søndag den 24. februar 2008

அரட்டை மடங்களும், சில அதிர்ச்சி தகவல்களும் -ஜெஸிலா!

செய்வதையும்செய்து விட்டு இப்படி எழுத என்ன அருகதை இருக்கிறது என்பவர்களுக்கு முதலிலேயே ஒரு விசயத்தை தெளிவுபடுத்தி விடுகிறேன். இதைச் சொல்லும் தார்மீக உரிமை கூட எனக்குக் கிடையாது என்பதை உணர்ந்த பிறகே இதனை எழுதுகிறேன். ஆனால், நடந்த உண்மைகளுக்கு சாட்சியாக இருக்க நேர்ந்ததால் அதனை வெளிப்படுத்தவே இதனை இங்கே பதிவாக்குகிறேன். அரட்டை அரங்கத்தைப் பற்றி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு அபிப்ராயம் இருக்கும். எனக்கும் அப்படித்தான்.

தொலைக்காட்சியில் அவரவர் பிரச்சனையைப் பேசுவதும் அதற்கு உதவி பெறுவதுமாக இருக்கும் அரட்டை அரங்கத்தைக் கண்ணீர் மல்கப் பார்த்திருக்கிறேன். பேச்சுத்திறனை வியந்திருக்கிறேன். 'வாய் பார்க்காதே' என்று அதட்டும் அம்மாவும் கூட என்னைப் பார்க்க அனுமதித்ததாலோ என்னவோ அந்த நிகழ்ச்சி பிடித்திருந்தது. ஆனால் சிலர் அதை வெறும் நடிப்பு என்று கிண்டல் செய்தபோது கொஞ்சம் யோசித்தாலும் முழுவதுமாக ஏற்றுக் கொள்ள முடியவில்லை. மனுஷ்ய புத்திரனின் 'அரட்டையும் அரட்டலும்' கட்டுரையை வாசித்த போது அந்த நிகழ்ச்சியை பார்க்கும் கண்ணோட்டமே மாறிவிட்டிருந்தது. அதுவும் அவர் அந்தக் கட்டுரையில் எப்படி எல்லோரும் ஒரே மாதிரியான குரலில், பேசும்முறையில், முகபாவத்தில், உடல் அசைவில் பேச முடிகிறது. பல ஒத்திகை பார்த்து பிரச்சனையை கண்ணீருடன் எப்படி சொல்கிறார்கள் என்று எழுப்பிய கேள்வி சிந்திக்கத் தூண்டியது. அதன் பிறகு அந்த நிகழ்ச்சியைப் பார்க்கும் போதெல்லாம் எனக்கு அதுவே ஒலித்துக் கொண்டும் இருந்தது. துபாயில் அரட்டை அரங்கம் என்று அறிவிப்பைப் பார்த்தேன். ஆனால் கலந்துக் கொள்ள ஆவல் பெரிதாக வரவில்லை.

பல நகைச்சுவைப் பட்டிமன்றங்களில் பேச்சுக்காக நகைச்சுவைக்காக எத்தனையோ தலைப்பை எடுத்துப் பேசியிருக்கிறேன். அது வெறும் பேச்சாகத்தான் இருக்குமே தவிர என் மனதின் கருத்தாக வாதமாக அமையாது. என் நோக்கமெல்லாம் பார்வையாளர்களைச் சிரிக்க வைப்பதாகவும் என்னுடைய பொழுதுபோக்காகவும் மட்டுமே அமையும். அதனாலேயே இந்த 'சீரியஸ்' மற்றும் உருக்கமான அரட்டை விளையாட்டுக்குப் போகவில்லை. ஆனால் அந்த நிகழ்ச்சியை நடத்துபவர்களே உங்களைப் போன்றவர்கள் நிகழ்ச்சிக்குத் தேவை என்று வீட்டில் சொல்லிவிட கலந்து கொள்ள நேர்ந்தது. எந்த நிகழ்ச்சியில் நான் கலந்து கொண்டாலும் அதில் அக்கறை செலுத்தாத வீட்டினருக்கும் கூட இம்முறை நான் ஒவ்வொரு சுற்றில் தகுதி பெறும்போதும் எதிர்பார்ப்பு அதிகரித்திருந்தது. அவர்கள் 'இந்தச் சுற்றில் தேர்வாகிவிட்டாயா?' என்று கேட்கும் போதெல்லாம் ஏதோ புது பொறுப்பு வந்துவிட்டதாக பயம் மேலோங்கியது. கொடுக்கப்பட்ட தலைப்போ 'அமீரக வாழ்வில் யாருடைய பிரிவு அதிக வேதனை தருகிறது

1. குடும்பம்
2. காதலி
3. நண்பர்கள்
4. தாய்மண்
5. என்னத்த பிரிவு?

இங்கு நாங்கள் நிம்மதியாக இருக்கிறோம்'. தலைப்பு வந்தவுடன் என்னை நன்றாகத் தெரிந்தவர்கள் அத்தனை பேரும் நான் 'நிம்மதியாக இருக்கிறோம்' என்று தான் பேசுவேன் என்று சரியாகச் சொல்லிவிட்டார்கள். நானும் எல்லாச் சுற்றிலும் நிம்மதியைப் பற்றிப் பேசியே தகுதியும் பெற்றேன். இறுதிச் சுற்றின் முடிவுக்கு எதிர்பார்த்திருந்த போது அழைப்பு வந்தது 'தேர்வாகிவிட்டீர்கள் ஆனால் எங்களுக்காக நீங்கள் வேறு தலைப்பில் பேச வேண்டும். உங்கள் பேச்சுத்திறனை பயன்படுத்திக் கொள்ள நினைக்கிறோம்' என்று. எனக்குப் பேசக் கொடுத்த தலைப்பு 'தாய்மண் பற்றிய பிரிவு'. விரும்பிப் பேசுவது வேறு, அலங்காரப் பேச்சு வேறு - இதற்கு உடன்பட வேண்டாமென்று தோன்றினாலும் வீட்டில் உள்ளவர்களின் எதிர்பார்ப்புகளுக்காக ஒப்புக் கொண்டேன். யதார்த்தமில்லாது சோகம் கொட்டி நடிப்பது எனக்கு கடினமாகப்பட்டது. ஆனால் 'முடியும்' என்று என் எண்ணத்தையே அதற்கேற்ப மாற்றிக் கொண்டு நாடகத்திற்கு தயாரானேன் அவர்களும் ஒரு சில விவரங்களையும் தந்து 'தயார்படுத்தினார்கள்'. என்னுடன் பேசியவர்களில் ஒரு பெண் அவர்களுக்கு 'brain tumor' இருந்த போது தன் குடும்பத்தினர் எப்படி ஒத்துழைத்தார்கள் என்று பேசி இதைவிட இந்த இடத்தில் இன்னும் உருக்கமாக்குவது எப்படி என்று ஒத்திகை பார்த்துக் கொண்டிருந்தார்.

இன்னொருவர் ஒரு குழந்தையின் மரணத்தை பற்றி ஒத்திகையில் பேசி முடித்தவுடன் தேர்வுக்குழுவினரோ 'அந்த இடத்தில் இன்னும் உருக்கமாக இது போல் பேசுங்கள்' என்று சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். இப்படியாக ஒவ்வொருவருக்கும் எப்படி பேசுவதென்பது பற்றி குறிப்புகள் வழங்கப்பட்டபோதுதான். அரட்டை அரங்கம் என்பது 'நாடக அரங்கம்'தான் என்று தெள்ளத்தெளிவானது. இதனால்தான் எல்லோர் குரலும் ஒரே விதமாக ஒலிப்பதும் புரிந்தது.நிகழ்ச்சி அரங்கேறியது சில வாரங்களுக்கு முன்பு தொலைக்காட்சியிலும் ஒளிபரப்பாகிவிட்டது. ஞாயிற்றுக்கிழமை எங்களுக்கு வேலை தினமாதலால் பார்க்கவுமில்லை அது குறித்து வீட்டாருக்கு நினைவுப்படுத்தவும் மறந்திருந்தேன். ஆனால், நான் பேசி முடிந்ததும் முகத்திற்கு வட்டம் போட்டு 'அவர் அவர் வாழ்க்கையில் ஆயிரம் ஆயிரம் மாற்றங்கள்' என்ற பாடலையும் ஒலிக்கச் செய்தார்களாம். ஒளிபரப்பிய நொடியிலிருந்து ஊரிலிருந்து சுற்றமும் நட்பும் அழைத்துப் பாராட்டு மழை பொழிந்தார்கள். என் வாப்பா என்னிடம் சரியாக பேசக் கூட முடியவில்லை காரணம் என் பேச்சைக் கண்டு கண் கலங்கி தொண்டையும் அடைத்துவிட்டிருந்தது. என் நடிப்புக்கு இவ்வளவு சக்தியா என்று நினைத்துக் கொண்டேன். எனது மாமியார் அழைத்து 'நீங்க பேசுனது சந்தோஷமா இருந்துச்சு ஆனா நீங்க பேசின விசயம் வேதனையா இருந்துச்சு. அங்க ரொம்ப கஷ்டமா இருந்துச்சுன்னா இங்கு வந்திடுங்க' என்று அப்பாவித்தனமாகச் சொன்னது மனதைச் சங்கடப்படுத்தியது. இதையெல்லாம் விட என் மாமா மகனுக்கு நிச்சயித்த பெண் இவனுக்கு துபாய்க்கு தொலைபேசி 'துபாய் மாப்பிள்ளைன்னு சொன்னதும் கல்யாணமாகி நானும் அங்க வரலாம்னு நினைச்சிருந்தேன். உங்க மச்சி பேசுனதப் பார்த்து அந்த ஆசையே போயிடுச்சு. உங்களுக்கெல்லாம் நம்ம நாட்ட பிரிஞ்ச ஏக்கம் இவ்வளவு இருக்குன்னா அங்க இருக்க வேணாம் வந்திடுங்க' என்று சொன்னார்களாம். அதை அவன் என்னிடம் சொல்லும் போது இந்த வருடத்தின் மிகப் பெரிய நகைச்சுவை என்றுதான் சிரிக்க முடிந்தது.

ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பேசுவதை அப்படியே நம்பி விடும் அளவுக்கு இதைக் கேட்கிறவர்கள் முட்டாள்களா, அல்லது அவர்களை முட்டாளாக்க முடிவு செய்து இப்படி வேஷம் போட்ட நாங்கள் முட்டாள்களா என்ற கேள்வி எனக்குள் எழுந்தது. இதைப் போல் எத்தனை பேர் நான் இப்படிப் பேசியதை உண்மையென்று கண்மூடித்தனமாக நம்பி 'உச்சு' கொட்டியிருப்பார்கள், கண்ணீர் வடித்திருப்பார்கள். அதற்கு நானும் காரணமானதை நினைத்து என்னை நானே நொந்துக் கொண்டேன்.

இந்த மாதம் நடந்த ஜெயா 'மக்கள் அரங்கத்தில்' அதனாலேயே கலந்துக் கொள்ளவில்லை. அரட்டை அரங்கத்தில் என்னுடன் ஒருவர் 'இலங்கைத் தமிழர்' என்ற முகவுரையோடு ஆரம்பித்துப் பேசினார். ஆனால் அவர் பேச்சு எனக்கு இலங்கைத் தமிழாகத் தெரியவில்லை அதுவும் அவரை முதல் சுற்றில் சாதாரண தமிழில் பேசி பார்த்த நினைவும் இருந்ததால் அவரிடம் நான் கேட்டுக் கொண்டது ஒன்றே ஒன்றுதான் 'நீங்கள் இலங்கைத் தமிழராகப் பேசுங்கள் பிரச்சனையில்லை ஆனால் நீங்கள் பேசுவது மொத்த இலங்கைத் தமிழரின் பிரதிபலிப்பாகட்டும் என்றேன். "மற்றவர்களுக்கெல்லாம் தற்காலிக பிரிவுதான் ஆனால் தாய் மண்ணை மீண்டும் எப்போது பார்ப்போம் என்று தெரியாமல் தவிப்பவர்களின் குரலாக உங்களுடையது ஒலிக்கட்டும்" என்றேன். அவரோ 'நிம்மதி' என்ற தலைப்பிற்குப் பேசினார். இலங்கைத் தமிழராக பேசிய அதே நபர் மக்கள் அரங்கில் சாதாரண தமிழில் பேசி என் சந்தேகத்தை தீர்த்து விட்டார். நாடகத்தில் இது கேடுகெட்ட நாடகம் என்று நினைத்துக் கொண்டேன்.இந்த அரட்டை அரங்கத்தில் / மக்கள் அரங்கில் எத்தனையோ பேர் பேசுகிறார்கள் ஆனால் ஒருவரும் நடப்பது நாடகம்தான் என்று மற்ற அப்பாவிகளுக்குச் சொல்லாமல் இருப்பது ஏன்?

நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களே உண்மையை வெளியில் சொன்னால் எல்லாம் வெளிச்சத்திற்கு வந்து அதில் ஏற்படும் பச்சாதாபம் குறையும்தானே? ஒத்திகை பார்த்து அழுதழுது சோகத்தை உள்ளிழுத்துப் பேசுகிறார்கள் சரி, ஆனால் ஒத்திகையில் கேட்டுவிட்ட அதே செய்தியை மீண்டும் நிகழ்ச்சியில் கேட்கும் போது எப்படித்தான் மடை திறந்த வெள்ளமாக டி.ஆருக்கும் சரி விசுவுக்கும் சரி தாரை தாரையாக கண்ணீர் கொட்டுகிறதோ தெரியவில்லை. சத்தியமா 'கிளிசரின்' போடாமல் இவ்வளவு கண்ணீர் வடிப்பதை முதல் முறையா பார்க்கிறேன். இந்த நிகழ்ச்சி மக்கள் அரங்கமாக, அரட்டை அரங்கமாக இன்னும் 'சன்', 'ஜெயா'வில் பல வருடங்களாக பல ஊர்களில் நடந்தவையாக ஒளிபரப்பிக் கொண்டிருப்பதற்கு காரணம் நம் மக்கள் இன்னும் முட்டாள்களாக இருப்பதுதான். மக்கள் விழித்துக் கொள்ள என் ஒரு பதிவு மட்டும் போதுமா என்ன?

நன்றி : ஜெஸிலா (பதிவிலிருந்து)

torsdag den 7. februar 2008

மனிதர், வாழ்வுமுறை,, அழிவின் விளிம்பில் பூமியின் சுற்றாடல்

பூமிப்பந்தின் மேலோட்டினை மற்றைய உயிரினங்களுடனான போட்டியில் மனிதன் என்னும் இனம் ஆளுகைக்குட்படுத்தி விட்டது. மனித இனங்கள் தங்களிடையே ஏற்படுத்திய போட்டியில் பல வகையான அரசியல் பொருளாதார சித்தாந்தங்களை உருவாக்கின. இவற்றில் வெற்றிபெற்றிருப்பது இப்போதைக்கு முதலாளித்துவ ஜனநாயகப் பொருளாதாரமாகவே தோற்றம் பெறுகின்றது.

இன்று உலகம் எதிர் கொள்ளும் அதி மிக முக்கிய பிரச்சனையான இந்த சுற்றுப்புறச் சூழல் மாசடைதல் என்பது அபாயகரமான எல்லை புள்ளியில் நின்று எதிர்கால சந்ததியை பயமுறுத்திக் கொண்டிருக்கின்றது.

இதனது அபாயம் ஆண், பெண், வயோதிபர், குழந்தைகள், மேல்சாதி, கீழ்சாதி, கறுப்பு, வெள்ளை, தொழிலாளிகள், முதலாளிகள் என்று எல்லாத் தரப்பினரையும் பாதிக்கின்றது. இந்த ஆபத்திலிருந்து எவரும் தப்ப முடியாது.

இது தெளிவாகத் தெரிந்திருந்தும் இன்று ஆதிக்கத்திலிருக்கும் நவீன முதலாளித்துவ ஜனநாயகத்தினால் இதனை கட்டுப்படுத்த முடியுமா?
இந்த சூழல் மாசடைதல் என்ற பாரிய அபாயத்தினை தற்போதைய மேற்கத்தைய நாடுகளில் பலகட்சி ஆட்சிமுறையின் கீழ் நான்கு வருடத்திற்கோ அல்லது ஜந்து வருடங்களிற்கோ ஒருமுறை ஆட்சி பீடமேறும் முதலாளித்துவ ஜனநாயகக் கட்டமைப்பினால் சூழல் மாசடைதல் பிரச்சனைக்கு சரியான அல்லது நிரந்தரமான தீர்வு தேடமுடியுமா என்பதே இக்கட்டுரையின் நோக்கம்.

நிலம், நீர், காற்று என்ற பூமியின் மூன்று முக்கிய அடிப்படைகளை மீண்டும் புனரமைப்பு செய்யமுடியுமா? என்ற அளவிற்கு இந்த மாசடைதல் பாதிக்கப் பண்ணிவிட்டது.

இதன் இரண்டு பிரதான காரணிகளாக பெருந்தொழிற்சாலைகளும் போக்குவரத்து சாதனங்களும் தான் இந்த சூழல் மாசடைதலின் 75 வீதத்திற்கு மேல் காரணமாகின்றது. பெரும் தொழிற்சாலைகள் வெளியேற்றும் புகைமண்டலம், இரசாயன திரவக் கழிவுகள், பக்கவிளைபொருட்கள், போன்றனவும், நீண்டநேரம் பயணிக்கும் அவசியமற்ற ஆடம்பர வாகனங்கள், பாரிய கனரக வாகனங்கள் வெளியேற்றும் வாயுக்கள் புகைமண்டலத்தை மட்டுமல்லாமல் அவை நிலத்திற்கடியில் இருக்கும் மசகுப் பொருளை குறைத்துக்கொண்டே செல்கின்றன.

இப்படியான இன்னோரன்ன ஆபத்துக்களின் தர்மகர்த்தாக்கள் யாரென்று பார்ப்போமாகில் எமது வாழ்வியலின் ஆனந்தப் பரவசத்தை எட்டப்பண்ணுகின்ற "நுகர்வுப் பொருளியல்"
(Materialism)) மனோபாவமும். இதனை திட்டமிட்டு மக்களிடையே உருவாக்கிய முதலாளித்துவக் கலாச்சாரமும்தான்.

சிறிய உதாரணம், எமது உடலின் ஆரோக்கியத்தினை வலுப்படுத்த வேண்டுமானால் ஒரே ஒரு சரியான வழியும் அதேநேரம் கடினமான வழியுமான ஒன்று உடற்பயிற்சி மட்டும்தான். இதற்கு மாற்று வழியோ இல்லை குறுக்கு வழியோ கிடையாது.

இதே போன்று அன்மையில் BBC யில் வெளிவந்த விஞ்ஞானிகளின் குழுவொன்றின் அறிக்கையின் படி எங்கள் "வாழ்க்கை முறையை" மாற்றாவிட்டால் சூழல் மாசடைதலை நிறுத்தவே முடியாது. நாம் எமது எதிர்கால சந்ததிக்கு பழுதடைந்த பூமியைத்தான் விட்டுச்செல்கின்றோம். இதனை தீர்ப்பதற்கு எந்த குறுக்கு வழியோ சுகமான முறைகளோ கிடையாது. இந்த "வாழ்க்கை முறை" என்பதன் அர்த்தம் மக்களிடையே நுகர்வு கலாச்சாரம் ஏற்படுத்திய ஆடம்பர வாழ்க்கை முறைதான்.

சூழல் மாசடைதல் பற்றிய கருத்தியல் தாற்பரியம் சாதாரண மக்களிடையே தேவையான அளவு ஊக்கப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு நல்ல உதாரணம் ரொறன்ரோவில் பச்சை, நீல நிறங்களிலான "கழிவுப் பொருட்களிற்கான" பிளாஸ்ரிக் கென்டைனர்களின் உபயோகத்தின் ஆரம்பம்.

பெரும்பாலோரின் அபிப்பிராயம், ரொறொன்ரோவின் அவசர வாழ்க்கையோட்டத்தில் சனங்கள் இதுகளை சரிவர கவனிக்கப் போவதில்லை. இந்தத்திட்டம் வெற்றியடையாது என்றே எண்ணினார்கள். ஆனால் எவருமே எதிர்பாராத அளவிற்கு இது 150 வீதம் வெற்றியடைந்தது. எனவே சராசரி மக்கள் எப்பொழுதும் மாசடைதல் பற்றி விழிப்பாகவே இருக்கின்றனர் என்பது உண்மை. பாலர் பாடசாலைகளில் ஆரம்பித்து பல்கலைக்கழகங்கள் வரையில் மாசடைதல் பற்றிய விழிப்புணர்வு ஊட்டப்படுகின்றது. அதே நேரம் பாரிய தொழிற்சாலைகளாலும், கனரக வாகனங்களினாலும் சூழல் மாசடைகின்றது என்றும் கற்பிப்பார்கள. ஆனால் இவற்றுக்கெல்லாம் அடிப்படை நியதியாக இந்த பொருளாதார, வர்க்க அமைப்புமுறை என்பதை மட்டும் இலகுவாக மறந்து விடுகிறார்கள்.

ஆனால் கனடாவிலோ அல்லது ரொறன்டோவிலோ ஆட்சி மாறும் அரசியல்வாதிகளால் "பெருந்தொழிற்சாலைகளின் கழிவு சுத்திகரித்தல்" பற்றிய திட்டத்தில் மிகச்சிறிய அளவிலான மாற்றங்களை கூட கொண்டுவர முடியவில்லை. காரணம் பெருந் தொழிற்சாலைகளின் தலைவர்களை பகைத்து இலகுவாக வெற்றிகொள்ள முடியாது.

இன்னுமோர் உதாரணம், இந்தியாவில் ஒரு பாரிய நெசவாலையின் கழிவுகள் தமக்கு அண்மையிலுள்ள நன்னீர் விவசாய பிரதேசங்களை நிரந்தரமாக மாசடையப்பண்ணிவிட்டது. இந்திய காங்கிரஸ் அரசு நீதிமன்றங்களின் ஊடாக பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நட்டஈடு வழங்குமாறு நெசவாலையின் முதலாளிகளுக்கு உத்தரவிட்டது. ஆனால் இறுதியாக இந்த உத்தரவினை வாபஸ் வாங்கிவிட்டது. காரணம் "ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலையிழக்க நேரிடும்" என்று நெசவாலை நிர்வாகம் இந்திய அரசையே மிரட்டியதுதான் காரணம்.

நிதர்சனமான ஒன்று "தொழிலதிபர்களின் கைகளில்தான் அரசநிர்வாகம்"
இங்குள்ள இன்னுமொரு உண்மைப் பக்கத்தை புரிந்து கொள்ள வேண்டுமானால் "கவர்ச்சிகரமான நுகர்வுப் பொருளாதார" முறையை மாற்றாவிட்டால் வேறு வழியில்லை என்பதே இதன் அர்த்தம். இந்த நுகர்வுப் பொருளாதார முறை என்பது தங்கியிருப்பதே இன்றைய முதலாளித்துவ ஜனநாயகக் கட்டமைப்பில்தான். காரணம் மேற்கத்திய நுகர்வுப் பொருளாதாரத்தின் அடிப்படையே போட்டி வியாபாரம்தான். இந்தப் போட்டி வியாபாரத்தில் ஒரு வியாபாரி சிறிது தயங்கினாலும் அடுத்த ஆறுமாதகாலத்திற்குள் அவர் இல்லாமல் போய்விடுவார்.

ஒரு தயாரிப்பு புதிதாக உருவாகலாம், என்பது வேறு விடயம். ஏற்கனவே புழக்கத்திலிருக்கும் ஒரு பாவனைப் பொருளுக்கு புதிய வர்ணம், புதிய Labels புதிய அளவு (30 வீதம்) போனஸ், கவர்ச்சிகரமான புதிய வடிவம் என்று ஒரு போலியான புதிய வடிவத்தை ஏற்படுத்தி செயற்கையான போட்டியை உருவாக்குகின்றது இன்றைய நவீன முதலாளித்துவம். இதற்காக பாரிய தொகை பணத்தை வாரியிறைப்பதுடன் இந்த செயற்கையான முதலாளித்துவப் போட்டிக்காக பெருமளவிலான மூலப்பொருட்களை பூமியின் மேலோட்டிலிருந்து பெற்று அழித்துக்கொண்டிருக்கிறது.

இந்த செயற்கைப் போட்டிக்காக பெருந்தொழிற்சாலைகள் சூழலை மாசடையச் செய்வதில் 70 வீதத்திற்கும் அதிகமான மாசடைதலை செய்கின்றன.
இத்தகைய போட்டி வியாபாரம் இல்லாவிட்டால் யாரும் முதலாளிகளாக வளரமுடியாது.

ஒரு நாட்டின் ஏன் இந்த உலகத்தின் அரசும், அரசியலும் தங்கியிருப்பது இந்த முதலாளிகளின் பொருளாதாரத்தில்தான்.

ஆகவே இந்த முதலாளிகளின் செயற்கை போட்டிக்காக, அதாவது நடைபெறும் மூலதனப் பெருக்கத்திற்காக நடைபெறும் அனாவசியமான (Raw Materials ) மூலப்பொருட்களை அழிக்கும் விடயத்தை இன்றைய முதலாளித்துவ அரசியல் கட்டுமானத்தால் தடுக்கமுடியாது.
இதற்கு நல்ல உதாரணம், நான் வேலை பார்க்கும் நிறுவனத்தில் Skin Lotion தயாரிக்கப்படுகிறது. மூன்றே மூன்று அடிப்படை தயாரிப்புக்கள்தான் உள்ளன. எந்தவிதமான வித்தியாசமும் இல்லை. ஆனால் இவை 48 வித்தியாசமன Tubes களில் அடைக்கப்படுகின்றன. இந்த Skin Lotion களின் தயாரிப்புக்கான செலவுகளைப் போன்று 4 மடங்கு செலவு இந்த 48 வித்தியாசமான Tubes களிற்கு வேவைப்படுகிறது.

அளவுகள் வேறு, வடிவங்கள் வேறு, வண்ணங்கள் வேறு, போனஸ் வேறு.
இந்த Skin Lotion மனிதர்களுக்கு தேவைதான். ஆனால் 48 விதமான Tubes களுக்கு செலவாகும் மூலப்பொருட்கள்தான் இந்த ஜனரஞ்சக பொருளாதார கலாச்சாரத்திற்கு தேவைப்படுகின்றது. அதுவும் 6 மாதங்களிற்கு ஒரு முறை இவை எல்லாவற்றையும் மாற்ற வேண்டும். இன்றைய நவீன முதலாளிகளுக்கு இவற்றை செய்யாவிட்டால் வேறு வழியில்லை. இவற்றை தவற விட்டால் இன்னுமொரு முதலாளித்துவ முதலை இவர்களையும் விழுங்கி ஏப்பம் விட்டுவிடும்.

இவற்றை விடவும் முக்கியமான விடயம் வளர்ச்சியடைந்த நாடுகளில் இருக்கின்ற "குவியப்படுத்தப்பட்ட நகரஅமைப்பு முறை."
வேலைக்காக, ஒரு அரசாங்க கிராமிய நகர அலுவலக நிர்வாம் தொடர்பாக மக்களுக்கு தேவையான விடயங்களுக்கு தூர கிராமங்களிலிருந்து நகரங்களை நோக்கி வரவேண்டிய நிர்ப்பந்தம் இருக்கிறது. காரணம் பெருந் தொழிற்சாலைகளும் அலுவலகங்களும் ரொறொன்ரோ போன்ற நகரங்களிலிருப்பதால் தூர இடங்களிலிருந்தும் நகரத்தை நோக்கியே மக்கள் வரவேண்டி உள்ளது.

இதற்கு மாற்றாக, சூழல் மாசடைதலை தடுக்கக்கூடிய முறையானது, "பரவலாக்கப்பட்ட நகர அமைப்பு முறை".
கல்வி, அரச, நகர, நிர்வாக அலுவலகங்கள், போன்றனவற்றை இந்த "பரவலாக்கப்பட்ட நகர அமைப்பு முறை" க்குள் உள்ளுர் அரசினாலும் தேசிய அளவிலான அரசியல்வாதிகளாலும் உருவாக்கமுடியும்.
ஆனால் வேலைவாய்ப்பு என்பது தங்கியுள்ள பெரும்தொழிற்சாலைகளை இந்த "பரவலாக்கப்பட்ட நகர அமைப்பு முறை" க்குள் கொண்டுவரமுடியாது. காரணம் பெரும் தொழிற்சாலைகள் இந்த "குவியப்படுத்தப்பட்ட நகரஅமைப்பு முறை" க்குள் மட்டும்தான் பெரும் லாபத்தினையும் மூலதனத் திரட்சியினையும் பெறமுடியும்.

இரண்டாம் உலக மகா யுத்தத்தின் பின்னர் பெரும்பாலான நகரங்களை முற்றாக இழந்த ஜேர்மனியில் பரவலாக்கப்பட்ட நகர அமைப்புமுறை சில மாநிலங்களில் காணமுடியும். காரணம் மற்றைய நாடுகளுடன் பார்த்தால் ஒப்பீட்டளவில் பிற்பட்ட காலங்களில் நகரங்களை அமைத்ததினால் அவ்வாறு ஏற்பட்டன. அங்கே நாங்கள் அரச நிர்வாக, கல்வி, போன்ற விடயங்களிற்காக நீண்ட தூரப்பயணங்களை மேற்கொள்ள வேண்டிய கட்டாயமில்லாத போதிலும் பெரும்தொழிற்துறைசார் விடயங்களில் "குவியப்படுதத்தப்பட்ட நகர" முறைதான் கைக்கொள்ளப்படுகின்றது.
சிலரது வாதம், நவீன தொழில் நுட்பம் இவற்றுக்கெல்லாம் தீர்வு வைத்துவிடும் என்று. ஒரு போதும் இல்லை,
இதற்கு நல்ல உதாரணம் இந்தியா, பிறேசில் போன்று வளர்ந்து வரும் நாடுகளில் நவீன தொழில் நுட்பம், தகவல் தொழில்நுட்பம, இயந்திரவியல் தொழில்நுட்பம் போன்றவை பாரிய வளர்ச்சியை எட்டி, நாட்டின் பொருளாதாரத்தினை பெருகச்செய்த போதிலும் எதிர் வினையாக பட்டினியால் இறக்கும் மக்களின் எண்ணிக்கை மேலும் மேலும் அதிகரிக்கிறதே? ஏன்?

ஏனெனில் குறிப்பிட்ட வர்க்கத்தினருக்குத்தான் இந்த "நவீன தொழில் நுட்பம்" சேவை செய்யும் வகையில் அமைக்கப்பட்டிருக்கிறது.
இதனை சாத்தியமாக்குவது எப்படி என்று பார்த்தால் "நுகர்வுப் பொருளாதாரம், முதலாளித்துவ கட்டமைப்பு" என்பவற்றை இல்லாதொழிப்பதுதான்.
இவை பிரம்மாண்டமான ஒரு சாத்தியமல்லாத விடயத்தை கதைப்பதாக தோன்றினாலும் வேறு எந்தவிதமான குறுக்கு வழிகளோ அல்லது மந்திர தந்திரமோ எதும் கிடையாது.

சபேசன் - கனடா