்கிய எதிர்நிலைபாட்டைத் தொடரவேண்டும் என்கிறார். ‘வெகுஜனக் கலைகளினூடே விமர்சனச் செயல்பாடு’ என்பதுதான், வெகுஜனக் கலைகளின்பால் புத்தியுள்ளவன் மேற்கொள்ள வேண்டிய நிலைபாடு.

மாறாக, வெகுஜனக் கலைகளை இருக்கிறவாறே கொண்டாடிக் கொண்டிருப்பதல்ல. பாபா பற்றிய அல்லது சண்டக்கோழி பற்றிய எஸ்ராவின் பார்வையும், குரு பற்றியதான அதன் பன்னாட்டு மூலதனப் பொருளியலுக்கு ஆதரவான பார்வையை மறுதளித்த, அதே வேளை படத்தில் முறைசாரா உறவைக் கண்டுபிடிக்கிற, சாருநிவேதிதாவின் பார்வையும், நிர்மூடத்தனமாக இருப்பதை அப்படியே விமர்சனமின்றி ஆராதிக்கும் பார்வையாகும்.

சாரு நிவேதிதாவின் பம்மாத்திற்கு இன்னொரு உதாரணம் அமீரின் பருத்திவீரன் படத்தை இலத்தினமெரிக்க புரட்சிகர இயக்குனர் சாஞ்சினோசின் படத்துடன் ஒப்பிட்டது. சாஞ்சினோஸ் மூன்றாவது சினிமாக் கோட்பாட்டாளர். தனது மக்கள்மீதான மேற்கத்திய மற்றும் அமெரிக்கர்களின் அத்துமீறல்களை ‘கான்டோர் ஆப் பிளட்’ எனப் படம் எடுத்தவர். வாழ்நாள் முழுக்க காலனியாதிக்கத்திற்கெதிராகவும், விளிம்புநிலை மலைவாழ் மக்களுக்கு ஆதரவாகவும் பேசியவர். அவர்களது கலைவாழ்வை வெகுநுட்பமாகப் பதிவு செய்தவர். சாருநிவேதிதா நேர்மையாகச் செய்ய வேண்டியதெல்லாம், சாஞ்சினோசின் எந்தப்படத்தின் எந்தக்காட்சி மாதிரி, பருத்தி வீரன் தன்னை ஆகர்சித்தது என்று விவரித்து எழுதியிருக்க வேண்டும். கொடுமையிலும் கொடுமை, சம்பந்தா சம்பந்தமில்லாமல் ‘ராம்’ என்று மிக மோசமாக ஒரு இந்துத்துவாப் படமெடுத்த அமீரை சாஞ்ஜினோசோடு ஒப்பிடுவதெல்லாம் அயோக்கியத்தனம்.

எஸ்.ரா. தன்னுடைய சொந்த சினிமா ஆசைகளுக்காக அனைத்தையும் திரிக்கிறவர். அச்சு இதழில் வராத ஜான் பாபுராஜ் உடனான அவருடைய ஒரு இணைய நேர்முகம் (‘தமிழ்மணம்’ தொகுப்பில் தேடினால் கிடைக்கிறது) ஒன்று அவரது நகல் போலி சினிமாவைத் தெளிவாக முன்வைக்கிறது. எஸ்ரா சொல்கிறார்: என் வரையில் இரண்டே வகையான திரைப்படங்கள்தான் இருக்கின்றன. ஒன்று, பொழுதுபோக்கு திரைப்படங்கள் மற்றது கலைப்படங்கள். பொழுதுபோக்கு திரைப்படம் அதிகமும் பார்வையாளர்களோட விருப்பு வெறுப்பை முதன்மைப்படுத்தி உருவாக்கப்படுது. கலைப்படங்களுக்கு அந்த கட்டுப்பாடு இல்லை. கலைப்படங்கள் எப்போதுமே வாழ்வை ஆவணப்படுத்துற அரிய கலை முயற்சியில் ஈடுபடுகின்றன. தமிழில் அந்தமாதிரியான முயற்சிகள் குறைவு.

சினிமாவில் தீவிர எழுத்தாளர்கள் பணியாற்றுவது உலகம் முழுவதும் தொடர்ந்து நடந்து வர்ற ஒரு செயல்தான். இலக்கிய ஆசான்களாக நாம் கொண்டாடுற வில்லியம் பாக்னர், காப்ரியேல் கார்சியா மார்க்வெஸ், கார்லோஸ் புயண்டஸ், ஹெமிங்வே, வைக்கம் முகமது பஷீர், சதத் ஹசன் மண்டோ, யுகியோ மிஷிமானு பலர் அவங்க மொழியின் ஜனரஞ்சகமான படங்களில் பணிபுரிந்தவர்கள்தான். போர்ஹே மாதிரியான பின் நவீனத்துவத்தின் பிதாமகர் கூட சாகசப் படங்களில் பணியாற்றியிருக்கிறார்”.

மேலே கண்ட மேற்கோளில் பல மயக்கங்களும் குழப்பமான சொல்லாட்சிகளும் இருக்கின்றன. கலைப்படம், பொழுது போக்குப்படம், ஜனரஞ்சகப் படம் என அவர் சொற்களை வீசுகிறார். பொதுவாக ‘சினிமா’வில் தீவிர எழுத்தாளர்கள் பங்கு பெறுகிறார்கள் என ஒரு பட்டியல் தருகிறார். அதே பாராவின் இரண்டாம் வாக்கியத்தில் ‘ஜனரஞ்சக சினிமா’வில் அவர்கள் பணிபுரிந்தவர்கள்தான் என்கிறார். ‘ஜனரஞ்சக சினிமா’ என்பதை அவர் பொழுதுபோக்குப் படங்கள்’ எனவும் சமப்படுத்துகிறார். பொழுது போக்குப் படம், கலைப்படம் என இருபிரிவுகள்தான் தன்னைப் பொறுத்து இருக்கிறது என்கிறார். கலைப்படங்கள்தான் வாழ்வை ஆவணப்படுத்துகின்றன என்கிறார்.

சரி, இவர் ஏன் பொழுதுபோக்குப் படங்களில் செயல்படுகிறார்?: அவர் மறுபடியும் சொல்கிறார்: “ஆபாசமில்லாத, வக்கிரங்களைத் தூண்டாத, தரமான பொழுதுபோக்கினைத் தர உதவ முடியும். இன்னும் ஒரு படிமேலே போய் வாழ்க்கை யதார்த்தங்களை திரையில் பிரதிபலிக்கச் செய்ய முடியும்.

கமர்ஷியல் சினிமா வெகுமக்களோட கலை வடிவமாக இருப்பதால் அதைப் புறக்கணிப்பது ஒரு வகையில் வெகுமக்களை புரிந்து கொள்ளாமல் புறக்கணிப்பது மாதிரிதான். இதைப் புரிஞ்சுகிட்டு செயல்பட்டால் கமர்ஷியல் சினிமா வழியாக மாற்றங்களை உருவாக்க முடியும்னுதான் தோணுது. அந்த வகையில் நான் எம்.டி. வாசுதேவன் நாயரையும், ராஜேந்தர்சிங் பேதியையும், பத்மராஜனையுமே எனது முன்னோடிகளாகக் கருதுகிறேன்.”

நிறைய இந்திய இயக்குனர்களது பெயர்களையும், உலக எழுத்தாளர்களது பெயர்களையும் உதிர்த்திருக்கிறார். நல்லது. தான் செயல்படும் ‘பாபா’, ‘ஆல்பம்’, ‘சண்டக்கோழி’ உள்ளிட்ட படங்களில் செயல்படுவதற்காக ஒரு பாதுகாப்பு வளையத்தை அவர் உருவாக்குகிறார் என்பது இதில் தெளிவாக நமக்குப் புலப்படுகிறது. அது அவர் தேர்வு. அவரே சொல்கிற மாதிரி: “இலக்கியவாதிகள் அரசு அலுவலகத்தில் வேலை செய்யலாம், பெட்டிக்கடை வச்சிருக்கலாம், புரோக்கர் தொழில் செய்யலாம், வட்டிக்கு விடலாம், வங்கியில் பணியாற்றலாம். அப்போதெல்லாம் அவங்க தனித்துவம் இழக்கிறதில்லை. சினிமாவுக்கு வந்தவுடன் மட்டும் தங்களோட தனித்துவத்தை இழந்துடறாங்கனு சொல்றீங்களா? இலக்கியவாதிகளை சுற்றி இப்படி பூசப்படும் புனிதங்களை நான் ஒருபோதும் அனுமதிப்பதில்லை”.

புரோக்கர் தொழில், வட்டிக்குவிடுதல் மாதிரி, சினிமாவுக்கு வருவதையும் இலக்கியவாதிகள் செய்யலாம் என்கிறார். அதுவும் நல்லது. அதுவும் அவரது தேர்வு. நம்முடைய பிரச்சினைலெல்லாம், அவர் தேர்ந்துகொண்ட ஒரு நிலைபாட்டுக்காக மிகச்சிறந்த ஆளுமைகளையெல்லாம் கொச்சைப்படுத்துகிறார் என்பதுதான். அவர்களது சினிமா பங்குபற்றலையும் கொச்சைப்படுத்துகிறார் என்பதுதான். முதலாவதாக பொழுபோக்கு சினிமா, ஜனரஞ்சக சினிமா, கமர்சியில் சினிமா, வெகுமக்களின் சினிமா என்பது அடிப்படையில் வேறு வேறான கருத்தாக்கங்கள். இவை அனைத்தையும் எஸ்ரா தனது நிலைபாட்டுக்காக ஒரே அர்த்தத்தில் பாவிக்கிறார். பொழுதுபோக்கு சினிமாவும் கமர்சியல் சினிமாவும் வேறு, ஜனரஞ்சக சினிமாவும் வெகுமக்கள் சினிமாவும் வேறு. பொழுதுபோக்கு சினிமாவும் கமர்சியல் சினிமாவும், சமதளத்தில் எந்த தீவிரமான அக்கறையும் அற்ற வெறுமனே பொருளியல் நோக்கத்திற்காகச் செய்யப்படுபவை. வால்ட்டர் பெஞ்ஜமின் சொல்கிற மாதிரி ‘இயந்திரகதியில்’ உருவாகிற ஹாலிவுட், கோலிவுட், பாலிவுட் ‘தொழிற்சாலைப் பண்டங்கள்’ இவைகள்.

ஆனால், ஜனரஞ்சகம் எனபதும் வெகுமக்கள் சினிமா என்பதும் வெகுமக்களால் விரும்பிப் பார்க்கப்படும் படங்கள். வெகுமக்களால் விரும்பிப் பார்க்கப்படும் படங்கள், அவர்களது அனுபவங்கள் மற்றும் நினைவுகளை (நன்மை-தீமை, மூடத்தனம்-எதிர்நலை) முன்வைப்பவைகளாக இருக்கும் பட்சத்தில் மட்டுமே அவர்களால் விரும்பி உள்வாங்கப்படும். வெகுமக்கள் சினிமாவும் ஜனரஞ்சகப் படங்களும் கலைப்படங்களாகவும் இருக்க முடியும். பொருளியல் ரீதியில் வெற்றிபெற்ற படங்களாகவும் இருக்க முடியும். கறாராக ஒரு விஷயத்தை நாம் இங்கு குறிப்பிட்டாக வேண்டும். ‘பொழது போக்குப்படங்கள்’ என்பது நிச்சயமாக மக்களின் விருப்பு வெறுப்பை முன்வைத்து உருவாக்கப்படுதில்லை மாறாக அவர்கள் மீது ‘இதுதான் ரசனை’ எனத் திணிக்கப்பபடுகிறது. பொழுதுபோக்குப் படம் தொடர்பான வெகுஜன ரசனையை யார் உருவாக்குகிறார்கள் என்பது இங்கு மிக முக்கியமான கேள்வியாக ஆகிறது.

எஸ்.ராவின் குழப்பம் எங்கு நிலை கொண்டிருக்கிறது? அவர் சினிமாவை இரண்டாக மட்டுமெ பிரப்பதில் கலைப்படம், பொழுது போக்குப்படம், எனப் பிரிப்பதில் நிலைகொண்டிருக்கிறது. நன்மை- தீமை, அடிமைத்தனம்-விடுதலை, சமரசம்-எதிரப்பு, போன்ற மனித அறம் சார்ந்து திரைப்படங்களை பிரிக்க வேணடிய யுகத்தில் நாம் இருக்கிறோம். கலை வாழ்வைப் பற்றியது என்பதால், சமவேளையில் ஒரு வலதுசாரிக் கலைஞனும் இடதுசாரிக் கலைஞனும் வாழ்வை உக்கிரமாக ஆவணப்படுத்த முடியும். அதைப்போலவே, வெகுமக்கள் படம் என்பதனையும் சரி, பொழுது போக்குப் படம் என்பதனையும் சரி, நாம் நன்மை ௲தீமை எனும் அறத்தின் அடிப்படையில் பிரித்துப் பாரக்க முடியும்.

நிலைமை கொஞ்சம் சிக்கலானதுதான். கலை எனும் அளவில் திரைப்படத்தில் செர்ஜி ஐஸன்ஸ்டைனது ‘போர்க்கப்பல் போதம்கின்’ எவ்வளவு முக்கியத்துவம் பெறுகிறதோ, அதே அளவு பாசிசக் கலைஞரான லெனி ரீப்செந்தாலினது ‘பரேடு’ படமும் முக்கியத்துவம் பெறுகிறது. இரண்டும் வேறு வேறு வகைகளில் வாழ்வை ஆழமாகச் சென்று பார்த்திருக்கிறது. இரண்டும் கலை ஆவணங்கள் என்பதில் எவருக்கும் சந்தேகம் இருக்க முடியாது. ஆனால், ஒன்று தீமையின் கலை. மற்றது அதற்கு எதிரான விடுதலையின் கலை. இதைப்போலவே தான் அது கமரிசியல் ஆனாலும், பொழுதுபோக்கு ஆனாலும் வெகுமக்கள் சினிமா ஆனாலும், அவற்றிலும் பல்வேறு நிலைகளில், நன்மை- தீமை மற்றும் அடிமைத்தனம்-விடுதலை என செய்திகளை வெளியிடும் படைப்புகள் இருக்கின்றன.

சினிமாவையும் சரி, பொதுவாகப் பல்வேறு படைப்பு நிலைகளையும் சரி, கலைப் படைப்புக்கள் பொழுது போக்குப் படைப்புகள் என வரையறை செய்த காலம் அநேகமாக முடிவுக்கு வந்துவிட்டது. சினிமா வரலாற்றை நாம் எடுத்துக் கொண்டால், கலை சார்ந்தவை வாழ்வுக்கு நெருக்கமாக இருக்கிறது என்பது ஒரு காலகட்டம் வரை உண்மைதான். கலைஞர்கள் அன்று அறம் குறித்துப் பேசுகிறவர்களாகவும், பிரபஞ்ச மதிப்பீடுகளை முன்வைப்பவர்களாகவும், மனித உரிமைகள் குறித்தப் பேசுபவர்களாகவும் இருந்தார்கள். இவர்களது திரைப்படங்கள் ஆன்ம தரிசனத்தடன் கடப்பாட்டுணர்வுடன் இருந்தன. இந்தக் காரணத்தினால் இவர்கள் எடுத்த திரைப்படங்கள் தீமைக்கு எதிராகவும் வாழ்வுக்கு அருகிலும் இருந்தன.

ஆனால், இன்று பாசிசக் கலையும் இருக்கிறது விடுதலைக் கலையும் இருக்கிறது. வலதுசாரிகளின் கலையும் இருக்கிறது. இடதுசாரிகளின் கலையும் இருக்கிறது. அது போலவே, சகலவிதமான பொழுதுபோக்கு வடிவங்களிலும் வலதுசாரிப் பொழுது போக்கும் இருக்கிறது இடதுசாரிப் பொழது போக்கும் இருக்கிறது. பொருளியல் ரீதியில் வெற்றிப் படங்கள் அனைத்தும் பொழுதுபோக்குப் படங்கள் அல்லது கமர்சியல் படங்கள் அல்லது வாழ்வை விட்டு விலகிய படங்கள் எனச் சொல்ல முடியாது. கிரேக்க மார்க்சிஸ்ட் இயக்குனர் தியோ ஆஞ்ஜல பெலோஸின் ‘தி டிராவலிங் பிளேயர்ஸ்’ திரைப்படம், கிரீஸில் மிகப்பெரிய வெற்றி பெற்ற, வசூலை அள்ளிக்குவித்த படம். அதி அற்புதமான கலைப்படைப்பாக அது இருக்கிறது. நிஹ்லானியின் ‘1084 ஆம் எண்ணின் அன்னை’யிலிருந்து அவரது பெரும்பாலுமான படங்கள் பொருளாதார ரீதியில் வெற்றி ஈட்டிய படங்கள்தான்.

மேலாக, குரஸோவாவின் ‘செவன் ஸமுராயை’ எந்த வகையில் நாம் வைக்க முடியும்? கலைப்படம் என்றா கமர்சியல் படம் என்றா? சேரனின் ‘தவமாய் தவமிருந்து’ படத்தை நாம் எங்கு வைப்பது? அது கலைப்படமா அல்லது கமர்சியல் படமா? தங்கர்பச்சானின் ‘அழகி’யை எங்கு வைப்பது? கலை மற்றும் கமர்சியல் என்று நிர்ணயிப்பது என்பது அபத்தமாகவே இருக்கும்.

இன்று நல்ல படங்கள் அல்லது கெட்ட படங்கள் என்ற இரு பிரிவுகள்தான் உண்டு. வாழ்வின் அடிப்படையிலும் அறத்தின் அடிப்படையிலும்தான் இன்று படங்களைப் பிரிவினை செய்ய வேண்டுமேயொழிய, வெறும் கலை அனுபவம் எனும் வழியில் மட்டும் பிரிவினை செய்வது ஒரு வகையில் அப்பட்டமான மோசடிப் பார்வையாகவே இருக்கும். ஆதிக்கமும் விடுதலையும் குறித்த அவதானங்களை இல்லாததாக்குவதாகவே இந்நிலைபாடு இருக்கும்.

மேலாக, எஸ்ரா பட்டியலிடுகிற எழுத்தாளர்கள் மார்க்வசிலிருந்து போர்ஹே வரை எந்தக் காலத்தில் என்ன மாதிரியான ஜனரஞ்சகப் படங்களை அல்லது பொழுது போக்குப் படங்களை சாகசப் படங்களை எடுத்தார்கள் என்பதையும் அவர் நாணயமாக நிறுவிக் காட்ட வேண்டும். மார்க்வஸின் கதைகளை அடிப்படையாக் கொண்ட படங்கள், ‘எரிந்திரா’விலிருந்து ‘எ குரோனிக்கல் ஆப் டெத் போர் டோல்டு’ வரை, அவரது அனைத்துப் படங்களையும் நான் பார்த்திருக்கிறேன். எஸ்.ரா சொல்கிற மாதிரியான கமர்சியல் படங்கள் அல்ல அவை. இலத்தீனமெரிக்க தொலைக்காட்சிகளுக்காகத் தயாரிக்கப்பட்ட ‘லோ பட்ஜெட்’ படங்கள்் அவை. ரஜினிகாந்தின் படங்களும் விஜயின் படங்களும் சாகசப் படங்களாக விளங்கிக் கொள்ளப்பட்டிருக்கும் ஒரு சூழலில், போர்ஹே பற்றி சாசகப்படம் எடுத்தார் என, எஸ்.ரா இப்படிப் பேசுவது படு அபத்தமும் மோசடித்தனமானதுமாகும்.

அனைத்துக்கும் மேலாக, எஸ்.ரா ஆதாரமாகக் காட்டுகிற எந்தப் படைப்பாளியும் எழுத்தாளனும் இயக்கிய அல்லது பங்கு பெற்ற படங்களில் ஒன்று போலாவது இதுவரை எஸ்ரா வசனம் எழுதிய படங்கள் இல்லை. அளவுக்குத் தைக்கிற தையற்காரனின் நிலைதான் வசனங்களை எழுதுகிற எஸ்.ராவின் அல்லது ஜெயமோகனின் நிலையாக இருக்கிறது. இந்நிலையில் தனது கமர்சியில் சினிமா நிலைபாட்டுக்கு ஆதரவாக எழுத்தாளர்களையும் படைப்பாளிகளையும் அவர் இவ்வாறு கொச்சைப்படுத்துவது கொஞ்சம் அதிகம்தான் என்று சொல்ல வேண்டியிருக்கிறது.

சர்வதேச அளவில் நமது சினிமா செல்லாததற்கு என்ன காரணம்? என்ற கேள்விக்கு எஸ்.ரா பதில் சொல்கிறார் பாருங்கள்: “இதுவரை உலக சினிமாங்கிறது திரைப்பட சங்கங்களுக்கு மட்டும்தான் அறிமுகமாகியிருந்தது. தமிழின் முக்கிய இயக்குனர்களில் பலர் உலக சினிமா பரிட்சயம் இல்லாமதான் இருந்திருக்காங்க. அத்தோடு சினிமாங்கிறது ஒரு வணிகம் என்கிற அளவில் மட்டுமே இங்க பிராதனப்படுத்தப்பட்டிருக்கு. அதுக்கு வெளியே உள்ள திரைப்பட விழாக்கள் பற்றியோ, வெளிநாட்டு விநியோகம் பற்றியோ நாம் அதிகம் யோசிக்கலை. ஒரு வருஷம் வெளியாகிற தமிழ்படங்களில் ஒன்று ரெண்டு கூட வெளிநாட்டு திரைப்பட விழாக்களில் பங்கேற்பதில்லை.

இன்னொரு பக்கம் சர்வதேச சினிமாவுக்கு கொண்டு செல்வதற்கான உந்துதலும் பொருளாதார உதவிகளும் கிடைக்கிறதில்லை. டி.வி.டி. வந்தபிறகு இப்போதுதான் உலக சினிமா பற்றிய விழிப்புணர்வு உருவாகியிருக்கு. இவ்வளவு ஏன், உலகப்பட விழாக்கள் நடத்தப்படுவதே சென்ற இரண்டு வருஷமாகத் தான் நடக்கிறது. திரைப்படத்துறை குறித்த முறையான கல்வி நிலையங்கள், ஆய்வுகள், பயிலரங்கங்கள், தீவிரமான திரைப்பட இதழ்கள் இல்லாததும் குறையென்றே சொல்வேன். தமிழில் ஆயிரக்கணக்கில் திரைப்படங்கள் வெளியாகியிருக்கு. ஆனால், அதற்கென்று தனியான ஆவணக் காப்பகம் கிடையாது. முதலில் அதையாவது செய்ய நாம் முயற்சி எடுக்கணும்.”

எஸ்.ரா வேற்றுக் கிரகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிற மாதிரி இங்கு பேசுகிறார். உலக சினிமாக்கள் என்று எதை எஸ்.ரா சொல்கிறார். ஈரானியப் படம் என்பது தெருக்களில் ஓடுவதை அப்படியே படமெடுப்பது என்று தான் தமிழ் சினிமா இயக்குனர் புரிந்திருக்கிறார். கானாப் பாட்டு போட்டுவிட்டால் அது விளம்புநிலை மக்கள் படம் என இன்னொரு இயக்குனர் நினைக்கிறார். உலக சினிமா என்றால் அதில் ஹாலிவுட் சினிமா, ஐரோப்பிய சினிமா, மூன்றாமுலக சினிமா என நிறைய வகையினங்கள் இருக்கிறது. இந்தப் படங்களில் எதனது பாதிப்பில் எந்த இயக்குனர் உருப்படியாக ஒரு யதார்த்தமான படம் கொடுத்திருக்கிறார்? எஸ்.ரா. செய்து கொண்டிருக்கிற இன்னுமொரு மிகப்பெரிய மோசடி இதுதான். இங்கு சினிமா இதழ்கள் இல்லை என்கிறார். பட்டறைகள் இல்லை என்கிறார். ஆய்வுகள் இல்லை என்கிறார்.

பச்சைப்பொய்கள். இவரும் சரி, தியோடார் பாஸ்கரனும் சரி, தங்களுக்கு வெளியில் எதுவும் நிகழவில்லை என்பதை ஸ்தாபித்துவிட வேண்டும் என்பதில் தீவிரமாக இருக்கிறார்கள். தீவிரமான சினிமா நூல்களென தமிழில் நூற்றுக்கும் மேலான நூல்கள் இருக்கின்றன. திரைப்பட இதழ்கள் வெளிவந்திருக்கின்றன. இப்போதும் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இன்று பெரும்பாலுமான கல்லூரிகளில் திரைப்படம் ஒரு துறையாக இருக்கிறது. திரைப்படத்திற்கென தனியார் கல்லூரிகளும் தோன்றியிருக்கிறது. இடதுசாரிகளால் திரைப்படப் பட்டறைகள் தமிழகத்தின் ஊர்தோறும் நடத்தப்படுகிறது. 3000 தமிழ் குறும்படங்கள் விவரணப்படங்கள் தயாரிக்கப்பட்டிருக்கிறது. இவையெல்லாம் எதுவுமே நடைபெறாத மாதிரியான ஒரு பாவலாவை எஸ்.ராவும் தியோடார் பாஸ்கரனும் முன்வைக்கிறார்கள்.

இவர்கள் இவ்வாறு முன்வைப்பதற்கான காரணம்தான் என்ன? இவர்களது பிரதான நீரோட்ட அல்லது அதிகார மைய அல்லது கல்வித்துறைசார் மட்டங்களுக்கு வெளியில் இந்த முயற்சிகளும் செயல்பாடுகளும் நடந்து வருகிறன. இந்த நடவடிக்கைகளையும் இயக்கங்களையும் மேலேடுத்துச் செல்பவர்கள் விளம்புநிலையாளர்கள், இடதுசாரிகள் மற்றும் தலித்துகள். இந்தக் காரணங்களால்தான் இவர்கள், இவ்வாறான ஒரு போக்கு மிக வேகமாக வளர்ந்து வருவதை பரந்துபட்ட தங்கள் மட்டத்தில் முன்வைப்பதில்லை.

சர்வதேச திரைப்பட விழாக்கள் குறித்த விழிப்புணர்வு தமிழில் உருவாகி வருவதாக சொன்னீர்கள். அதற்கான உதாரணம் ஏதேனும் சொல்ல முடியுமா? எனும் கேள்விக்கு அவர் பதில் சொல்கிறார்: “போன வருஷம் மணிரத்னம், பாலா, பாலாஜி சக்திவேல், அமீர் என்று தமிழின் முக்கிய இயக்குனர்களோட படங்கள் பல்வேறு உலக திரைப்பட விழாக்களில் பங்கேற்றிருக்கு. தற்போது ஹிந்தி படங்களுக்கு உலக அளவிலான ஒரு சந்தை உருவாகியிருக்கு. அதுவெறும் வணிகரீதியான சந்தை மட்டுமல்ல. திரைப்பட தயாரிப்பு தொடங்கி தொழில்நுட்பம் வரை அதனால் எவ்வளவோ சாதிக்க முடியும். அதேமாதிரி ஒரு நிலை தமிழ் சினிமாவில் உருவாக தனிநபர்களைவிட மொத்த திரைப்படத் துறையும் துணை நிற்கவேண்டிய அவசியமிருக்கிறது.”

இன்றைய திரைப்பட விழாக்களின் தகைமை பற்றி ஏற்கனவே நிறையச் சொல்லிவிட்டோம். உலக சினிமாவின் மேதைகள் என்று சொல்லப்படுபவர்கள் யதார்த்தவாத சினிமாவை வழங்கிய மேதைகள்தான். தீமைக்கு எதிரான விடுதலை நோக்கிய உலகைப் படைத்தவர்கள் தான் அவர்கள். வாழ்வுக்கு அருகில் திரைப்படத்தை எடுத்துச் சென்றவர்கள் அவர்கள். இவர்கள் படங்களோடு எஸ்.ரா குறிப்பிடுகிறவர்களின் படங்களை ஒப்பிட முடியாது. இன்னும் ஜெயகாந்தன், ருத்ரய்யா, ஹரிஹரன், மகேந்திரன், பாலுமகேந்திரா போன்றவர்களின் தளங்களைக் கூட, எஸ்.ரா குறிப்பிடுபவர்களின் படங்கள் தாண்டவில்லை. ஒரு வகையிலான மனோரதியமான படங்கள்தான் இவை. யதார்த்தத்தின் கூறுகள் இப்படங்களில் இருக்கின்றன. அதற்காக இவைகள் உலகத்தரமான படங்கள் எனச் சொல்ல முடியாது.

இந்திப் படங்களுக்கு உருவாகியிருக்கும் சந்தை இரண்டு வகையிலானது. புலம் பெயர்ந்த இந்தியர்களைக் கதாபாத்திரமாகக் கொண்டு, புலம்பெயர்நாடுகளில் வாழ்கிற இந்தியர்களையும் அவர்களது பொருளாதாரத்தையும் இலக்கு வைத்துக்கொண்ட ஒரு வகைப்படங்கள் தற்போது உருவாகி வருகின்றன. அமு முதல் ஸ்வதேஸ், லகான் முதலிய படங்களோடு, நாகேஸ் குக்குனூர், ராம் கோபால்வர்மாவின் ‘நிசப்த்’ உள்பட்ட படங்கள் இந்த மாதிரிப் படங்கள்தான். பிறிதொரு வகையிலான இந்திப் படங்களின் ஏற்றுமதியை அம்பானியின் ‘அட்லாப்’பும் அமிதமாப்பச்சனும் செய்கிறார்கள். முற்றிலும் வியாபார நோக்கங்கள் கொண்ட, எந்தவிதமான கலை நோக்கங்களும் அற்றது இவர்களது திரைப்பட விழாக்கள்.

மேலாக, எஸ்.ரா. உலக சினிமா என ஒரு நூல் கொண்டு வந்திருக்கிறார். நூலின் முகப்பில் தனது பெயரைப் போட்டுக் கொண்டிருக்கிறார். இது ஒரு பதிப்புத்துறை மோசடி என்றே சொல்ல வேண்டும். பல்வேறு நபர்களின் மொழிபெயர்ப்புக் கட்டுரைகளும் பங்களிப்புகளும் கொண்ட தொகுப்பு நூல் அது. பெரும்பாலும் அவர் இணையத்திற்குத்தான் நன்றி சொல்ல வேண்டும். அந்த நூல் எஸ்.ரா. எனும் தனிப்பட்ட ஆளுமையின் நூல் அல்ல. அவர் தொகுப்பாளராக இருந்திருக்கிற ஒரு நூல். அந்தத் தகுதி மட்டுமே அவருக்கு உண்டு. மாறாக, அவர் உலக சினிமா பற்றி ஒரு நூல் எழுதியிருக்கிற மாதிரியான ஒரு தோற்றத்தினை ஏற்படுத்தியிருக்கிறார். இது ஒரு மிக மோசமான முன்னதாரணம் என்பதையும் நாம் குறிப்பிட வேண்டும்.

சினிமா விமர்சனம் என்பது தியோடார் பாஸ்கரனைப் பொறுத்த அளவில் இன்னும் ஐம்பதுகளிலேயே இருக்கிறது. சினிமா என்பது இன்று ஐரோப்பிய ஹாலிவுட் சினிமா மட்டுமல்ல, மூன்றாமுலகிலிருந்து அற்புதமான திரைப்படங்களை உன்னதமான இயக்குனர்கள் கொடுத்து வருகிறார்கள். நிலவிய திரைப்படக் கோட்பாடுகளை அவர்கள் தலைகீழாகக் கவிழ்த்துக் கொண்டிருக்கிறார்கள். மேலாக தியோடார் பாஸ்கரன், தான் ஒரு விமர்சகர் அல்ல என்பதையும் அவர் உணர்ந்து கொள்ள வேண்டும். ஒரு விமர்சகனுக்கு இன்று கருத்தியல் தேர்வும் அரசியல் கடப்பாடும், தேர்ந்தெடுத்துக் கொண்ட ஒரு முறையியலும் வேண்டும். ‘எமர்ஜென்ஸி’ என்ற வார்த்தையைக் கேட்டே கிலி கொண்ட தியோடார் பாஸ்கரன் போன்றவர்கள் விமர்சனம் பற்றியெல்லாம் பேசாமல் இருப்பதுதான் நல்லது.

அம்ஸன்குமார் ‘தமிழில் மாற்றுச் சினிமா: நம்பிக்கைளும் பிரமைகளும்’ எனும் எனது நூலுக்கு ‘நிழலில்’ மதிப்புரை எழுதியவர். தியோடர் பாஸ்கரன் என்னுடைய மணிரத்தினத்தின் சினிமா நாலுக்கு ‘இந்தியா டுடேயில்’ மதிப்புரை எழுதியவர். ஏறக்குறைய 500 பக்கங்கள் தமிழ் சினிமா பற்றிய கட்டுரைகள் கொண்ட, ஐம்பதாண்டு கால தமிழ்சினிமா குறித்த இரு நூல்களை இருவரும்தான் மதிப்பீடு செய்திருக்கிறார்கள். அவரும் பங்கு கொள்ளும் தியோடார் பாஸ்கரனுடனான ‘காலச்சுவடு’ நேர்முகத்தின் கேள்வி பதில் கீழ்வருமாறு இருக்கிறது.

கேள்வி: உலக சினிமா குறித்துத் தமிழில் பல புத்தகங்கள் வந்திருக்கின்றன. ஆனால் தமிழ் சினிமா குறித்து ஒரு புத்தகம்கூட வரவில்லை. இது குறித்து நீங்கள் எந்த அளவு யோசித்திருக்கிறீர்கள்?

தியோடர்: தமிழ் சினிமாவைக் குறித்துப் பேசுவதற்கான கலைச் சொற்களே இங்கு இல்லையே. ஒரு துறை சார்ந்து ஆழமான பரிசீலனைகள் நிகழ வேண்டுமானால் அதற்கான வளமான சொல்லாடல்கள் அந்த மொழியில் இருக்க வேண்டும். இலக்கியம் குறித்து நடந்துவரும் விவாதங்களிலிருந்து உருப்பெற்றிருக்கும் சொற்கள்தாம் அது குறித்த ஆழமான விவாதங்களுக்குப் பாதை அமைத்துக்கொடுத்திருக்கின்றன. தமிழ் சினிமா குறித்துப் பேசுபவர்கள் கதை, பாட்டு என்று மிக மேலோட்டமான விஷயங்களுடன் தேங்கிவிடுகிறார்கள். தமிழ் சினிமா குறித்து விவாதிப்பதற்கு என்ன இருக்கிறது என்னும் மனோபாவம் அறிவுத் துறையினரிடம் இருக்கிறது. ஆழமான விவாதங்களை உருவாக்காமல் செறிவான சொல்லாடல்களை உருவாக்க முடியாது. இரண்டும் ஒன்றோடொன்று தொடர்புடைய விஷயம்.

தமிழ் சினிமா பற்றிப் பல நூல்களும் ஆய்வுக் கட்டுரைகளும் ஆங்கிலத்தில் வந்திருக்கின்றன. முக்கியமான ஆங்கில நூல் ஒன்று சிட்னியில் இலங்கைத் தமிழர் வேலாயுதத்தைத் தொகுப்பாசிரியராகக் கொண்டு உருவாகிக் கொண்டிருக்கிறது. புகழ்பெற்ற ரௌட்லெட்ஜ் பதிப்பகத்தார் வெளியிடுகிறார்கள். இதில் வெங்கடேஷ் சக்ரவர்த்தி, ராஜன் குறை போன்ற ஆய்வாளர்கள் இடம்பெறுகிறார்கள். வாஷிங்டனில் சினிமா போதிக்கும் லலிதா கோபாலன் இந்திய சினிமா பற்றி 24 Frames என்ற நூலைத் தொகுத்திருக்கிறார். 24 இயல்கள் கொண்ட இந்த நூலில் மூன்று இயல்கள் தமிழ் சினிமா பற்றியன.

எம்.எஸ்.எஸ். பாண்டியன் ஒரு இயல் எழுதியுள்ளார். தமிழ் சினிமா பற்றிய நூல்கள் தமிழில் குறைவுதான். அறந்தை நாராயணன், புலவர் கோவிந்தன் இவர்களுடைய நூல்கள் முக்கியமானவை. இங்கு தமிழில் ஒரு சொல்லாடலே உருவாகவில்லை. அதற்கு அடிப்படையான கலைச்சொற்களும் உருவாக்கப்படவில்லை. எடுத்துக்காட்டாக, develop (the film) என்ற சொல்லுக்கு என்ன தமிழ்ச் சொல்? அரசு விளம்பரங்களில் 'பதனிடுதல்' என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது. தோலைத்தான் பதனிடுவார்கள். பழைய பத்திரிகைகளில், நிழற்படம் பற்றிய கட்டுரைகளில் 'உருத்துலக்கல்' என்கிறார்கள். பொருத்தமான சொல்.

தமிழ் சொல்வளம் மிகுந்த மொழி. ஆகவே நாம் துறைச் சொற்களை உருவாக்க முடியும். ஆங்கில மொழியில் இந்தப் பிரச்சினையை, பிரெஞ்சு சொற்களை அப்படியே பயன்படுத்திச் சமாளித்தார்கள், Montage, mise en scene, film noir, cinema verite என. ஏன் பிரெஞ்சு மொழி? சினிமா பிறந்த பிரான்ஸில் தொடக்கத்திலேயே சினிமா ஒரு கலை வடிவமாகப் படித்தவர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. அது குறித்த துறைச் சொற்கள் உருவாயின. சீரிய சொல்லாடல் மௌன சகாப்தத்திலேயே உருவானது. வரலாற்றில் இடம்பெற்ற Abel Gance, Napoleon (1927) போன்ற படங்கள் மவுனப் படங்கள் தாம்.

தமிழில் சினிமா பற்றிய கலைச் சொற்கள், சினிமா சார்ந்த கருதுகோள்களைக் குறிக்கும் சொற்றொடர்கள் இல்லாதது இதைப் பற்றிய சீரிய சொல்லாடல் உருவாகாததற்கும் நூல்கள் வெளிவராததற்கும் முக்கியக் காரணம். சில பத்திரிகைகளில் சினிமா பற்றிய கட்டுரைகள் இப்போது வர ஆரம்பித்துள்ளது நல்ல அறிகுறி. ஆயினும் துறைச் சொற்கள் புழக்கத்தில் வராதது பெரும் குறை. துறைச் சொற்கள் இல்லாமல் அதைப் பற்றிப் பேசுவது ஆகாயத்தோடு சிலம்பமாடுவது போன்றது.

தமிழ் சினிமா பற்றிப் பல M.phil., Ph.D., ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன. 'திரைப்பாடல்களில் ஜாதி', 'தமிழ் சினிமாவில் பெண்ணியம்' என. இவைகளைப் படித்தீர்களேயானால் அவை இலக்கிய ஆய்வுகள் என்பது புலப்படும். அவற்றில் சினிமா ஒரு துளியும் இருக்காது. இந்த ஆய்வுகளும் தமிழ்த் துறையில் மேற்கொள்ளப்படுகின்றன. பாட்டுப் புத்தகத்தையும் வசனத்தையும் வைத்துச் செய்யப்படும் ஆய்வுகள் இவை.”

தமிழ் சினிமா குறித்து ஒரு புத்தகமும் வரவில்லை என்கிறார்கள் கேள்வியாளர்கள். தமிழ் சினிமா பற்றி முதலில் ஆங்கிலத்தில் புத்தகம் எழுதிய தியோடார் பாஸ்கரன் பதில் என்ன? எம்.எஸ்.பாண்டியன், ராஜன்குறை, வெங்கடேஷ் சக்கரவர்த்தி போன்றோர் ஆங்கிலத்தில் எழுதிய கட்டுரைகள், அமெரிக்க பல்கலைக்கழகம் மற்றும் அவுஸ்திரேலியாவினரால் தொகுத்து ‘ரூட்லெஜ்’ பதிப்பகம் வெளியிடும் புத்தகம் என அழுத்தம் கொடுத்துப் பேசுகிறார். ஓன்று அவர் எழுதியிருக்கிறார் மற்றது ஆங்கிலத்தில் வரவிருக்கிறது. போனால் போகிறது என்று அறந்தை நாராயணனுக்கு ஒரு சான்றிதழ் தருகிறார். பா.திருநாவுக்கரசு, விட்டல்ராவ், செம்புலம் தங்கர்பச்சான், யமுனா ராஜேந்திரன் போன்றவர்கள் எழுதியிருப்பதெல்லாம் என்ன? புண்ணாக்கு பற்றிய கணக்கு வழக்குகள் என அம்ஸன்குமாரும் தியோடார் பாஸ்கரனும் கருதினார்கள் போலும். அரசுப் பதவியில் இருந்தவர்களும் பல்கலைக்கழகங்களும் வெளியிட்டால்தான் அது ஆவணங்கள் ஆகும் போலும். இது ஒரு வரலாற்று மோசடி என்பதைப் பணிவுடன் சுட்டிக்காட்ட வேண்டியிருக்கிறது.

தமிழ் சினிமா ஆய்வுகள் பற்றி நக்கல் பண்ணுவதற்காக பாஸ்கரன் எடுத்துக் கொண்டிருக்கும் தலைப்புக்களைப் பாருங்கள். “திரைப்பாடல்களில் ஜாதி”, “தமிழ் சினிமாவில் பெண்ணியம்” என இவைகளைப் படித்தீர்களேயானால் அவை இலக்கிய ஆய்வுகள் என்பது புலப்படும். அவற்றில் சினிமா ஒரு துளியும் இருக்காது” என்கிறார் பாஸ்கரன். சரி. இப்போது பெண்ணியம் குறித்தும் சாதியம் குறித்தும் விவரணப்படங்களும் குறும்படங்களும் ஆயிரக்கணக்கில் தமிழில் உருவாகியிருக்கிறது. அது பற்றி தியோடார் பாஸ்கரனோ அல்லது எஸ்.ராமகிருண்ணனோ ஏன் மூச்சக்காட்டுவதில்லை? இவர்களைத் தாண்டிய ஒரு சினிமாவும், சினிமா விமர்சனமும், வரலாறு எழுதுதலும் தமிழில் வளர்ந்து கொண்டிருக்கிறது என்பதைப் பதிய வேண்டும் எனும் கோபம் காரணமாகவே சொற்களும் கோபமாக வந்து விழவேண்டியிருக்கிறது.

அரசியல் என்று சொல்வதே ஏதோ கட்சி அரசியல் போலவும், கருத்தியல் என்று சொன்னால் ஏதோ நிலவிய ஸ்டாலினிய வகைப்பட்ட சோசலிசம் போலவும் நினைத்துக் கொண்டிருக்கிறவர்களுக்கு, நாம் முன்வைக்கிற ‘அரசியலையும் கருத்தியலையும்’ உள்வாங்குவது கொஞ்சம் கடினம்தான். நாம் பேசுகிற அரசியல் ழுருடபூவ டேநு¢கூறுணநுளூடபூ-தீமைக்கு எதிரானது குறித்த அரசியல். விமர்சன மார்க்சிய அரசியல். நாம் பேசுகிற கருத்தியல் அறம் சார்ந்த கருத்தியல். தெரிதா பேசும் எதிர்கால அறம் சார்ந்த கருத்தியல். நன்மைக்கும் தீமைக்கும் இடையிலான போரில் நாம் தீமைக்கு எதிராக நிற்கிறோம். அறத்திற்கும் துவேசத்திற்கும் இடையில் நாம் அறத்தின் பக்கம் நிற்கிறோம். .

குறிப்பாகச் சொல்வதானால், அதிகாரத்திற்கு எதிராக விடுதலையின் பக்கம் நாம் நிற்கிறோம். ஆகவேதான், ‘பேட்டில் ஆப் அல்ஜியர்ஸ்’ படமெடுத்த இத்தாலியரான ஜில்லோ பொன்டகார்வோ தனது இறுதி நாட்களில் ‘முதலாளித்துவத்திற்கு எதிரான இயக்கத்திற்கு’ ஆவணப்படம் எடுத்தவராக இருந்தார். போலந்தில் ஸ்டாலினியத்தை விமர்சித்து அரசியல் படங்களை உருவாக்கிய கீஸ்லாவஸ்க்கி இதே காரணத்திற்காகத்தான், அயர்லாந்து விடுதலை பற்றிப் பேசும் கென்லோச்சடன் சேர்ந்து படம் எடுப்பதுதான் தனது கனவு எனச் சொன்னார். அறுபதுகளில் எத்தனை மேதைமையோடு மாவோயிஸட்டுகள் குறித்து கோதார்த் படமெடுத்தாரோ அதே மேதைமையுடன்தான், இன்றும் கோதாரத் இஸ்ரேலினது ஒடுக்குமுறை குறித்த, பொஸ்னிய மனித உரிமை மீறல் குறித்த படமெடுக்கிறார்.

இயக்குனர் மேதைகள் அல்லது ‘மாஸ்டர் பிலிம்மேக்கர்ஸ்’ என்று சொல்லப்படுகிற எல்லா திரைப்பட மேதைகளும் யதார்த்தவாதத்தை முன்வைத்த திரைப்பட மேதைகள்தான். பின்நவீனத்துவம், அந்தத்துவம், இந்தத்துவம் என்று எவர் பேசினாலும், கலை என்பது வாழ்வை மிக அருகில் சென்று, பூச்சுக்கள் அகற்றிப் பார்ப்பதும், தரிசனங்ளை யதார்த்தத்திலிருந்து மக்கள் முன் படைப்பதும் என்றுதான் பேசவேண்டியிருக்கிறது.

இன்று உலகமயமாதல் போக்கிலும், கணிணிமயமான இணைய உலகிலும் அனைத்தும் காரியவாதமாகவும் காசு பார்க்கும் வேலையாகவும் ஆகியிருக்கிறது. அறிவையும் கலைமுயற்சிகளையும் கூட ஒருவர் தனது நிலைபாட்டுக்குச் சாதுரியமாக வளைத்துவிட முடியும். இவர்கள் வெகுஜன ஊடகங்களிலும், அதிகாரமிக்க இடங்களிலும், கல்வித்துறை சார்ந்த இடங்களிலும் இருப்பதன் மூலம் கீழ்மட்ட சமூகத்தில் நடக்கிற அல்லது தமது விருப்பார்வம் இல்லாத தளங்களில் நடக்கிற அனைத்தையம் இல்லாமல் செய்கிற காரியங்களையும் ஆற்ற முடியும். தமிழ் சினிமா விமர்சனச் சூழல் இவ்வாறுதான் இருக்கிறது. பன்முக உலக சினிமா குறித்த அறிவு இல்லாத நிலையிலும் சினிமாக் கோட்பாடுகளினிடையிலான மோதல்களை அறியாத நிலையிலும், வெறுமனே குறிப்பிட்ட வரலாறு மட்டுமே தெரிந்த ஒருவர் இங்கு தன்னை அதிகாரப்பூர்வ விமர்சகர் ஸ்தானத்தில் முன்னிறுத்திக் கொள்ளவும் முடியும். பிறரது உழைப்பினைத் தன்பெயரில் போட்டுக்கொள்கிறவர்கள் இங்கு மிகப்பெரிய சினிமா அறிஞர்களாகத் தம்மை முன்னிறுத்திக் கொள்ள முடியும்.

இவர்களது எழுத்துக்களில் கடந்த பத்தாண்டுகளில் தமிழில் நடந்து வந்திருக்கும் மாற்றுச் சினிமா முயற்சிகளின் முக்கியமான வகையினமான விவரணப்படம் மற்றும் குறும்படத் தளத்தில் நடந்திருக்கும் மாற்றங்களைப் பதிவு செய்ததைப் பார்க்கவே முடியாது. கோதார்த் சொன்னமாதிரி, காகிதமும் பேனாவும் போல காமெரா எனும் கருவி இன்று ஆகியிருக்கும் சூழலில், சமூக நடவடிக்கையின் அங்கமாக ஆகியிருக்கும் சினிமாவை அங்கீகரிப்பதில் இவர்களுக்கு நிறையப் பிரச்சினைகள் இருக்கிறது. அரசியல் சாரா அறிவுஜீவிகளாகவும், அரசியல் கடந்த கலை விற்பன்னர்களாகவும், அழகியல் மேதைகளாகவும் தம்மை முன்னிறுத்தி, இவர்கள் கட்டமைக்கிற தம்மைக் குறித்த பிம்பங்கள், இவர்கள் பற்றி முழுமையாக அறிய வருகிறபோது தகர்ந்து போகும்.

ஆகவேதான், இவர்கள் தமக்கு வெளியில் நடந்து கொண்டிருக்கிற எவை பற்றியும் கருத்துச் சொல்லவோ, அங்கீகரிக்கவோ தயக்கம் காட்டுகிறார்கள். காலகாலமாக இவர்கள் மாதிரியான கலா மேதைகள் அடிநிலையிலிருந்து அடிக்கிற சூறைக்காற்றில் அள்ளுண்டுதான் போவார்கள். திட்டமிட்டு திரும்பத் திரும்பச் சில பெயர்களையே உச்சரித்துக் கொண்டிருக்கும் தமிழ் விமர்சன மேதாவிகள் என்று சொல்லிக் கொள்கிறவர்களின் முகவரியும் இவ்வாறான நிலையைத் தான் எட்டும் என்பது மட்டும் உறுதி. ஆனால் என்ன, உலக சினிமா, திரைப்படவிழா, விமர்சன அழகியல், வெகுஜனக் கலை, பொழுது போக்குக்கலை பற்றியெல்லாம் நாம் மறுபடி மறுபடி விழிப்பு நிலையுடன் மறுவரையறை செய்து கொண்டே இருக்க வேண்டும்.

பிரெடரிக் ஜேம்ஸன் சொன்ன மாதிரி ‘அறுதிப் பகுப்பாய்வில் அனைத்தும் அரசியல்தான்’ என்பதை நாம் சதா ஞாபகம் வைத்துக் கொண்டிருப்பதுதான் இன்று முக்கியமானது.



நன்றி ; கீற்று

søndag den 29. juni 2008

சிங்கள திரைப்படத் துறையில் தமிழர்களுக்கு மரியாதை இருக்கு. ஒளிப்பதிவாளர் சந்தோஷ்

மதுரையை பூர்வீகமாகக் கொண்ட சந்தோஷ், நம்பிக்கைத் தரும் இளைய தலைமுறை ஒளிப்பதிவாளர்களில் ஒருவர். விளம்பரப் படங்கள், குறும்படங்கள், திரைப்படம் என பரந்துபட்டது இவர் புழங்கும் வெளி. சிங்கள திரைப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்த முதல் தமிழர் என்ற வகையில் இவரது அனுபவம் தனித்துவமானது. உரையாடலில் வெளிப்படும் மாணவர்களுக்கேயுரிய ஆர்வமும், மேதைகளுக்கேயுரிய ஞானமும் அவருடனான சந்திப்பை இனிமையான அனுபவமாக்கியது.

* தொழிற்கல்வி படித்த நீங்கள் திரைத்துறைக்கு வந்தது எப்படி?

மதுரை தமிழ்நாடு பாலிடெக்னிக்கில்தான் நான் பிளாஸ்டிக் என்ஜினியரிங் படித்தேன். அப்போதே சினிமாவில் ஆர்வம் இருந்தது. பிலிம் இன்ஸ்டிட்யூட்டில் படிக்கணும்கிறதுதான் என்னோட ஆசை. அதை வீட்ல சொல்ல முடியாத சூழல்; பயம். படிப்பு முடிந்ததும் மெடிக்கல் ரெப் வேலை. நல்ல சம்பளம். என்னால தனியா சம்பாதிக்க முடியும்னு வீட்ல நம்பிக்கை வந்த பிறகு, என்னோட சினிமா ஆசையை சொல்லி, அவங்க சம்மதத்தோடு சென்னை வந்தேன்.

* இரண்டாயிரத்துக்குப் பிறகு சென்னை வந்த நீங்க, குறுகிய காலத்தில் ஒளிப்பதிவாளர்ங்கிற நிலையை எட்டியிருக்கிங்க. இறுக்கமான தமிழ் சினிமாத் துறையில் இது அபூர்வம் இல்லையா?

சினிமாதான் எல்லோருக்கும் பொதுவானதே தவிர சினிமா இன்டஸ்ட்ரி அப்பிடி இல்லை. போராட்டங்களை எதிர்கொ ள்ள முடிந்தால் மட்டுமே நீங்க சினிமா இன்டஸ்ட்ரியில் நுழையவும், கவுரவமான ஒரு இடத்தை பிடிக்கவும் முடியும். அதை தக்கவச்சுக்கிற போராட்டங்கள் வேற. பெரிய அளவில் போராட்ட நெருக்கடிக்கு ஆளாகாமல் என்னை காத்தது, ஐயப்பன். இவர் இயக்குனர் பாலாவோட தம்பி.மதுரையில் இருக்கும்போதே பழக்கம். அவர்தான் என்னை கேமராமேன் ஏ.எஸ்.செந்தில்குமார் சாரிடம் அறிமுகப்படுத்தி வச்சார். அவருடன் நிறைய விளம்பரப் படங்களுக்கு வேலை செய்தேன்.அந்த அனுபவம்தான் இன்னைக்கும் எனக்கு ஆதாரமா இருக்கு. அப்புறம் கேமராமேன் சாந்த மூர்த்தி சார். கேமராமேனா என்னோட குருன்னா அது மணிகண்டன் சார். அவருடன் 'Main Hoona' ஹிந்திப் படத்துல வேலை பார்த்தேன். அப்புறம் தமிழல் 'அந்நியன்'. இதுதவிர நிறைய விளம்பரப்படங்கள். அவர்கிட்ட குறுகிய காலம் பணி புரிந்திருந்தாலும், இன்றைய நவீன தொழில்நுட்பம் பத்தி கத்துக் கிட்டது அவர் கிட்டதான். சினிமால தொழில்நுட்பம் தவிர்த்து நான் கத்துகிட்டது, சினிமாவுக்கு வர்றவங்க சுதந்திரமா இருக்கணும். பொருளாதாரரீதியா அவங்களை சார்ந்திருக்காத குடும்பம் ரொம்ப முக்கியம். அப்புறம் நண்பர்கள். பொருளாதாரரீதியா என்னை எதிர்பார்க்காத குடும்பமும், உதவி செய்ய தயாராயிருக்கிற நண்பர்களும் அமைந்ததுதான் என்னோட இந்த குறுகியகால வளர்ச்சிக்கு அடிப்படைனு நினைக்கிறேன்.

* சினிமா கேமராமேன்கள் அனேகமாக எல்லோருமே விளம்பரப் படங்களில் கவனம் செலுத்துறாங்க. நீங்களும் விளம்பரப் படங்கள் செய்திருக்கிங்க, இல்லையா?

ஜான்சன் பேபி ஆயில், எல்ஜி, ஃபா டால்கம் பவுடர், ஹமாம் சோப், விட்கோ லக்கேஜ்னு எழுபதுக்கும் மேல விளம்பரப் படங்களுக்கு கேமராமேனா வொர்க் பண்ணிருக்கேன். சினிமால இரண்டரை மணி நேரத்துல ஒரு கேள்வியை எழுப்பணும் அல்லது ஒரு மெசேஜ் சொல்லணும். விளம்பரப் படத்துக்கு முப்பதே செகண்ட்ஸ். நீங்க புராடக்டை எக்ஸ்போஸ் பண்ணணும் அத்தோடு அதை வாங்கவும் வைக்கணும். அந்தவகையில் விளம்பரப் படங்களுக்கு துல்லியமான கிரியேடிவ்சென்ஸ் தேவைப்படுது.

* உலகத்தரம் வாய்ந்த சினிமா, உலகத்தரம் வாய்ந்த ஒளிப்பதிவு என்பதான சொல்லாடல்கள் தமிழில் அதிகமாக கேட்கத் தொடங்கியிருக்கு. இது குறித்து என்ன நினைக்கிறீங்க?

வரவேற்க வேண்டிய ஆரோக்கியமான விஷயம். என்னளவில் உலக சினிமா குறித்த அறிவு முக்கியமானதா நினைக்கிறேன். உலக சினிமாக்களை, பெரிய masters-ஸோட படங்களை பார்க்கும்போதுதான் நாம எந்த இடத்துல தேங்கி நிற்கிறோம்ங்கிறதை தெரிஞ்சுக்க முடியுது. குரோசாவா அப்புறம் தார்க்கோவ்ஸ்கியோட படங்கள் பார்க்கும்போது, இவங்கதான்.... இவங்க மட்டும்தான் விஷுவல் மாஸ்டர்ஸ்னு சொல்லத் தோணுது. அதே மாதிரி கோடாட், ஹிட்ச்ஹாக், பிரிட்ஸ் லாங்க் முப்பதுகளிலும் ஐம்பதுகளிலும் என்ன செய்தாங்களோ அதைத்தான் நாம இப்போ பெரிய விஷயமா செஞ்சுகிட்டிருக்கோம். இங்கே புதுசுனு எதுவும் இல்லை. அவங்க சோதனை முயற்சி செய்ததைதான் நாம திரும்ப பண்றோம். அந்தப் படங்களில் இருந்த நேர்மை, செறிவு இப்போ நம்மிடம் இருக்கானு கேட்டால், இல்லை.

* இந்தியாவில் உலகத்தரம் வாய்ந்த சினிமாவை விட, இயக்குனர்களைவிட ஒளிப்பதிவாளர்களே அதிகம் காணக் கிடைக்கிறார்கள். இது எதனால்?

ஒளிப்பதிவுக்கு மொழி தடையில்லை. இதையே பிரதான காரணமா நான் நினைக்கிறேன். அப்புறம் விளம்பரப் படங்கள், ஆவணப் படங்கள்னு பல்வேறு வடிவங்களில் ஒளிப்பதிவாளர்கள் வேலை செய்கிறார்கள். குறிப்பா டெக்னாலஜியுடன் சேர்ந்து பயணிக்கிறாங்க. இது ரொம்ப முக்கியம். ஒரு லென்ஸை பயன்படுத்தி ஒரு திரைக்கதையை மேம்படுத்த முடியாது. ஒரு கேமராவை வச்சு ஒரு நடிகனோட நடிப்பை மெருகேத்த முடியாது. ஆனா, அட்வான்ஸான ஒரு லென்ஸை, கேமராவை, பிலிமை வச்சு காட்சியை பிரமாதப்படுத்த முடியும். சூப்பர் 35, சூப்பர் 16 தொழில்நுட்பம் எல்லாம் இதுக்கு உதாரணங்கள்.

* சிங்கள சினிமாவில் பணிபுரிந்த முதல் கேமராமேன் நீங்கதான் இல்லையா?

அப்படி சொல்ல முடியாது. பலர் வொர்க் பண்ணியிருக்காங்க. ஆனா, முதல் முதலா ஒரு சிங்கள பியூச்சர் பிலிமுக்கு முழுமையா ஒளிப்பதிவு செய்தது நான்தான்னு சொல்லலாம்.

* இந்த வாய்ப்பு எப்படி கிடைத்தது?

லண்டன் புரொடியூசர் ஒருத்தருக்காக ஆல்பம் பண்ணுனேன். அதைப் பார்த்து குறும்படம் பண்ண இலங்கையிலிருந்து வாய்ப்பு வந்தது. 'ட்ரீம் கில்லர்' ங்கிறது குறும்படத்தோட பெயர். அப்புறம் 'விழி'ங்கிற குறும்படத்துக்கு ஒளிப்பதிவு செய்தேன். இதில் 'விழி' முழுமையா இலங்கையில் ஷுட் செய்யப்பட்டது. அந்த அனுபவம் வித்தியாசமானது. இலங்கை அரசியல் நெருக்கடிகளால் ஏற்பட்டது, படப்பிடிப்பில் ஏற்பட்டதுனு இருவேறு அனுபவங்கள் அவை.

* இரண்டு அனுபவங்களையும் கொஞ்சம் விரிவாக சொல்ல முடியுமா?

போர் பதற்றம் காரணமா இலங்கையின் முக்கிய சாலையான A9- ஐ மூடிட்டாங்க. இதனால் கொழும்பிலிருந்து ஒரு குறிப்பிட்ட எல்லை வரைதான் நீங்க போக முடியும். அப்புறம் செக்யூரிட்டி. ஒருகிலோமீட்டர் போவதற்குள் நாலுமுறை காரிலிருந்து இறக்கி முழுமையா செக் பண்றாங்க. கேட்கிற போதெல்லாம் பாஸ்போர்ட்டை காண்பிக்கணும். இந்த செக்யூரிட்டியும் இரண்டு காரணங்களுக்காக. ஒண்ணு, அவங்க பாதுகாப்புக்கு. இன்னொண்ணு நம்ம பாதுகாப்புக்கு.

* தமிழர்கள் என்று வரும்போது தொந்தரவுகள் அதிகமிருக்குமே?

இலங்கை மாதிரியான ஒரு நாட்டில் அது எதிர்பார்க்கக் கூடியதுதான். 'விழி' படத்தோட கதைப்படி, ராணுவ வீரனின் படம் தேவை. 'விழி' டைரக்டர் செல்வன் அதுக்காக ஸ்டுடியோவுக்கு போயிருக்கார். அங்க இருந்த சிங்கள நபர் போட்டோவை பார்த்துட்டு, ஏதோ தமிழ் போராளி வந்திருப்பதா நினைச்சு, போலீஸ்கிட்ட சொல்ல, செல்வனை அரெஸ்ட் பண்ணிட்டாங்க. இந்த விவரமே ஒரு வாரம் கழிச்சுதான் தெரிய வருது. கொழும்பிலுள்ள தமிழ் அரசியல்வாதிகள் மூலமா, உண்மையை விளக்கி, செல்வனை வெளியே கொண்டு வர்றதுக்குள்ள 33 நாட்கள் ஓடிப் போயிடுச்சி. அந்தப் படத்தை எடுக்க இதைவிட குறைவான நாட்கள்தான் எங்களுக்கு தேவைப்பட்டது. ஷுட்டிங் அனுபவமும் வித்தியாசமானது. டிராக் அண்டு டிராலி, லைட்ஸ் உள்பட எல்லா எக்யூப்மெண்ட்ஸுமே நவீனமானவை. எக்யூப்மெண்ட்ஸில் நம்மைவிட அட்வான்ஸா இருக்காங்க. ஆனா, அதை எப்படி கையாள்றதுங்கிறது அவங்களுக்கு தெரியலை. இன்னைக்கு ஒரு ஷாட் எடுத்திட்டு நாற்பதுநாள் கழிச்சு அதன் கண்டினியூட்டி எடுக்கிறது தமிழில் சாதாரணம். அவங்களுக்கு அது இன்னும் கைகூடி வரலை. ஒரு நடிகர் இல்லைனா, ஒரு எக்யூப்மெண்ட் இல்லாமப்போனா அந்தச் சூழலை சமாளிச்சு எப்படி ஷாட் எடுப்பது என்பதில் அவங்களுக்கு இன்னும் குழப்பம் இருக்கு.

* சிங்களர்கள் மிகுந்த இலங்கை சினிமாவில் தமிழர்களின் நிலை எப்படியிருக்கு?

நான் ஒளிப்பதிவு செய்த முதல் சிங்களப் படம் 'லீடர்.' ரஞ்சன் ராமநாயக்க நடித்தது. இங்க ரஜினி மாதிரி அங்கே ரஞ்சன் ராமநாயக்க. இலங்கை சூப்பர் ஸ்டார். அவர் கடைசியாக இயக்கி நடிச்ச இரண்டு படமும் சூப்பர் ஹிட்! பொன்னம்பலம் ஆரூரான், நிலாப்ரியன் தெளபிக் என்கிற இரண்டு இலங்கை தமிழர்கள்தான் தயாரிப்பு. தமிழ்நாட்டிலிருந்து வர்ற தமிழர்கள் நம்மைவிட திறமைசாலிகள்ங்கிற புரிதல் சிங்களர்களுக்கு இருக்கு. அதனால கவுரவமா நடத்துறாங்க.

* சிங்கள திரைத்துறையில் இலங்கை தமிழர்களின் பங்களிப்பு எப்படியிருக்கு?

ஆன் ஸ்கிரீனை விட ஆஃப் ஸ்கிரீன் வேலைகளில் அதிக தமிழர்களை காண முடியுது. தயாரிப்பாளர்களாக, இயக்குனர்களாக, டெக்னிஷியன்களாக நிறைய பேர் இருக்காங்க. சக்தி டி.வி.ங்கிற தமிழ் சானல் ஒளிபரப்பாகுது. இலங்கை அரசின் ரூபவாகினியில் 'சேனல் ஐ' ங்கிற முழுக்க தமிழ் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகிற சானல் ஒண்ணும் இருக்கு. அரசியல் தளத்திலும், சமூக அளவிலும் இருக்கிற பதற்றமும், விரோதமும் சிங்கள திரைத்துறையில் பலவீனமான அளவிலே காணப்படுவது ஆச்சரியமான நல்ல விஷயம். இதை வச்சு பிற விஷயங்களை எடைபோடக் கூடாதுனே நினைக்கிறேன்.

* தமிழர்கள் அதிகம் இருந்தும் தமிழ்ப் படங்கள் இலங்கையில் தயாரிக்கப்படுவதற்கான அறிகுறியே இல்லையே?

இலங்கையில் தயாராகிற சிங்களப் படங்கள் ஒப்பீட்டளவில் நமது தமிழ்ப் படங்களை விட தரத்தில் ரொம்ப பலவீனமானவை. கமர்ஷியல் படம் பண்ணுவதில் அவங்க பதினைஞ்சு வருஷம் பின்தங்கியிருப்பதாகவே சொல்லலாம். தமிழ்ப் படங்கள் எடுத்தாலும் நிலைமை பெரிதாக மாற வாய்ப்பில்லை. தமிழ்நாட்டில் தயாராகிற படங்கள் இலங்கையில் வெளியாகிற சூழலில், இலங்கையில் தயாரிக்கிற தமிழ்ப் படம் அதோடு ஈடுகொடுக்க முடியுமாங்கிற நியாயமான சந்தேகம் தயாரிப்பாளர்களுக்கு இருக்கு. தமிழ்ப் படங்கள் இலங்கையில் தயாராகாததற்கு இதுதான் காரணம்னு நினைக்கிறேன்.

* தரத்தைப் பற்றி பேசும்போது, சிங்கள மொழியில் மாற்று சினிமா ஆரோக்கியமா இருக்கு இல்லையா?

நிச்சயமாக! நாம இதுவரை பேசுனது மெயின் ஸ்ட்ரீம் சினிமா பற்றி. மாற்று சினிமாவை பொறுத்தவரை பிரசன்ன விதனாகே போன்ற இயக்குனர்கள் உலகத் தரம் வாய்ந்த படங்களை தொடர்ச்சியா தந்துகிட்டிருக்காங்க. இவங்க படங்களில் இனப் பிரச்சனையும், அது எளிய மனிதர்களின் வாழ்வை துண்டாடும் அவலமும் நேர்மையா பதிவு செய்யப்படுது. மெயின் ஸ்ட்ரீம் படங்களில் நீங்க இதை பார்க்க முடியாது.

* நேர்மை என்று வரும்போது இயக்குனர்கள் அதிகார அச்சுறுத்தல்களுக்கு ஆட்படுவது தவிர்க்க முடியாதது ஆகிவிடுமே?

பிரசன்ன விதனாகே இயக்கிய முக்கியமான திரைப்படம், 'டெத் ஆன் ஏ ஃபுல் மூன் டே.' ஒரு வயதானவர். அவரது ஒரே மகன் ராணுவத்தில் பணிபுரிகிறான். ஒருநாள் வயதானவருக்கு, அவரது மகன் இறந்து விட்டதாக தகவல் வருகிறது. இதனை அவர் நம்ப மறுக்கிறார். மகனின் சடலம் இருக்கும் சவப்பெட்டியை ராணுவம் அனுப்புகிறது. மகனின் உடலை கடைசியாகப் பார்க்க விரும்புகிறார் முதியவர். ராணுவம் மறுக்கிறது. சவப் பெட்டி திறக்கப்படாமலே புதைக்கப்படுகிறது. மகன் இன்னும் உயிரோடுதான் இருக்கிறான் என நம்பும் அந்த வயதான தந்தை சவக்குழியை தோண்டி சவப்பெட்டியை எடுக்கிறார். உள்ளே சடலத்துக்குப்பதில் கற்கள் இருக்கின்றன. இந்தப் படத்தை இலங்கை அரசு தடை செய்தது. உலகப்பட விழாக்களில் பங்கேற்று பல விருதுகள் வாங்கிய பிறகு, வேறு வழியில்லாமல் படத்தை இலங்கையில் வெளியிட அரசு அனுமதித்தது. நேர்மையாக படம் எடுப்பவர்களின் நிலைமை உலகெங்கும் இப்படித்தான் இருக்கு. சிங்களப்படம் பண்ணப்போனதில் கிடைத்த நல்ல விஷயங்களில் ஒன்று பிரசன்ன விதனாகேயை சந்தித்தது. இலங்கையில் அவரை சந்திக்க முடியாமல் பிறகு சென்னைக்கு அவர் வந்தபோது சந்திச்சேன். மறக்க முடியாத அனுபவம் அது.

* ஒப்பீட்டளவில் சிங்கள மெயின் ஸ்ட்ரீம் படங்களைவிட தமிழ்ப் படங்கள் எல்லா வகையிலும் சிறப்பா இருக்கு. ஆனா, மாற்று சினிமா என்று வரும்போது பிரசன்ன விதனாகே மாதிரி இங்கே சுட்டிக் காட்ட ஒருவர்கூட இல்லையே. இதனை எப்படி புரிந்து கொள்வது?

இலங்கையில் நடப்பது போன்ற போரையோ, அழிவையோ இதுவரை நாம எதிர் கொண்டதில்லை. நெருக்கடியும் உத்தரவாதமில்லாத வாழ்க்கையின் அலைக்கழிப்பும்தான் இலங்கையின் மாற்று சினிமாவுக்கான ஊற்றுக்கண் என்றால், இன்னொன்று நேர்மை. நாம, எப்படி பார்வையாளர்களை ஏமாற்றலாம், கைதட்ட வைக்கலாம்னு யோசிக்கிறோமே தவிர, ஒரு பிரச்சனையை ஆழமா, நேர்மையா அணுகியதே இல்லை. அதிகார அச்சுறுத்தல் குறைவான நமது சினிமாவுடன் ஒப்பிடும்போது, இலங்கையின் மாற்று சினிமா இயக்குனர்கள் குறைந்தபட்ச நேர்மையும் பெரிய விஷயம்தான்! இலங்கையிலும் சரி, ஈரானிலும் சரி, ஆப்பிரிக்க நாடுகளிலும் சரி, அடக்குமுறைகளை தாண்டிதான் நல்ல சினிமா வந்துகிட்டிருக்கு.

* மொத்தமாக பார்க்கையில் சிங்கள மொழி படங்களில் பணிபுரிந்தது திருப்தியளிக்கிறதா?

நான் ஒளிப்பதிவு செய்த 'ட்ரீம் கில்லர்' நியூயார்க் மற்றும் டொரண்டோ குறும்பட போட்டிகளில் பெஸ்ட் சினிமோட்டோகிராஃபிக்கான விருதை பெற்றிருக்கு. அதேமாதிரி 'விழி' கனடா சர்வதேச குறும்பட போட்டியில் சிறந்த சினிமோட்டோகிராஃபிக்கான விருதை எனக்கு பெற்றுத் தந்தது. பிரான்ஸ் குறும்பட விழாவுக்கு 'விழி' சினிமோட்டோகிராஃபி பிரிவில் நாமினேட் செய்யப்பட்டிருக்கு. தவிர, நமக்கு பழக்கமில்லாத மொழி, இடம், மனிதர்கள்னு சிங்களப்பட அனுபவம் தந்த செழுமையான பகுதிகள் நிறைய. அங்கே எங்கு கேமராவை வைத்தாலும் ஒரு நல்ல காட்சி, காம்போஸிஷன் கிடைக்கும். அந்தளவு இயற்கை எழில்மிகுந்த நாடு.

இனப்படுகொலைகளை மட்டும் நீக்கிவிட்டால், அற்புதமான நாடு அது!



நன்றி - சினி சவுத்

torsdag den 26. juni 2008

யாரை, எப்போது புகழலாம்!

ஒருத்தரைப் புகழ்வதற்குக் கூட நேரம், காலம் இருக்கிறதா என்ன? கட்டாயம் இருக்கிறது என்கிறார் ஔவையார்.

நேசனைக் காணாவிடத்தில் நெஞ்சாரவே துதித்தல்
ஆசானை எவ்விடத்தும்
அப்படியே வாச மனையாளைப் பஞ்சனையில்
மைந்தர் தம்மை நெஞ்சில்
வினையாளை வேலை முடிவில்! -

ஔவையார்விளக்கம்:-
நண்பனைப் புகழ வேண்டுமானால் அவனைக் காணாதபோது மனமாரப் புகழ வேண்டுமாம்;
ஆசிரியர் என்றால் அவரை நேரிலும், மறைவிலும் எப்போதும் துதிக்கலாம்;
மனைவியைப் பஞ்சனையில் புகழ வேண்டுமாம்;
பெற்ற பிள்ளைகளைப் புகழ்வது மனதுக்குள் தானாம்;
வேலைக்காரர்களை, அவர்களது வேலைகளை முடித்த பிறகுதான் புகழவேண்டுமாம்.

நன்றி: தமிழோடு..

tirsdag den 10. juni 2008

இன்பத் தமிழ் - பாரதிதாசன்

தமிழுக்கும் அமுதென்று பேர் -
அந்தத்தமிழ் இன்பத் தமிழ் எஙகள் உயிருக்கு நேர்!
தமிழுக்கு நிலவென்றுபேர் -
இன்பத்தமிழ் எங்கள் சமுகத்தின் விளைவுக்கு நீர்!
தமிழுக்கு மணமென்று பேர் -
இன்பத்தமிழ் எங்கள் வாழ்வுக்கு நிருமித்த ஊர்!தமிழுக்கு மதுவென்று பேர் -
இன்பத்தமிழ் எங்கள் உரிமைச்செம் பயிருக்கு வேர்!
தமிழ் எங்கள் இளமைக்குப் பால் -
இன்பத்தமிழ் நல்ல புகழ்மிக்க புலவர்க்கு வேல்!
தமிழ் எங்கள் உயர்வுக்கு வான் -
இன்பத்தமிழ் எங்கள் அசதிக்குச் சுடர்தந்த தேன்!
தமிழ் எங்கள் அறிவுக்குத் தோள் -
இன்பத்தமிழ் எங்கள் கவிதைக்கு வயிரத்தின் வாள்!
தமிழ் எங்கள் பிறவிக்குத் தாய் -
இன்பத்தமிழ் எங்கள் வளமிக்க உளமுற்ற தீ!

mandag den 26. maj 2008

சுஜாதாவின் 'வயது வந்தவர்களுக்கு' ....

உலகில் மிகச்சுலபமான வேலை அறிவுரைப்பது. கஷ்டமான வேலை, கடைப்பிடிப்பது. திருவள்ளுவர் காலத்திருந்து தமிழில் இருக்கும் அறிவுரை நூல்களுக்கு, தமிழ்நாட்டில் இன்று ஒரு அயோக்கியன் கூட இருக்கக்கூடாது.பதினாறிலிருந்து பத்தொன்பது வயது வரைதான் இளைஞர்கள்.

அதன்பின் அவர்களுக்கு முதிர்ச்சியும் பிடிவாதாமும் வந்து அவர்களை மாற்றுவது கஷ்டம். பதினாறே கொஞ்சம் லேட் தான். அஞ்சு வயசிலேயே ஒரு குழந்தையின் குணாதிசயங்கள் முழுவதும் நிலைத்துவிடுகின்றன என்று மனோதத்துவர்கள் சொல்கிறார்கள். இருந்தும் பதினாறு ப்ளஸ்-யை முயற்சிப்பதில் தப்பில்லை.

இந்த அறிவுரைகள் இரு பாலருக்கும் பொது(ஆண்-பெண்) இனி அவை.

1. ஒன்றின் மேல் நம்பிக்கை வேண்டும், எதாவது ஒன்று. உதாரணம் கடவுள், இயற்கை, உழைப்பு, வெற்றி இப்படி எதாவது ஒரு நம்பிக்கை நங்கூரம் போல. கேள்வி கேட்காத நம்பிக்கை. கேள்வி கேட்பது சிலவேளை ரொம்ப இம்சை. நவீன விஞ்ஞானம் அதிகப்படியாகக் கேள்வி கேட்டு இப்போது தவித்துக் கொண்டிருக்கிறது.

2. அப்பா, அம்மா இரண்டு பேரும் வேலை சொல்வது பல சமயங்களில் கடுப்பாக இருக்கும். ஒருமாறுதலுக்கு அவர்கள் சொல்வதைச் செய்து பாருங்கள். அவர்கள் கேட்பது உங்களால் செய்யக்கூடியதாகவே இருக்கும். ஏழுகடல் கடந்து அசுரனின் உசிர் நிலையைக் கேட்க மாட்டார்கள். பொடிநடையாகப் போய் நூறு கிராம் காப்பி பவுடர் (அ) ரேஷன் கார்டு புதுப்பித்தல் இப்படித்தான் இருக்கும்.

3. முன்று மணிக்குத் துவங்கும் மாட்டினி போகாதீர்கள். க்ளாஸ் கட் பண்ண வேண்டி வரும். தலைவலி வரும். வெளியே வந்ததும் பங்கி அடித்தாற்போல் இருக்கும். காசு விரயம். வீட்டுக்குப் போனதும் பொய் சொல்வதற்கு ரொம்ப ஞாபக சக்தி வேண்டும். இந்த உபத்திரவத்துக்கு உண்மை சொல்லி விடுவது சுலபம். மாட்டினி போகாமல் இருப்பது அதை விட. கிளர் ஓளி இளமை என்று ஆழ்வார் சொல்லும் இளமை, ஓளிக் கீற்றைப் போல மிகவும் குறைந்த காலம், அதை க்யூ வரிசைகளிலும் குறைபட்ட தலைவர்களுக்காகவும் விரயம் செய்யாதீர்கள்.

4. நான்கு பக்கமாவது ஒரு நாளைக்குப் பொது விஷயங்களை படியுங்கள்.பொது விஷயங்கள் என்றால் கதை சினிமா, காதல் இல்லாதவை. உதாரணம் - யோக்கியமான செய்தித்தாள், மற்றபேரைப் பற்றிக்கவலைப்படும் பத்திரிகைகள் அல்லது லைப்ரரியிலிருந்து ஒரு புத்தகம் நான் ஒரு நாளைக்கு நாலு பக்கம் தான் படிக்கிறேன். அதுவே வருஷத்துக்கு ஆயிரத்து ஐந்நூறு ஆகிவிடுகிறது.

5. ஐந்து ரூபாய் சம்பாதித்துப் பாருங்கள்.சொந்தமாக உங்கள் உழைப்பில், முயற்சியில். யோக்கியமாக, மனச்சாட்சி உறுத்தாமல். அடுத்த முறை அப்பாவிடம் முன்னூறு ரூபாய்க்கு ஸ்னீக்கர்ஸ், சுடிதார் கேட்கு முன்.

6. இந்தப் பத்திரிகையைப் படிக்கும் நிலைமை பெற்ற நீங்கள் இந்திய சனத்தொகையின் மேல்தட்டு ஆறு சதவிகித மக்களில் ஒருவர். அன்றாடம் சோற்றுக்காக அலையும், வாரப் பத்திரிகை படிக்க வசதியில்லாத கோடிக் கணக்கான மக்களைத் தினம் ஒரு முறை பாத்ரூமில் அல்லது படுக்கப்போகு முன் எண்ணிப் பாருங்கள்.

7. வாரத்தின் ஏழாவது தினமான ஞாயிறன்று என்ன செய்தாலும் காதல் பிஸினஸ் வேண்டாம். காதலுக்கு ரொம்பச் செலவாகும். மனம், வாக்கு, காயம், ( உடல்) எல்லாவற்றையும் ஆக்கிரமிக்கும் தீ அது. பொய் நிறையச் சொல்ல வேண்டும். வினோதமான இடங்களில் காத்திருக்க வேண்டும். இந்த வயசில் நாசமாய்ப்போன படிப்புத்தான் உங்களுக்கு முக்கியம். குறிப்பு: பெண்களை சைட் அடிப்பதும், கலாட்டா பண்ணுவதும், அவர்களுக்குக் கர்சீப் முதலியன ரோடிலிருந்து பொறுக்கிக் கொடுப்பதும், உபத்திரவமில்லாத கவிதைகள் எழுதுவதும், காதலோடு சேர்த்தியில்லை.

8. எட்டு முறை மைதானத்தைச் சுற்றி ஓடினால் எந்தச் சீதோஷ்ணமாக இருந்தாலும் நெற்றி வியர்வை அரும்பும். எதாவது தேகப் பயிற்சி செய்யவும். வெளி விளையாட்டு. கடியாரத்துக்கு சாவி கொடுப்பதோ சீட்டாடுவதோ தேகப் பயிற்சி ஆகாது. எதையாவது தூக்குங்கள் எதையாவது வீசி எறியுங்கள். உங்கள் உடலில் ஊறும் உற்சாகத்துக்கு ஓர் ஆரோக்கியமான வடிகால் தேவை. ராத்திரி சரியாகத் தூக்கம் வரும். கன்னா பின்னா எண்ணங்கள் தவிர்க்கப்படும். ஒழுங்காகச் சாப்பிடத்தோன்றும். பொதுவாகவே சந்தோஷமாக இருக்கும். யாரையும் மனத்திலோ உடலிலோ தாக்கத் தோன்றாது.

9. ஒன்பது மணிக்குள் வீட்டுக்கு வரவும். மிஞ்சிப் போனால் ஒன்பது மணி இரண்டு நிமிஷம். டி.வி.யில் அசட்டு நாடகங்கள் எல்லாம் ஓய்ந்து இந்தி ஆரம்பித்து அணைத்திருப்பார்கள். குழந்தைகள் தூங்கியிருக்கும். ஒரு மணி நேரமாவது சுத்தமாகப் பாடப் புத்தகம் படிக்கலாம். படித்த உடனே ஓரு முறை பார்க்காமல் எழுதிவிடுங்கள். ராத்திரி பிறர் வீட்டில் தங்கவே தங்காதீர்கள். அங்கிருந்து ஆரம்பிக்கும் வினை.

10. படுக்கப் போகும் முன் பத்து மிஷமாவது அம்மா, அப்பா, அண்ணன், தங்கை யாருடனாவது பேசவும். எதாவது ஓர் அறுவை ஜோக் அல்லது காலேஜில் இன்று நடந்தது. அல்லது நாய்க்குட்டி அல்லது எதிர்வீட்டில் காலாட்டி மாமா. சப்ஜெக்ட் முக்கியமில்லை. பேசுவது தான்.

நன்றி: குமுதம் & தேசிகன்.

mandag den 5. maj 2008

குற்றம் கண்டுபிடிக்கும் குணம் - சுவாமி சுகபோதானந்தா

எதற்கெடுத்தாலும் குற்றம் கண்டுபிடிக்கும் குணம் நம்மில் பலருக்கு இருக்கிறது. அடுத்தவர் செய்யும் குற்றங்களைக் கண்டுபிடிப்பதில் அப்படியொரு அலாதியான சந்தோஷம். இப்படிக் குற்றம் கண்டுபிடிப்பதையே வழக்கமாக வைத்துக் கொண்டிருந்தால் நாளடைவில் அது போதை வஸ்து மாதிரி ஆகி, நமது அறிவுப் பார்வையை குறுகலாக்கிவிடும்.

தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரியும் பைனான்ஸ் மானேஜர் ஒருவர் நடந்து போய்க் கொண்டிருந்தபோது திறந்திருந்த டிரெயினேஜ் பள்ளத்துக்குள் விழுந்துவிட்டார். குடலைப் புரட்டி எடுக்கும் சாக்கடை நீரில் கழுத்துவரை மூழ்கிய நிலையில் அவர் தத்தளித்துக் கொண்டிருந்தபோது, அந்தப் பக்கமாக அவரது அலுவலகத்தில் பணிபுரியும் மார்க்கெட்டிங் எக்ஸிகியூடிவ் வந்தார்.
பைனான்ஸ் மானேஜர்னா கணக்கைத் தவிர வேற எந்த விஷயமும் தெரியாதுனு சொல்வாங்க. அதுக்காகக் கண்ணுகூடவா தெரியாது? என்று மானேஜர் மீதிருந்த தனது காழ்ப்பு உணர்ச்சியைக் கொட்டிவிட்டு, நடையைக் கட்டினார் அவர்.

அடுத்ததாக மானேஜரின் பக்கத்து வீட்டுக்காரர் வந்தார். என்ன சார்... இந்தப் பள்ளத்துக்கு முன்னால கொட்டையா சிவப்பு எழுத்தில் 'ஜாக்கிரதை'னு பலகை வெச்சிருக்கே! அதைப் பார்க்கலையா? ஹும்... நீங்கள்லாம் மானேஜர் உத்தியோகம் பார்த்து என்னத்தைப் பெரிசா கிழிக்கப் போறீங்களோ? என்று சலித்துக்கொண்டே ஒரு கையால் தன் மூக்கை மூடிக்கொண்டு, இன்னொரு கையை சாக்கடைப் பள்ளத்தில் கிடக்கும் மானேஜரை நோக்கி நீட்டினார்.
ஆனால், மானேஜரைத் தொட முடியாத அளவுக்கு அந்தப் பள்ளம் மிகவும் ஆழமாக இருந்தது. வேறு வழியின்றி அவரும் அந்த இடத்தை விட்டு நகர்ந்துவிட்டார்.

அடுத்ததாக, அந்தப் பக்கம் மானேஜரின் நெடுநாளைய நண்பர் வந்தார். கழிவுநீர்ப் பள்ளத்தில் மானேஜர் விழுந்து கிடப்பதைப் பார்த்து பதைபதைத்த அவர், தனது சட்டையைக்கூடக் கழற்றாமல் அந்தச் சாக்கடைக்குள் குதித்தார். இந்தா, என் தோள்மீது ஏறி, முதலில் நீ வெளியே போ! என்று மானேஜரை அந்தச் சாக்கடையிலிருந்து வெளியேற்றினார்.

இந்தக் கதையில் வரும் மார்க்கெட்டிங் எக்ஸிகியூடிவ் மாதிரியோ அல்லது பக்கத்து வீட்டுக்காரர் மாதிரியோ, அடுத்தவர்களிடம் குறை காணும் நபர்களாகத்தான் நம்மில் பலர் இருக்கிறோம் என்பது கசப்பான உண்மை.
கணவனும் மனைவியும் ஒருவர்மீது ஒருவர் குறை கண்டுபிடிக்காமல் வாழவேண்டும். தன் மனைவி குறையே இல்லாத முழுமையான மனைவியாக இருக்க வேண்டும் என்று எதிர் பார்க்காதவர் யாரோ, அவர்தான் உண்மையில் குறையே இல்லாத முழுமையான கணவன்.

என்ன சுவாமி சொல்கிறீர்கள்? என் வீட்டுக்கு வந்து பாருங்கள். கட்டில், நாற்காலி, சோபா, தையல் மெஷின் என்று எல்லா இடத்திலும் அழுக்குத் துணியாக இறைத்து வைத்திருக்கிறாள். ஒரு வாரத்துக்கு முன்னால் வைத்த வத்தல் குழம்பு, இரண்டு வாரத்துக்குமுன் வைத்த ரசம் என்று பிரிஜ்ஜே நாறிக் கொண்டிருக்கிறது. இந்தக் குற்றங்களை எல்லாம் அவளுக்கு நான் எடுத்துச் சொல்லக்கூடாதா? என்று சிலர் கேட்கக்கூடும்.

தாராளமாகச் சொல்லுங்கள். ஆனால், அதற்குமுன் மிகச் சிறந்த புத்திமதி எது என்பதை நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும். ஆயிரம் வார்த்தைகளில் புத்திமதி சொல்வதைவிட, முன்உதாரணமாக நாமே வாழ்ந்து காட்டுவதுதான் மிகச் சிறந்த புத்திமதி!

நான் சொல்வதை நம்புவதற்குச் சிரமமாகஇருந்தால், இந்த விளையாட்டை உங்கள் குழந்தையிடம் விளையாடிப் பாருங்கள்.

ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து, ஆறு, ஏழு... என்று வரிசையாகச் சொல்வேன். நான் ஏழு என்று சொல்லும்போது நீ கைதட்ட வேண்டும். சரியா?என்று கேட்டுவிட்டு, ஒன்று இரண்டு, மூன்று... என எண்ணத் தொடங்குங்கள். ஆறு என்று சொல்லும்போதே, நீங்கள் திடீரெனக் கைதட்டிப் பாருங்களேன். குழந்தையும் சட்டென்று கை தட்டிவிடும்.

இதிலிருந்து தெரிவது என்ன?

குழந்தைகள் நாம் சொல்வதைப் பின்பற்றுவதில்லை. நாம் செய்வதைத் தான் பின்பற்றுகின்றன. குழந்தைகள் மட்டுமில்லை, பெரியவர்களும் இப்படித்தான்.
அடுத்தவர்களுக்காக இல்லாவிட்டாலும் சுயநலமான காரணத்துக்காவது அடுத்தவர்மீது குற்றம் காண்பதை நிறுத்திக்கொள்ள வேண்டும்.

சரி சுவாமி, நம் குழந்தையே ஒரு தப்பு செய்கிறது. அல்லது அலுவலகத்தில் நமக்குக் கீழே வேலை செய்பவர் ஒரு தப்பு செய்கிறார். அடுத்த வீட்டுக்காரன் குப்பையை எடுத்து வந்து நம் வாசலில் கொட்டுகிறான். யாரிடமும் குற்றம் கண்டுபிடிக்கக்கூடாது என்று அப்போதும் வாய்மூடி மௌனியாக இருந்துவிட வேண்டியதுதானா? என்று நீங்கள் கேட்பது புரிகிறது.

ஒருவர் செய்யும் தவறுகளை, அவருக்கு உணர்த்தக்கூடாது என்று நான் சொல்ல வரவில்லை. ஆனால், அதை அவரே ரசிக்கும்படி சுட்டிக் காட்டலாம்.
ஒரு முறை யார் அழகு என்று ஸ்ரீதேவிக்கும் மூதேவிக்கும் சர்ச்சை உண்டாகி விட்டது. தீர்வு சொல்லும் படி இருவரும் நாரதரை அணுகினார்கள். நாரதரோ நிஜமாகவே சிக்கலில் மாட்டிக்கொண்டு விட்டார்!

ஸ்ரீதேவியாகிய லட்சுமி தான் அழகு என்றால், மூதேவிக்குக் கோபம் வந்து தன் வீட்டிலேயே தங்கிவிடுவாள். மூதேவிதான் அழகு என்றால், ஸ்ரீதேவி கோபித்துகொண்டு தன் வீட்டைவிட்டு வெளியேறி விடுவாள். என்ன செய்வது என்று தெரியாமல் விழித்த நாரதர், யோசிப்பதற்கு நேரம் எடுத்துக்கொள்ளும் விதமாக, எங்கே... சற்று முன்னும் பின்னுமாக நடந்து காட்டுங்கள் என்றார்.
ஸ்ரீதேவியும் மூதேவியும் நாரதர் முன் கேட்வாக் நடை நடந்தார்கள். சட்டென நாரதர், "ஸ்ரீதேவி வரும்போது அழகு. மூதேவி போகும் போது அழகு!" என்று சொல்ல... இரு தேவிகளுக்குமே பூரிப்பு!

அங்கே ஜெயித்தது ஸ்ரீதேவியுமல்ல, மூதேவியுமல்ல... நாரதர்தான்!

சுவாமி சுகபோதானந்தா தொகுப்பலிருந்து.

søndag den 27. april 2008

கன்று - தமிழ்மகன்

ஓட்டலுக்குள் நுழைவதற்கு முன் அந்தச் சிறுமியைப் பார்த்தேன். அவள் கையில் ஒரு அலுமினிய தட்டும் ஒரு பர்ஸன்ம் இருந்தது. பர்ஸ் வைத்திருக்கும் பிச்சைக்காரச் சிறுமி என்பது புதுமையாகவும் பார்க்க அழகாகவும் இருந்தது.

அவளைக் குமரியென்றும் கூறலாம்தான். அதற்கு ஒன்றும் அவசரமில்லை. அந்தப் பாவாடைச் சட்டையில் ரெட்டை ஜடை போட்டு சிவப்பு ரிப்பன் கட்டியிருந்த அந்த ஒரு கண பார்வையில் எனக்குச் சிறுமியாக இருப்பதுதான் சரி என தோன்றினாள். மீண்டும் ஒரு முறை அவளைத் திரும்பிப் பார்ப்பதற்குக் காரணம் இருந்தது.

பிச்சைக்காரியாக இருந்தாலும் வலிந்து பரிதாபத்தைக் கண்ணில் தேக்கி வைத்துக் கொண்டு அழுக்காக இருக்க வேண்டும் என்று விரும்பாதவளாக இருந்தாள். சாப்பிடுவதற்கு நிறைய பேர் காத்திருந்தார்கள். ஒரு சில ஓட்டலுக்கு இப்படி ஒரு ராசி. க்யூவில் நின்று காத்திருந்து சாப்பிட வேண்டும்.

சாப்பிடுவதற்காகக் காத்திருக்கும் தருணத்தில் இப்படியான ஓர் ஆர்வமூட்டும் பெண்ணைப் பார்த்துக் கொண்டிருப்பது மற்றெல்லாவற்றையும்விட சுலபமான திசைதிருப்பலாக இருந்தது. சாப்பிட்டுவிட்டு வெளியேறுபவர்களில் ஒரு சிலரை மட்டும் தேர்வு செய்து அதிகம் கெஞ்சாத தொனியில் அவள் "சார் சார்'' என்றாள். பெரும்பாலும் அதற்குப் பலன் இருந்தது. ஏதோ டைம் கேட்பதற்காகக் கூப்பிடுகிறாள் என்று திரும்பி பின் சுதாரித்து அவர்கள் பிச்சை போடுவது தெரிகிறது. தட்டில் விழும் காசுகளை அவள் உடனடியாக பர்ஸில் எடுத்துப் போட்டுக் கொண்டாள்.

ஏதோ மீன்காரியும் காய் கறி விற்பவளும் காசை வாங்கி சுருக்குப் பையில் போட்டுக் கொள்வது போல ஒருவித வியாபார மிடுக்கு அதில் தெரிந்தது. பிச்சை எடுப்பதை அவள் ஒரு தொழில் போல நினைத்திருக்கக் கூடும். இடுப்பில் கையூன்றி அவள் ஒய்யாரமாக நிற்பது அவளுக்கு இது கேவலமான தொழில் என்பது போன்ற உலக நியாயங்கள் தெரியாது என்பதை உணர்த்தியது. இன்று புதிதாய் பிச்சைக்காரி ஆனவளோ? என்னைப் போலவே எல்லோரும் அவளிடம் இயல்பு தவறிய ஈர்ப்பு இருப்பதைக் கவனித்தனர். ஆனால் என்னைப் போல இப்படி நேரம் எடுத்து கவனிக்கவில்லை.

அவளுடைய மலர்ந்த விழிகளாலோ, கூரிய நாசியோலோ நான் மேலும் ஈர்க்கப்பட்டதோடு, இரந்து பிழைக்கக் கூடிய தன்மை இவளிடம் இல்லையே எப்படி இந்த பூமியில் அவளால் தொடர்ந்து பிச்சை எடுத்துப் பிழைக்க முடியும் என்ற கவலையும் தொற்றிக் கொண்டது. மாற்று யோசனையாக இவளுக்கு என்ன வேலையைக் கொடுத்தால் இவளுக்குப் பொருத்தமாக இருக்கும் என்று யோசிக்க ஆரம்பித்தேன்.

இந்த நேரத்தில் "சார் 3வது டேபிள் காலி'' என்ற குரல் கேட்டது. உட்கார வைத்து விடுகிறார்களே தவிர சாப்பாடு வடிக்கவில்லை, அப்பளம் ரெடியாகவில்லை என்ற தாமதங்கள் தொடர்ந்து கொண்டுதான் இருந்தது.
சாப்பிட உட்கார்ந்த ஐந்து நிமிடத்தில் சர்வருக்கும் சாப்பிட வந்தவருக்கும் சண்டை வராத டேபிள்கள் எத்தனை எண்ணிக் கொண்டிருந்தேன்.

ரேஷன் கடை ஊழல், பெனிபிட் பண்டு மோசடி, போன ஆண்டு கட்டிய பாலம் இடிந்து 100 பேர் பலி, கன்னா பின்னாவென்று கணக்குக் காட்டும் எலக்ட்ரிசிட்டி மீட்டரை சரிபார்த்துத் தருவதற்கு லஞ்சம், டிரைவிங் லைசென்ள்ஸக் காட்டிய பிறகும் பைக் சாவியை எடுத்துப் பாக்கெட்டில் போட்டுக் கொண்டு ஏடாகூடமாக விசாரிக்கும் போலீஸ்... இப்படி கோபப் படவேண்டிய எத்தனையோ இடங்களில் மக்கள் காட்டும் பொறுமைகள் எல்லாம் ஹோட்டல் டேபிள்களில் வந்த பின்புதான் ஆவேசமடைகின்றனபோலும்.

இந்த ஒரு பிறவியை மக்கள் எப்படியெல்லாம் வாழ்கிறார்கள் என்று கவனிப்பதற்கு ஒதுக்கிவிட்டு அடுத்தப் பிறவியில் இருந்து வாழலாமா என திடீரென நினைத்தேன். ஏதோ ஒரு தத்துவத்தின் அடிப்படையில் அடுத்த பிறவி என ஒன்று இல்லாமல் போனாலும் பெரிய பாதகம் இல்லை போலத்தான் தோன்றியது. அந்தப் பெண் போன பிறவியில் இளவரசியாக இருந்திருப்பாளோ? வெறும் சோற்றைப் பிசைந்து கொண்டிருப்பதைப் பார்த்து என் கை மேலேயே ரசத்தை ஊற்றிவிட்டுப் போனான் சர்வர். சாம்பார் சாதமெல்லாம் சாப்பிட்டுவிட்டோமா என்று திடீரென சுரணை வந்து, அதன் மீதே கொஞ்சம் சாம்பாரையும் ஊற்றச் சொல்லி சாப்பிட்டேன்.

கல்லூரிப் படிப்புக்குப் பிறகு ஒரே வருடத்தில் இரண்டாவது வேலை இது. காலை ஆறுமணிக்கே வீட்டை விட்டுக் கிளம்பினால்தான் பத்துமணிக்காவது ஆபிஸன்க்குப் போகமுடியும் என்ற இடைவெளி. அப்புறம் அம்மா தந்த சாப்பாடாக இருந்தாலும் மத்தியானத்தில் சாப்பிடவா முடியும்?
சாப்பிட்டுவிட்டு வெளியே வந்து பக்கத்துக் கடையில் ஒரு சிகரெட் வாங்கி புகைப்பதில் இருக்கும் ஈடுபாடும் இன்பமும் எனக்குச் சாப்பாட்டில் இருந்ததில்லை.

சாப்பிட்ட பிறகு ஒரு தம் போடலாம் என்பதற்காகச் சாப்பிடுகிறேன். எழுந்தால் ஒரு தம் அடிக்கலாம் என்பதற்காகவே காலையில் நான் கண் விழிக்கிறேன். இனி சிகரெட் கடையெல்லாம் மூடியிருப்பார்கள் என்பதற்காகவே இரவு படுக்கப் போகிறேன். சொல்லப் போனால் சிகரெட் புகைப்பதற்காகச் சம்பாதிப்பதாகவே ஆகிவிட்டது.

சற்று தொலைவில் அந்தச் சிறுமி. வெய்யிலுக்காக கண்களை இடுக்கிக் கொண்டு நிற்பதிலும் உலகப் பரபரப்பில் இருந்து ஒதுங்கி நிற்கிற நிதானமும் அலட்சியமும் என்னை மீண்டும் ஈர்த்தது. நாம் வெளியே வந்த போது எங்கே போயிருந்தாள்? இவளைப் படிக்க வைத்தால் மிகச் சிறந்த விஞ்ஞானியாகவோ, விளையாட்டு வீராங்கனையாகவோ வந்து நாட்டுக்குப் பெருமை சேர்ப்பாள். அவள் மீது நம்பிக்கையோ, இரக்கமோ தோன்றியது.
சாப்பிட்ட களைப்பு நீங்குவதற்காக அருகே இருந்த பெட்டிகடையில் அவரவர் ரசனைக்கேற்ப பீடியோ, சிகரெட்டோ, வெற்றிலையோ போட்டுக் கொண்டிருந்தார்கள். சிலர் கிளிப்புகளில் தொங்கிக் கொண்டிருக்கும் சஞ்சிகைகளை ஆனவரைக்கும் குனிந்து நெளிந்து படித்தார்கள். படிப்பதில் இவ்வளவு ஆர்வமா எனப் பெருமையாக இருக்கும். பத்திரிகையைக் கையில் கொடுத்தால் அப்படி படிப்பார்களா என்று தெரியவில்லை. காசு கொடுத்து வாங்கி இவர்கள் கையில் திணித்துப் பரீட்சித்துப் பார்க்க எனக்கு வசதியில்லை. இவர்களில் யாருக்குமே அவள் குறித்து அக்கரை ஏற்படாதது ஆச்சர்யமாகத்தான் இருந்தது.

சூரியன் ஓட்டலுக்கு நேர் மேலே இருந்தது. எந்தப் பக்கத்திலும் நிழலே இல்லை. ஓட்டலின் சுவரில் நிழலாலேயே பெயிண்ட் அடித்த மாதிரி ஒட்டிக் கொண்டிருந்தது. இப்படியான தருணத்தில் ஆல்பெர் காம்யூவின் அந்நியன் கதையில் வருவது போல சுட்டுவிட முடியுமா நம்மால் என்று இருந்தது. யோசனை வேறு பக்கம் திரும்பியது. துப்பாக்கியை ஒருமுறை தொட்டுப் பார்க்கும் சந்தர்ப்பமாவது கிட்டுமா? துப்பாக்கி இல்லாவிட்டால் போகிறது. உருட்டுக்கட்டையை எடுத்து ஒருத்தன் நடுமண்டையில் அடிக்க முடியுமா?...

அந்தச் சிறுமியை மீண்டும் பார்த்தேன். அவள் நடைபாதை மேடையில் அமர்ந்து காலை சாலையில் தொங்கவிட்டபடி வெயிலில் அமர்ந்திருந்தாள். அவள் கையில் இருந்த சிறிய மணிபர்ஸத் திறந்தாள். அதன் உட்புறத் திறப்பில் சிறிய கண்ணாடி. அதில் அவளுடைய முகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தாள். அவளுடைய உலர்ந்து போன சிக்கடைந்த சிகையை விரல்களால் பின்பக்கம் தள்ளிவிட்டாள். பின்னர் முன் நெற்றியில் சிறிய முடிக் கற்றையை விரல்களால் சுருட்டிவிட்டுக் கொண்டாள். அவளுடைய முகம் அவளுக்கு வியப்புக்குரிய விஷயமாக இருந்திருக்க வேண்டும். தன் மூக்குத்தியைத் திருகி அதில் பொறித்த உருவத்துக்கு ஏற்ப இப்படித்தான் இருக்க வேண்டும் போல நிலைப்படுத்தினாள். மெல்ல தன் நுனி நாக்கால் அக்கண்ணாடியைத் தொட்டாள்.

கண்ணாடியிலிருந்த நாக்கும் அவளுடைய நாக்கைத் தொட்டது. அவள் பூரிப்பான புன்னகையோடு அதை உள்வாங்கிக் கொண்டு அதே வேகத்தில் இதை யாராவது பார்த்துவிட்டார்களா என்று கவனித்தாள். என்னையும் என் கண்கள் அவள் மீது நீண்ட நேரமாய் ஊடுருவி இருந்ததையும் அவள் கணித்தாள். நான் கவனித்துவிட்டேன் என்பது அவளுக்கு அதிர்ச்சியாகவும் வெட்கமாகவும் இருந்தது. சட்டெனத் திரும்பிக் கொண்டாள். வித்தியாசமாக எதுவும் நடந்துவிடவில்லை என காட்டிக் கொண்டு இயல்பாக பர்ள்ஸ மூடினாள்.

நான் அவளுடைய நடவடிக்கைகளைப் பார்த்துவிட்டேன் என்பது அவளுக்குப் புரிந்துபோனது. ஆனால் நான் காட்சிகளை உள்வாங்கிக் கொள்ளாமல் கவனக் குவிப்பு எதுவும் இன்றி சும்மா வெறித்துக் கொண்டிருந்ததாகத்தான் இருக்கும் என அவள் எதிர்பார்த்தாள். அவள் எதிர்பார்த்தது உண்மைதானா என்பதைச் சரிபார்த்துக் கொள்வதில் அவளுக்குத் தவிப்பு இருந்தது. மீண்டும் நான் அவளைக் கவனிக்கிறேனா என்று ஓரக்கண்ணால் பார்த்தாள். அதை நான் என்னவென்று விவரிப்பது. மிக நாசூக்கான அவதானிப்பு அது.

நான் அவளைத்தான் கவனித்துக் கொண்டிருந்தேன். அது அவளுக்கு தேவையற்ற சங்கடத்தை ஏற்படுத்திவிட்டது. உடனே அவள் அங்கிருந்து எழுந்து ஓட்டலின் மறு முனைக்குப் போய் அனிச்சையாக கையேந்தி நின்றாள். அவள் செய்யக் கூடாத வேலை என்று உறுதியாகிவிட்டது எனக்கு. நாமே அழைத்துச் சென்று வளர்க்கலாமா என்று ஆவேசம் ஏற்பட்டு, பிறகு ஏதாவது அனாதை ஆசரமத்தில் வைத்து படிக்க வைக்கலாம் என்று மாறியது.

அதிகபட்சம் 13 வயசு இருக்கலாம். சரியான ஆகாரம் சாப்பிடாதவளாக உணர்ந்து 14 வயதாகவும் இருக்கலாம் என்று கணித்தேன். போதிய கவனிப்பு இருந்தால் அவளுடைய நிறத்துக்கு இன்னும் அழகாகவே இருப்பாள். யாருடைய இரக்கம் காரணமாகவோ வழங்கப்பட்டிருந்த அந்த பாவாடை- சட்டையும்கூட அவளுக்குப் பொருத்தமாகத்தான் இருந்தது. அவள் அடிக்கடி என்னை ஓரக்கண்ணால் பார்க்கிறாள் என்று தெரிந்தது. கன்றுக்குட்டிக் காதல் என்பார்களே அதற்குச் சற்று முந்தைய உணர்வு என்று சொல்லலாம் அதை.

அந்த உணர்வு எனக்கானதா? அவளுக்கானதா? என்பது அவ்வளவு சர்ச்சைக்குரிய விஷயமில்லை. இருந்தாலும் அதை இருவருக்குமானதாகத்தான் நான் நினைத்தேன். ஒருவரை ஒருவர் கவனிக்கிறோம் என்ற பால் ஈர்ப்பு. வெட்கம் தடவிய உணர்வு. ஒரு பையனாக இருந்தால் எனக்கு இப்படி நிகழ்ந்திருக்காது என நினைத்தேன்.

வெயில் உக்கரமாக இருந்தது. கூட்டமும் கடை வாசல் பக்கமாகவே குழுமிவிட்டது. கடையில் தொங்கவிடப்பட்டிருந்த படுதாவும் புகைப்பிடிப்பு வஸ்துகளும் மக்களை இந்தப் பக்கமாக நகர்த்திவிட்டது. அந்தச் சிறுமி இருந்த இடத்தில் யாருமே இல்லை. யாருமில்லாத இடத்தில் அவளால் பிச்சையும் எடுக்க முடியாதே. ஆனால் அவள் இந்தப் பக்கம் வராமல் இருப்பதற்கு நான் இருப்பதுதான் காரணமா என்பதை அறிந்த போது வருத்தமாக இருந்தது.

நான் அவள் கண்ணாடியில் பார்த்து அலங்காரம் செய்து கொள்வதைக் கவனித்து விட்டதற்காக இப்படி நடந்து கொள்கிறாளா? ஒருவேளை நாம் இருக்கும்வரை இந்தப் பக்கம் வரவே மாட்டாளோ என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவும் நான் இன்னொரு சிகரெட்டை வாங்கிக் கொளுத்திக் கொண்டேன்.

மனசின் பனிமூட்டம் மெல்ல விலக ஆரம்பித்தது. இவள் அம்பிகா போல அல்லவா இருக்கிறாள் என்று பதறிப் போய் சுதாரித்தேன். அவள் முகத்தை நெருங்கிச் சென்று பார்க்கவோ, அல்லது பட்டை வெயிலில் கருகிக் கொண்டிருக்கும் அவளுக்கு ஓடிப் போய் குடை பிடிக்க வேண்டுமென்றோ தோன்றியது. கிராமத்தில் கோடை விடுமுறைக்குப் பாட்டி வீட்டுக்குப் போயிருந்த போது ஊரில் இருந்த இன்னொரு பாட்டியின் வீட்டுக்கு என்னைப் போலவே விடுமுறைக்காக வந்திருந்தவள்தான் அம்பிகா.இருவருமே ஐந்தாம் வகுப்பு என்பதைத்தவிர எங்களுக்குள் வேறெந்த சிறப்பு ஈர்ப்புகளும் இல்லை. ஆனால் அவள் விடுமுறை முடிவதற்குள்ளாகவே திடீரென்று அவளுடைய ஊருக்குப் புறப்பட்டுவிட்டபோது ஏதோ இருந்தது என்று தெரிந்தது. அவள் போனதும் எனக்கும் அங்கு கொண்டாட எதுவுமில்லாததுபோல் ஆனது. அதன் பிறகு வேறு எந்த கோடைவிடுமுறைக்கும் வராமலே போய்விட்ட அம்பிகாதான் இப்போது ஒரு ஒன்பதாம் வகுப்பு மாணவி போல் என் முன் நிற்பதாக மகிழ்ந்தேன்.

அவள் இப்படித்தான் பாவாடை சட்டை போட்டிருந்தாள். இடுப்பில் கை வைத்து நிற்பதும் இப்படித்தான்.
நான் அவள் முகத்தைப் பார்த்து அம்பிகா ஜாடைதானா என்று உறுதிப்படுத்திக் கொள்ள விரும்பினேன். ஆனால் எனக்கு அம்பிகாவின் முகம் அத்தனைத் தெளிவாக நினைவில் இல்லை. பாவாடை, சட்டை, ரிப்பன், நடை} பாவனை என்று மொத்தமான அபிப்ராயமாக அவள் இருந்தாள். நான் சிகரெட் புகையை ஊதுவதற்காகத்தான் அந்தப் பக்கம் திரும்பியதாகச் செயல்பட்டேன். உண்மையில் அவளும் என்னை அடிக்கொருதரம் ரகசியமாகப் பார்த்துக் கொண்டுதான் இருந்தாள். நான் இருக்கும் பகுதிநோக்கி வருவதில் தயக்கமும் இருந்தது. அவள் அடுத்த முறை பார்த்தபோது அவளுடைய இத்தனை செய்கையையும் உளவாங்கிக் கொண்டதன் அடையாளமாக ஒரு புன்னகையைச் சிந்தினேன்.

அவளுக்கு அது தன்னை நோக்கித்தானா என்ற சந்தேகம் வந்துவிட்டது. திடுக்கிட்டு வேறுயாருக்கானதோ என்று விழித்தாள். என்ன சந்தேகம் இந்தப் புன்னகை உனக்குத்தான் என்பதாக மீண்டும் சிரித்தேன். திகைத்தே போனாள். அது எனக்கு மேலும் சிரிப்பை ஏற்படுத்தியது. தன் மீதான இப்படியொரு கவனத்தை அவள் பெரிதும் விரும்பினாள்போல தெரிந்தது. இதற்கு முன்னால் இப்படியொரு நிகழ்வு அவளுக்கு எற்பட்டிருக்குமா தெரியவில்லை. அது அவளுக்குப் பெருமையாகவும் கூச்சமாகவும் இருந்திருக்க வேண்டும். சில்லறைகள் இல்லாதத் தட்டில் விரலால் கிறுக்கி, எந்த பாதிப்பும் ஏற்படாதவளாகக் காட்டிக் கொண்டாள்.

அவள் இப்போது மேலும் அழகாகத் தெரிய ஆரம்பித்தாள். முகம் பழக ஆரம்பிப்பதும் மனசு அதற்கு ஒரு பிரத்யேக வடிவம் கொடுக்க ஆரம்பிக்கிறது. ரஜினிகாந்த் கண்டக்டராகவே இருந்திருந்தால் அவருடைய போட்டோவை சலூனில் ஒட்டி வைப்பார்களா? கருணாநிதி ஒரு ஆரம்ப பள்ளிக்கூட வாத்தியாராக இருந்திருந்தால் அவரைப் பார்க்க இப்படியொரு கூட்டம் கூடுமா? அவர்கள் செய்த சாதனை, அதனால் எற்பட்ட புகழ் இதையெல்லாம் மீறி முகம் பழகிப் போய் அந்த முகத்தை நேரில் பார்க்கிற ஆர்வம் என ஒன்று இருக்கத்தான் செய்கிறது.

பிச்சை எடுப்பதற்கான ஒரு தகுதியும் அவளிடம் இல்லை போல தோன்ற ஆரம்பித்துவிட்டது எனக்கு. ஒரு பெரிய நகைக்கடை அதிபரின் மகளாக ஏசி அறையில் இருப்பதுதான் அவளுக்குப் பொருத்தமான வாழ்க்கையாக இருக்கும் போலவும் நினைத்தேன்.அவள் மனதால் கோடீஸ்வரி போல இருந்தாள். வரவர எனக்கு இந்த எண்ணம் வலுத்துக் கொண்டே போனது.
முனிவரின் நிஷ்டையைக் கலைத்த பாவத்துக்காக இளவரசிக்கு இப்படியொரு சாபம் வழங்கப்பட்டு, மிகவும் கதறி அழுது விமோசனம் வேண்டினாள் அவள்.

முனிவரும் மனமிரங்கி "இந்தப் பிறவியில் நீ மணக்க வேண்டிய இளவரசன், அடுத்த பிறவியில் வசந்தா பவன் வாசலில் சிகரெட் பிடித்தபடி இருந்து உனக்குப் பிச்சை இடுவான். அப்போது இருவரும் இளவரச ரூபம் கொள்வீர்கள்'' என்று கூறியிருந்தால் நன்றாக இருக்குமே என நினைவுகள் குமிழிட்டது.

ஆவேசமாக வந்த ஒரு பெண்மணி, அந்தச் சிறுமியின் கையில் இருந்த தட்டைப் பிடுங்கி அதாலேயே அவளுடைய தலையில் ஒரு அடி போட்டுவிட்டு ""இன்னாடீ பண்ணீங்கீறே இம்மா நேரமா இங்க?'' என்றாள்.

இப்படியொரு அவமானத்தை என் எதிரில் எதிர்கொண்டது அதிர்ச்சியாகத்தான் இருந்திருக்கும் அவளுக்கு. ஆனால் செம்மையான உணர்வுகளையெல்லாம் வெளிப்படுத்திப் பழக்கமில்லாதவளாக அவள் இருந்தாள்.

"கூட்டம் அங்க நிக்குது.. இங்க இன்னா பண்றே?'' என்றபடி முடியைப் பிடித்து இழுத்து கடை இருந்த பக்கம் நோக்கித் தள்ளினாள்.

அவள் ஆவி புகுந்தவள் போல நானிருந்த பக்கம் நோக்கித் தட்டேந்தி எந்திரத்தனமாக வந்தாள். இருந்தாலும் ஒரு இளவரசியின் நடைதான் அது. என் எதிரே வந்து தயக்கமில்லாம் முகத்தை ஏறிட்டுப் பார்த்தாள். நானும் நெருக்கத்தில் அவளைப் பார்த்தேன். காசு போடுவதா, கையைப் பிடித்து அனாதை இல்லத்துக்கு அழைத்துச் செல்வதா? சட்டென்று அங்கிருந்து அகன்றுவிடுவதா?... அந்தக் கணத்தில் தீர்மானிக்க வேண்டியிருந்தது. அவள் கண்களைத் தீர்க்கமாகப் பார்த்தேன்.

பாக்கெட்டில் இருந்த காசும் அதற்குக் கீழே இருந்த இதயமும் ஒன்றை ஒன்று முந்திக் கொண்டிருந்தன.

நன்றி: சண்டே இந்தியன் வார இதழ்