fredag den 23. november 2007

பொய்கள்


பெண்ணுடன் சிநேகம் கொண்டால் காதறுந்து போகும் என்றாய்

தவறுகள் செய்தால் சாமிகண்களைக் குத்தும் என்றாய்

தின்பதற் கேதும் கேட்டால் வயிற்றுக்குக் கெடுதல் என்றாய்

ஒரு முறந் தவிட்டுக்காக வாங்கினேன் என்னை என்றாய்

எத்தனை பொய்கள் முன்பு சொன்ன நீ எதனாலின்று பொய்களை நிறுத்திக் கொண்டாய்?

தவறு மேல் தவறு செய்யும் ஆற்றல் போய் விட்டதென்றா?

எனக்கினி பொய்கள் தேவை இல்லை யென்றெண்ணினாயா?

அல்லது வயதா னோர்க்குத் தகுந்ததாய்ப் பொய்கள் சொல்லும் பொறுப்பினி அரசாங்கத்தைச் சார்ந்தாய்க் கருதினாயா?

தாய்ப்பாலை நிறுத்தல் போலத்தாய்ப் பொய்யை நிறுத்தலாமா?

உன் பிள்ளை உன்னை விட்டு வேறெங்கு பெறுவான் பொய்கள்?

ஞானக்கூத்தன்
நூல்: மீண்டும் அவர்கள்

Ingen kommentarer: